You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உணவு, குடிநீரின்றி தன்னந்தனியே 2 நாட்கள் தாக்குப்பிடித்த அதிசய குழந்தை
- எழுதியவர், பிரான்டன் டிரெனான்
- பதவி, பிபிசி
அமெரிக்காவின் லூசியானாவில் காணாமல் போன ஒரு வயது குழந்தை, பரபரப்பான நெடுஞ்சாலையோர புல்வெளியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது.
“இரண்டு நாட்கள் தன்னந்தனியாக இருந்த அக்குழந்தை தண்ணீர், உணவு இன்றி உயிர் பிழைத்திருப்பது ஓர் அதிசயம்” என, சட்ட அமலாக்க அதிகாரி கேரி கெலரி பிபிசியிடம் தெரிவித்தார்.
கடந்த 8ஆம் தேதி அக்குழந்தையின் நான்கு வயது சகோதரன் அருகிலுள்ள குளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டதிலிருந்து காவல்துறை அக்குழந்தையை தேடிவந்தது.
அதேநாளில், காவல்துறையால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை, உள்ளூர் ஊடகங்களில் புயலை கிளப்பியது. இதையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட மைல் தொலைவில் மிசிசிப்பி மாகாணத்தில் அக்குழந்தையின் தாய் ஆலியா ஜாக் கைது செய்யப்பட்டார்.
மிசிசிப்பியில் உள்ள மெரிடியனில் சிறையில் உள்ள ஆலியா ஜாக், தன் குழந்தை காணாமல் போனது குறித்து புகார் தெரிவிக்காதது தொடர்பான குற்றச்சாட்டுக்காக லூசியானாவிடம் ஒப்படைக்கப்படுகிறார்.
இதுதொடர்பாக கூடுதல் வழக்குகள் சேர்க்கப்படலாம் என, சட்ட அமலாக்க அதிகாரி கேரி கெலரி தெரிவித்தார்.
நெடுஞ்சாலையோரம் மீட்கப்பட்ட அக்குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, கடந்த புதன் கிழமை குழந்தைகள் பாதுகாப்பு சேவை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.
"உடல் முழுவதும் காயங்கள்"
“நாங்கள் அக்குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கிறோம்,” என கேரி கெலரி கூறுகிறார்.
“குழந்தையின் உடல் முழுவதும் பூச்சி கடித்த காயங்கள் இருந்தன, ஆனால் அக்குழந்தை நல்ல மனநிலையில் இருந்தது.”
குழந்தையை உயிருடன் மீட்பதில் தங்களுக்கு வானிலையும் சாதகமாக இருந்ததாக அவர் கூறுகிறார்.
லூசியானாவில் அடிக்கடி மோசமான கோடை வெயில் நிலவுவதை குறிப்பிடும் அவர், அன்றைய தினம் “பெரிதளவில் வெயில் இல்லை,” என்கிறார்.
“பெரில் சூறாவளியின் தாக்கம் காரணமாக, மேகக் கூட்டம் எஞ்சியிருந்ததால், அது குழந்தையின் உடலை குளிர்ச்சியாக வைத்திருந்திருக்கலாம். நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.” என்று அவர் கூறினார்.
கடந்த திங்கட்கிழமை, கால்கேசியு சட்ட அமலாக்க அலுவலகத்திற்கு, விண்டன் வெல்கம் மையத்திற்கு அருகேயுள்ள குளத்தில் ஒரு குழந்தையின் சடலம் கிடப்பதாக அழைப்பு வந்ததைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள், அந்த ஒரு வயது குழந்தை மீட்கப்படுவதற்கு வழிவகுத்தது.
“இந்த செய்தியை ஊடகங்களிடம் கொண்டு சென்று அதுகுறித்த தகவல்களை பெறுவதற்குத்தான் நாங்கள் முன்னுரிமை அளித்தோம்,” என கெலரி கூறுகிறார்.
“அதுதான் உண்மையில் நடந்தது.”
குழந்தையை கண்டுபிடித்தது எப்படி?
திங்கட்கிழமை மாலை, ஊடகங்களில் இந்த செய்தியை பார்த்து தன் பேரக்குழந்தைகள் குறித்து கவலை கொண்ட அவர்களுடைய பாட்டி சட்ட முகமை அலுவலகத்தை தொலைபேசியில் அழைத்தார்.
இறந்த அந்த நான்கு வயது சிறுவனுக்கு ஒரு தம்பி இருப்பதாக அவர் கூறியதையடுத்து, காணாமல் போன ஒரு வயது குழந்தையை தேடுவதற்கான அறிவிப்புகளை காவல்துறை வெளியிட்டது.
அதன்பின் சில மணிநேரம் கழித்து மிசிசிப்பியில் உள்ள ரயில் நிலையத்தில் குழந்தைகளின் தாய் ஜேக்சன் கைது செய்யப்பட்டார்.
செவ்வாய்க்கிழமை காலை, சட்ட அமலாக்க அலுவலகத்தின் கடல்சார் பிரிவு குளத்தில் படகுகள் மூலம் தேடி, அக்குழந்தையின் சகோதரரின் சடலத்தைக் கண்டுபிடித்தது.
பின்னர், அமெரிக்க நேரப்படி காலை 9 மணியளவில் டிரக் ஓட்டுநர் ஒருவர், டெக்சாஸ்-லூய்ஸியானா எல்லை அருகே, வாய்க்கால் பக்கத்தில் ‘ஒரு குழந்தை தவழ்ந்து கொண்டிருப்பதாக’ தகவல் தெரிவித்தார்.
நான்கு வயது சிறுவனின் மரணத்திற்கான காரணம் தற்போதைக்கு தெரியவில்லை என்றும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கெலரி கூறினார். பிரேத பரிசோதனை அறிக்கையும் இன்னும் வழங்கப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)