கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்'

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், விதான்ஷு குமார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி
இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது.
ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து 111 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.
இந்த வெற்றி பல வகைகளில் சிறப்பு வாய்ந்தது. முதலில், நியூசிலாந்துக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் வெற்றி பெறுவது எளிதான காரியம் அல்ல. ஆனால் இந்தப் போட்டிகள் அனைத்திலும் இந்தியா அபார வெற்றி பெற்றது.
2019 உலகக்கோப்பையில் இந்தியாவை தோற்கடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்த அணி நியூசிலாந்து.
இந்தியா வருவதற்கு முன் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 பந்தயங்களில் 2-1 என்ற கணக்கில் பாபர் ஆஸமின் அணியை வீழ்த்தியது. பிளாக் கேப்ஸ்(நியூசிலாந்து) மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவிற்கு வந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில் 3-0 என்ற கணக்கில் ஏற்பட்ட தோல்வி அந்த அணியின் உத்வேகத்தை குலைத்தது.
மறுபுறம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இலங்கையை வீழ்த்தி, பின்னர் பலம் வாய்ந்த கிவி அணியையும் வெற்றி கொண்டுள்ளது.
சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வெற்றி பெற்றது இந்திய அணிக்கு புத்தெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி என்பது ஒரு பழக்கம் என்று நிபுணர்கள் அடிக்கடி கூறுவதால், இந்திய அணியும் அதனை பழக்கமாக்க முயற்சித்தது.
இந்த வெற்றி மூலம், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியில் பட்டத்தை கைப்பற்றும் நம்பிக்கையும் அணிக்கு அதிகரித்துள்ளது.
உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் வெல்ல 7-8 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். எனவே இந்த முடிவு இந்தியாவுக்கு ஒரு நல்ல பயிற்சியை தந்துள்ளது என்று இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கூறினார்.
சுப்மான் கில் அதிரடி

பட மூலாதாரம், ANI
இந்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு சுப்மான் கில், ஃபார்முக்கு வந்துதான். கடந்த 4 போட்டிகளில் 3 சதங்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். இந்த தொடரில் 3 போட்டிகளில் 360 ரன்கள் குவித்து அவர் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்த 3 போட்டிகளிலும் அவரது சராசரி 180 ஆகும். இதில் முதல் போட்டியில் அவர் எடுத்த 208 ரன்கள் நிறைய பங்களித்தது. கில் பேட்டிங்கில் அபாரமான டைமிங் தெரிகிறது. அவர் பலத்தை மட்டும் பயன்படுத்தவில்லை என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெஸன் கூறினார்.
கில் - ரோஹித் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு சிறந்த ஜோடியாக விளையாடுகிறார்கள். அவர்கள் விளையாடும் ஷாட்கள் மற்றும் பீல்டர்களுக்கு இடையே தேர்வு செய்யும் இடங்களில் இருந்து இதை பார்க்கமுடிகிறது.
சுப்மான் கில்லின் ஸ்ட்ரைக் ரேட் தொடர்ந்து சிறப்பாகி வருவது அவருக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்கும் சிறந்த விஷயம்.
இந்தத் தொடரில், அவரது ஸ்ட்ரைக் ரேட் 129. ஒருநாள் கிரிக்கெட்டில் மிகக் குறைவான வீரர்களால் மட்டுமே இதை சாதிக்க முடியும்.
ரோஹித் மீண்டும் அடித்த சதம்

பட மூலாதாரம், ANI
இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா கடந்த போட்டியில் அரைசதம் அடித்திருந்த நிலையில், இந்த போட்டியில் அவர் சதம் அடித்துள்ளார்.
இந்தூரில் ரோஹித் ஷர்மா 85 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்தார்.
ஒருநாள் போட்டிகளில் இது அவரது 30வது சதமாகும். இதன் மூலம், அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் ரிக்கி பாண்டிங்கை அவர் சமன் செய்துள்ளார்.
இந்த சதம் தனக்கு மிகவும் முக்கியமானது என்று போட்டிக்குப் பிறகு ரோஹித் கூறினார். ஏனெனில் அவர் நன்கு பேட்டிங் செய்தாலும் கூட 3 இலக்க ஸ்கோருக்காக அவர் ஏங்கிக்கொண்டிருந்தார்.
வர்ணனையின் போது, சஞ்சய் மஞ்ச்ரேகரும் ரோஹித்தை பாராட்டினார். ரோஹித் தனது இயல்பான பாணியில் வேகமாக பேட்டிங் செய்தார், இது ஒரு நல்ல அறிகுறி என்று அவர் கூறினார்.
மற்ற பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடுவார்கள் என்ற நம்பிக்கை

பட மூலாதாரம், ANI
தொடரில் கில் மற்றும் ரோஹித் ஷர்மாவின் பேட்டிங்கை நீக்கினால், வேறு எந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனும் பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை.
2 இன்னிங்ஸ்களில் 82 ரன்கள் எடுத்த ஹார்திக் பாண்டியா இந்த தொடரின் மூன்றாவது அதிக ரன் எடுத்தவர்.
விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் போன்ற பேட்ஸ்மேன்கள் இந்தத் தொடரில் சராசரியாக 22 அல்லது அதற்கும் குறைவான ரன்களையே அடித்தனர். இதை ஏமாற்றம் தரும் செயல்பாடு என்றே சொல்லலாம். ஏனெனில் இந்திய ஸ்கோரில் இருந்து ஷுபம் கில்லின் ரன்களை நீக்கவிட்டால், இந்தியா எல்லா போட்டிகளிலும் தோல்வியடைந்திருக்கும்.
கடந்த தொடரில் விராட் கோலி 2 சதங்கள் அடித்தார். அதே நேரத்தில், கிவீஸுக்கு எதிராக 3 இன்னிங்ஸ்களில் 55 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்த தொடரில் சூர்யகுமார் யாதவின் அதிகபட்ச ஸ்கோர் 31 ஆகும். இஷான் கிஷன் 3 இன்னிங்ஸ்களில் மொத்தம் 30 ரன்கள் எடுத்தார். இந்த தொடருக்கு முன்பு இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் சிறந்த ஃபார்மை வெளிப்படுத்தியதால், அவர்கள் பெரிய ஸ்கோருக்கு விரைவில் திரும்புவார்கள் என்று இந்திய அணி நம்புகிறது.
முக்கிய ஆயுதமாக மாறிய சிராஜ்

பட மூலாதாரம், ANI
இந்த தொடரில் ஷுபம் கில்லின் ரன்கள் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. அவருடன் மிக முக்கிய பங்கு வகித்த வீரர் முகமது சிராஜ் ஆவார். அவர் இரண்டு போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் அணிக்கு விக்கெட்டுகள் தேவைப்பட்ட நேரத்தில் அவர் விக்கெட்டுகளை சாய்த்தார்.
சிராஜின் நல்ல விஷயம் என்னவென்றால், டெஸ்ட், டி20, ஒருநாள் என எல்லா வடிவங்களிலும் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். அவர் தனது ஆட்டத்தில் நிறைய முன்னேற்றத்தை கொண்டுவந்துள்ளார். ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத நிலையில் அணியின் பந்துவீச்சை சிறப்பாக முன்னின்று சமாளித்துள்ளார்.
இந்திய ஆடுகள சூழ்நிலையில் அவர் மிகவும் திறம்பட பந்துவீசியதால், உலகக் கோப்பை அணியில் அவரது இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தன் மீதான நம்பிக்கையை காப்பாற்றிய குல்தீப்

பட மூலாதாரம், ANI
குல்தீப் யாதவின் சராசரி ஒரு ஓவருக்கு 5.46 ரன். தொடரில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ரோஹித் ஷர்மாவும் அவரது ஆட்டத்தில் மகிழ்ச்சியடைந்தார். மேலும் விரல் சுழற்பந்து வீச்சாளர் எவ்வளவு போட்டிகளை ஆடுகிறாரோ, அந்த அளவிற்கு அவரது பந்துவீச்சு முன்னேறும் என்றும் அவர் கூறினார்.
டீம் மேனேஜ்மென்ட்டும் இப்படித்தான் யோசிக்கிறது என்றால் அது ஒரு நல்ல அறிகுறி. ஏனென்றால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் குல்தீப்பின் பெயர்தான் முதலில் வருவதை அடிக்கடி பார்க்க முடிகிறது.
குல்தீப் யாதவ் தவிர யுஸ்வேந்திர செஹலும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு கடைசி பந்தயத்தில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தத் தொடரில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், எல்லா போட்டிகளிலும் இந்தியா கிவி அணியை முழுவதுமாக ஆட்டமிழக்கச்செய்தது. இது வலுவான பந்துவீச்சின் அடையாளமாகும்.
ஆல் ரவுண்டருக்கான தேடல்

