இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய இரானை கண்டிக்காத இந்தியா - என்ன சொன்னது?
ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் மீது இரான் பெரிய அளவிலான தாக்குதலை தொடுத்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி சிரியாவில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உட்பட, இஸ்ரேலின் தொடர்ச்சியான குற்றங்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இரானிய ராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவான இரான் புரட்சிகர காவல் படை கூறுகிறது.
அமெரிக்கா உள்பட பல நாடுகள் இரானை கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பதன் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலையுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் குறித்து இந்தியா கூறியது என்ன?

பட மூலாதாரம், EPA
தாக்குதலின் பின்னணி என்ன?
ஏப்ரல் 1ஆம் தேதி சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இஸ்ரேல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அந்தத் தாக்குதலில் இரானைச் சேர்ந்த உயர்மட்ட தளபதி உள்பட 7 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் பொறுப்பு என இரான் கூறியது. ஆனால், இஸ்ரேல் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ இல்லை.
இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்காவும் எச்சரித்திருந்தது. இரான் தாக்குதல் நடத்த வேண்டாம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் பேசியிருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது இரான் நள்ளிரவில் திடீர் தாக்குதலை தொடுத்தது. ‘குறிப்பிட்ட இலக்குகளை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படை (IRGC) தெரிவித்தது.
சுமார் 300 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் இரானால் ஏவப்பட்டதாகவும், சில ஏவுகணைகள் இராக் மற்றும் ஏமனில் இருந்து வந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
ஊடகங்களிடம் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “இரான் தனது மண்ணில் இருந்து இஸ்ரேலின் மீது நேரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இஸ்ரேலை நோக்கி இரான் அனுப்பும் ட்ரோன்களை நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். இது மிகவும் தீவிரமான மற்றும் அபாயகரமான ஒரு பிரச்னை” எனத் தெரிவித்தார்
இஸ்ரேல் விமானப்படை வானில் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரானால் ஏவப்பட்ட 99% ட்ரோன்கள் அல்லது ஏவுகணைகள் இஸ்ரேல் வான்வெளியை அடைவதற்கு முன்னதாகவே சுட்டு வீழ்த்தப்பட்டதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்தன.
இருந்தாலும், இந்த தாக்குதலில் தெற்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தளம் உள்பட சில இடங்கள் சேதமடைந்ததாகவும் ஒரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.

பட மூலாதாரம், ISRAELI PM'S OFFICE
இஸ்ரேல் பிரதமர் கூறியது என்ன?
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இரான் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் தயார் நிலையில் உள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
“தற்காப்பு அல்லது தாக்குதல் என்ற எந்த சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இஸ்ரேல் தேசம் பலமானது. இஸ்ரேல் பாதுகாப்புப் படை வலுவாக உள்ளது. எங்கள் நாட்டு மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் நிச்சயம் வெல்வோம்,” என நெதன்யாகு தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவளித்து வருவதைப் பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிபிஎஸ் செய்திகளின்படி, அமெரிக்கா சில ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆளில்லா விமானம் இதுவரை இஸ்ரேலை வந்தடைந்ததா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரான் இஸ்ரேலில் இருந்து 1,800 கிமீ தொலைவில் உள்ளது. அதேநேரம், ஆளில்லா விமானங்கள் எங்கு வீழ்த்தப்பட்டன என்பதையும் அமெரிக்காவும் தெரிவிக்கவில்லை.
இஸ்ரேலுக்கு உதவிய பிரான்ஸ்
இரானின் தாக்குதலுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள பிரான்ஸ் நாடு தங்களுக்கு உதவியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
“பிரான்ஸ் அரசிடம் மிகச் சிறந்த தொழில்நுட்பங்கள், போர் விமானங்கள், ரேடார்கள் உள்ளன. அவர்கள் வான்வெளி கண்காணிப்பில் சிறப்பாக பங்களிப்பதை நான் அறிவேன்” என்று இஸ்ரேலின் தலைமை ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஏற்கெனவே, பிரிட்டன், அமெரிக்கா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு உதவி வருகின்றன.
“தாக்குதல் நடத்த வேண்டாம்” என, இரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அறிவுறுத்தியிருந்தார். அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி இரான் தாக்குதல் தொடுத்துள்ள நிலையில், அதிபர் ஜோ பைடன் இதனை கடுமையாக கண்டித்துள்ளார்.
இரும்புக் கவசம் கொண்டு இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாக்கும் எனவும் இரானின் தாக்குதலுக்கு ஒருங்கிணைந்து எதிர்வினையாற்ற ஜி7 நாட்டுத் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் ஜோ பைடன் கூறினார்.
“அதிபர் பைடன் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான எங்கள் ஆதரவு உறுதியாக உள்ளது” என அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
பிரட்டன் பிரதமர் ரிஷி சுனக், இரானின் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய கூட்டாளிகளின் பாதுகாப்பிற்காக துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியா கூறியது என்ன?
இரானின் தாக்குதலை கனடா, ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளும் கண்டித்துள்ளன. இந்தியா நேரடியாக இரானை கண்டிக்கவில்லை.
இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பின்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்ரேல்- இரான் இடையிலான பகைமை குறித்து மிகுந்த கவலையடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமையின் தீவிரத்தை தணிக்கவும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கவும் வன்முறையில் உடனடியாக இருந்து பின்வாங்கி, ராஜ தந்திர பாதைக்கு திரும்ப அழைப்பு விடுக்கிறோம் என இந்தியா கூறியுள்ளது.
ஐ.நா. சபை கூறியது என்ன?
இதேபோல, இரானின் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ், தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “இரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த விரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு நான் அழைப்பு விடுக்கிறேன்” என கூறியுள்ளார்.
ஐநாவில் இஸ்ரேல் முறையீடும் இரான் விளக்கமும்
இஸ்ரேல் மீது இரானின் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்புக் கவுன்சில் அவசர கூட்டத்திற்காக ஞாயிற்றுக்கிழமை கூடும் அன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர கூட்டத்தைக் கூட்டுமாறு இஸ்ரேல் கேட்டுக் கொண்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவர் வனேசா ஃப்ரேசியருக்கு இஸ்ரேல் எழுதிய கடிதத்தில், “இந்த தாக்குதல்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்புல்லா மற்றும் ஏமனில் ஹூத்திகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் இரான் தனது சர்வதேச கடமைகளை மீறுவதாகவும், பல ஆண்டுகளாக பிராந்தியத்தின் ஸ்திரமின்மையின் சிற்பியாக இரான் இருப்பதாகவும் அந்தக் கடித்தத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
"தாக்குதல்களின் அளவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. மேலும், இது இஸ்ரேலின் இறையாண்மை, சர்வதேச சட்டம் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை அப்பட்டமாக மீறுவதாகும்" என கூறப்பட்டுள்ளது.
இரானிய ஆயுதப் படைகளின் முதன்மைப் பிரிவான இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்குமாறு இஸ்ரேல் கோரியுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கு இரான் எழுதிய கடிதத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51-வது பிரிவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி தற்காப்புக்காகவும், இஸ்ரேலின் தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்கும் விதமாகவும் தான் செயல்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



