இந்திய அணிக்கு 'மரண பயம்' காட்டிய தனி ஒருவன்

பட மூலாதாரம், sportzpics
கிட்டத்தட்ட 350 ரன்கள் எடுத்துவிட்டோம், எதிரணியின் முதல் ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டோம், இனி தோல்விக்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்த இந்திய அணி வீரர்களுக்கு மரண பயத்தைக் காட்டியிருக்கிறார் நியூஸிலாந்தின் கடைசி நிலை ஆட்டக்காரர்.
ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு ஷர்துல் தாகூர் வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என இருந்த நிலையில், அதிரடியான ஃபார்மில் இருந்த மைக்கேல் பிரேஸ்வெல் ஸ்ட்ரைக்கில் நின்றார். முதல் பந்தே சிக்ஸ் அடிக்க நியூசிலாந்து அணி வெற்றிக்கு அருகில் நெருங்கியது.
இந்நிலையில் ஷர்துல் தாகூர் வீசிய இரண்டாவது பந்து வைட் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் மூன்றாவது பந்து யார்க்கராக போக, அதனை அடித்து ஆட முயன்ற மைக்கேல் பிரேஸ்வெல் ஆட்டமிழந்தார். இதன்மூலம் அவரது அதிரடியான ஆட்டம் முடிவுக்கு வந்ததோடு, நியூசிலாந்து அணியின் வெற்றிக் கனவும் கலைந்தது.
நியூசிலாந்துக்கு எதிரான பரபரப்பான ஒருநாள் போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி.
போட்டியில் என்ன நடந்தது?
அண்மையில் முடிவடைந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை ஒயிட் வாஷ் செய்து வென்ற இந்தியா தற்போது நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது.
டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். நிதானமான தொடக்கத்தை அளித்த இந்த இணை 60 ரன்களில் உடைந்தது. ரோஹித் ஷர்மா 34 ரன்களை எடுத்து வெளியேறினார். அதன்பிறகு விளையாட வந்த விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முறையே 8 மற்றும் 5 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன் பிறகு வந்த சூர்யகுமார் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் முறையே 31 ரன்கள் மற்றும் 28 ரன்கள் அடித்தனர். இப்படி தொடர்ந்து சீரான இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தார். 100 ரன்கள் வரை நிதானமாக ஆடிக்கொண்டிருந்த அவர், அதன் பிறகு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய அணி 349 என்ற இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவியது.

பட மூலாதாரம், sportzpics
350 என்ற கடினமான இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணி தொடக்க முதலே தடுமாற தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஃபின் ஆலன் மட்டும் 40 ரன்கள் அடிக்க மற்ற வீரர்களான சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது நியூசிலாந்து அணி.
அந்த அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என இந்திய ரசிகர்கள் எண்ணிக்கொண்டிருக்கையில் ஏழாவது பேட்ஸ்மேனாக களத்திற்குள் நுழைந்தார் மைக்கேல் பிரேஸ்வெல். தொடக்கம் முதலே அவர் அதிரடியாக விளாச, நியூசிலாந்து அணியின் ரன்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தன. அதிரடியாக விளையாடிய அவர் நியூசிலாந்து அணியை வெற்றியை நோக்கி மெல்ல அழைத்துக்கொண்டு போனார்.
இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக சுப்மான் கில் அறிவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், BCCI
தன் இருப்பை உறுதி செய்துகொள்ள இதைவிட வேறு எதையும் செய்துவிட முடியாது. முதலில் இவருக்கு ஒரு நாள் அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை என்றார்கள். ஏனென்றால் இவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்டவர் திடீரென இரட்டைச் சதமடித்துவிட்டார். இப்போது தம்மை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அதே சாதனையைச் செய்திருக்கிறார், சுப்மான் கில்!
இத்தனை வீரர்கள் நன்றாக ஆடினால், யாரைத்தான் தொடக்க நிலையில் களமிறக்குவது என்ற குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது, சுப்மன் கில்லின் அதிரடியான இரட்டைச் சதம். ஒரு காலத்தில் இரட்டைச் சதம் அடிப்பதெல்லாம் சாத்தியமில்லை என்று கருதப்பட்டு வந்தது. இப்போது அது சாதாரணமாகிவிட்டது என்பதையே சுப்மான் கில்லின் அதிரடி காட்டியிருக்கிறது.
ரோகித் ஷர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என பலரும் தடுமாறிய ஒரு போட்டியில் சுப்மன் கில்லின் நீடித்த ஆட்டம் வியந்து பார்க்கப்படுகிறது.
நியூஸிலாந்து அணிக்கு எதிராக 208 ரன்களை அடித்த கில் அதற்காக 149 பந்துகளைச் சந்தித்தார். 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் ஆகியவை அவரது ரன் குவிப்பில் அடங்கும்.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி 349 ரன்களை எடுத்தது. இரட்டைச் சதம் அடிக்கப்பட்ட ஒருநாள் போட்டி ஒன்றில் எடுக்கப்பட்ட மிகக் குறைவான ஒட்டுமொத்த ஸ்கோர் இதுதான். அந்த அளவுக்கு மற்ற வீரர்களைவிட தனித்து நின்று ஆடியிருக்கிறார் சுப்மான் கில்.

பட மூலாதாரம், BCCI
ஒப்பீட்டளவில் சுப்மான் கில் ரோஹித்தை விட மிகவும் மெதுவாகவே ஆடினார். பத்தாவது ஓவர் முடிவில் 30 பந்துகளைச் சந்தித்த அவர் 21 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார்.
13-ஆவது ஓவரில் ரோஹித் ஆட்டமிழந்த பிறகு கில்லின் ஆட்டம் மேலும் நிதானமானது. ஆனால் 14-ஆவது ஓவரில் 2 பவுண்டரிகள், 15-ஆவது ஓவரில் 3 பவுண்டரிகள் என படிப்படியாக வேகமெடுத்தார் கில். அடுத்த ஓவரில் கோலி ஆட்டமிழக்க, கில் மீண்டும் நிதானத்தை கடைப்பிடித்தார்.
19-ஓவரில் ஒரு சிக்சர் அடித்து அதிரடியைத் தொடங்கிய கில், அதன் பிறகு பல ஆட்டக்காரர்கள் வந்து போனபோதும் தனது பிடியை தளர்த்தவில்லை. அவ்வப்போது பவுண்டரிகள், மோசமான பந்துகளை சிக்சர்கள் என விரட்டினார்.
30 ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 99 ரன்களைத் தொட்ட அவர் அடுத்த பந்திலேயே சதம் அடித்தார். அதற்கு அவருக்கு மொத்தம் 87 பந்துகள் தேவைப்பட்டன.43-ஆவது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து 150 ரன்களை எட்டினார்.
48 மற்றும் 49-ஆவது ஓவர்களில் மொத்தம் 5 சிக்சர்களை அடித்து இரட்டைச் சதத்தை எட்டினார். 208 ரன்கள் அடித்த பிறகுதான் அவரை நியூஸிலாந்து வீரர்களால் வெளியேற்ற முடிந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