பட மூலாதாரம், ANI
இந்த தொடரில் வாஷிங்டன் சுந்தர் ஆல்ரவுண்டராக சோதனை செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ரவீந்திர ஜடேஜா காயமடைந்த பிறகு, அக்ஸர் படேல் களம் இறங்கும் அணியில் இடம் பெற்றார். மேலும் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் வலுவாக செயல்பட்டார்.
இந்திய தேர்வாளர்களுக்கு ஒரு பேக்அப் ஆல்-ரவுண்டர் தேவை. அதனால் இந்த தொடரில் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது.
சுந்தர் ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ்களில் 21 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 12 ஆகும். மேலும் அவர் 3 இன்னிங்ஸில் பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பந்துவீச்சில் அதிக தற்காப்புடன் இருப்பது T20க்கு நன்றாக இருக்கிறது. ஆனால் ODIகளில் அது பலவீனமாக உள்ளது.
அதன்படி பார்த்தால் சுந்தருக்கு இந்த தொடர் சுமாராகவே இருந்தது. எனவே அக்ஸர் படேலுக்கு இது தூக்கமில்லாத இரவுகளை தந்திருக்காது.
மாயாஜாலம் காட்டும் ஷர்துல் தாக்கூர்

பட மூலாதாரம், ANI
அதே நேரத்தில் ஷர்துல் தாக்கூரும் ஒரு ஆல்ரவுண்டராக பார்க்கப்படுகிறார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகள் குறைவு. ஆனால் அந்த வாய்ப்புகளை அவர் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்தூரில் நடந்த கடைசிப் போட்டியில் கூட முதலில் ஹார்திக் பாண்டியாவுடன் நல்ல பார்ட்னர்ஷிப் அளித்தார். அவர் 17 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து பேட்டிங்கில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
அதன்பின் கிவி அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றிப் பாதையை வகுத்துக்கொடுத்தார்.
ஷர்துலின் சிறப்பு என்னவென்றால், அவர் எப்போதுமே விக்கெட்டுகளை வீழ்த்த விரும்புகிறார். இருப்பினும் அவரது சராசரி ஒரு ஓவருக்கு 6 ரன். இது மிகவும் அதிகம். ஆனால் அவர் தொடர்ந்து அணிக்கு ப்ரேக் த்ரூவை தருகிறார். இந்தத் தொடரில், அவர் 3 இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தாக்கூரை நன்கு பாராட்டினார். அணியில் உள்ளவர்கள் ஷர்துலை மேஜிஷியன் அதாவது மாயாஜாலம் செய்பவர் என்று அழைக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா பேட் மற்றும் பந்து இரண்டிலும் பங்களித்தார். அவர் மூன்று போட்டிகளிலும் நீண்ட ஸ்பெல்களை வீசினார். இது அணிக்கு ஒரு நல்ல செய்தி. ஏனென்றால் காயத்திற்குப் பிறகு பந்துவீச்சில் மெதுவாக தனது பொறுப்பை அவர் அதிகரித்துக் கொண்டிருந்தார்.
ஹார்திக் தனது பந்துவீச்சில் மகிழ்ச்சியடைந்தார். "காயத்திலிருந்து திரும்பிய பிறகு, எனது பந்துவீச்சு ஆக்ஷன் முன்பைக்காட்டிலும் அதிக நேராகிவிட்டது. இதன் காரணமாக என்னால் இப்போது பந்தை இருபுறமும் ஸ்விங் செய்ய முடிகிறது" என்று போட்டிக்குப் பிறகு அவர் கூறினார்.
ஒட்டுமொத்தமாக இது இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடராக நிரூபணமாகியுள்ளது. இது அணியின் மன உறுதியை மேலும் உயர்த்தியுள்ளது.
ஐசிசி தரவரிசையில் டி20யில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா, தற்போது ஒருநாள் போட்டியிலும் நம்பர் ஒன் அணியாக மாறியுள்ளது.
அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெல்வதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தை பிடிக்க விரும்பும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












