காணொளி: குஜராத்தில் திருமண நிகழ்ச்சியில் மழையாய் பொழிந்த ரூபாய் நோட்டுகள்

காணொளிக் குறிப்பு, காணொளி: திருமணத்தில் மழையாய் பொழியப்பட்ட ரூபாய் நோட்டுகள்
காணொளி: குஜராத்தில் திருமண நிகழ்ச்சியில் மழையாய் பொழிந்த ரூபாய் நோட்டுகள்

இந்தக் காட்சியில் வானிலிருந்து பறந்து வரும் காகிதத் துண்டுகள் உண்மையான ரூபாய் நோட்டுகள். குஜராத் மாநிலம் மேஹ்சனா மாவட்டம், அகோல் கிராமத்தில் ஜனவரி 31 அன்று நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகனின் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியின்போது ரூபாய் நோட்டுகளை மழையாகப் பொழிந்தனர். மணமகன், ஒரு தாலுகா பஞ்சாயத்து உறுப்பினரின் மருமகன் ஆவார்.

நிகழ்வில் கலந்துகொண்ட கிராம மக்கள் வானிலிருந்து கீழே விழும் நோட்டுகளைப் பிடிக்க கடுமையாக முயன்றனர்.

மணமகனின் குடும்பத்தினரான இந்திரேஷ்பாய் டெலிகேட் பிபிசி குஜராத்திடம் பேசுகையில், ''நான் வெறும் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவிட்டேன். பணம் தூவியவர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் செய்தார்கள். திருமண ஊர்வலத்தின்போது இவ்வாறு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் வழங்கப்பட்டன. பயன்படுத்தப்பட்ட அனைத்து நோட்டுகளும் 10 ரூபாய் மதிப்பிலானவை. இந்த நோட்டுகள் அகமதாபாத்தில் உள்ள மாணேக் சௌக் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டன'' என்று கூறினார்.

மேலும், கிராம மக்கள் அனைவரும் இந்தப் பணத்தை எடுத்துச் சென்றதாகவும் டெலிகேட் தெரிவித்தார். அந்தக் கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 10,000. இந்த நிகழ்வில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு