'இந்தியா எங்களை படகில் அழைத்துச் சென்று கடலில் வீசியது'

காணொளிக் குறிப்பு, ரோஹிஞ்சா அகதிகளை திருப்பி அனுப்பிய இந்தியா
'இந்தியா எங்களை படகில் அழைத்துச் சென்று கடலில் வீசியது'

நூருல் அமின் தனது சகோதரனுடன் கடைசியாக மே 9 அன்று பேசினார். அந்த அழைப்பு சுருக்கமாக இருந்தாலும், செய்தி மனதை உலுக்குவதாக இருந்தது.

அவரது சகோதரர் கைருல் மற்றும் நான்கு உறவினர்கள் உட்பட 40 ரோஹிஞ்சா அகதிகள், இந்திய அரசால் மியான்மருக்கு நாடு கடத்தப்பட்டதாக அவர் அறிந்துகொண்டார். இவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு பயத்துடன் மியான்மரில் இருந்து தப்பி வந்தவர்கள்.

மியான்மர் 2021 இல் ஆட்சிக்கவிழ்ப்பு மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவ ஆட்சியாளர்களுக்கும் இனப் படைகள் மற்றும் எதிர்ப்பு இயக்கங்களுக்கும் இடையே ஒரு கொடூரமான உள்நாட்டுப் போரில் உள்ளது,

அமின் தனது குடும்பத்தை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு மிகவும் குறைவு.

"எனது பெற்றோரும் மற்றவர்களும் எதிர்கொள்ளும் துன்பத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை," என்று 24 வயதான அமின் டெல்லியில் பிபிசியிடம் கூறினார்.

இந்தியத் தலைநகரில் இருந்து அவர்கள் அகற்றப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, மியான்மரில் உள்ள அகதிகளைத் பிபிசியால்தொடர்பு கொள்ள முடிந்தது. பெரும்பாலானோர் நாட்டின் தென்மேற்கில் ராணுவத்திற்கு எதிராகப் போராடும் எதிர்ப்பு குழுவான பா ஹ்டூ ஆர்மி (BHA) உடன் தங்கியுள்ளனர்.

"மியான்மரில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை. இந்த இடம் முழுமையான போர்க்களமாக உள்ளது," என்று பா ஹ்டூ ஆர்மி உறுப்பினரின் தொலைபேசி மூலம் வீடியோ அழைப்பில் சோயேட் நூர் கூறினார். அவர் மரத்தாலான ஒரு தங்குமிடத்தில் ஆறு அகதிகளுடன் பேசினார்.

பிபிசி அகதிகளின் சாட்சியங்களையும், டெல்லியில் உள்ள உறவினர்களின் கூற்றையும் சேகரித்து, இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நிபுணர்களுடன் பேசி, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒன்றிணைத்தது.

அவர்கள் டெல்லியில் இருந்து வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ஒரு கடற்படைக் கப்பலில் ஏற்றப்பட்டு, இறுதியாக ஆழ்கடலில் உயிர்காக்கும் மிதவைகளுடன் விடப்பட்டனர் என அறிகிறோம். பின்னர் அவர்கள் கரைக்கு நீந்தி சென்று, இப்போது மியான்மரில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கின்றனர். முஸ்லிம் பெரும்பான்மையான இந்த ரோஹிஞ்சா சமூகம், துன்புறுத்தல்களைத் தவிர்க்க பல ஆண்டுகளாக மியான்மரில் இருந்து பெருமளவில் தப்பி வந்தது.

"எங்கள் கைகளைக் கட்டி, முகங்களை மூடி, எங்களை கைதிகளைப் போல [படகில்] கொண்டு சென்றனர். பின்னர் எங்களை கடலில் எறிந்தனர்," என்று கரைக்கு வந்த பிறகு குழுவில் இருந்த ஜான் என்ற நபர் தனது சகோதரனிடம் தொலைபேசியில் கூறினார்.

மே 6 அன்று, டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த யுஎன்ஹெச்சிஆர் அகதி அடையாள அட்டைகளை வைத்திருந்த 40 ரோஹிஞ்சா அகதிகள், உயிரி தரவு (பயோமெட்ரிக்) சேகரிக்கப்படுவதாகக் கூறி உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது ஆண்டுதோறும் செய்யவேண்டிய நடைமுறையாக இந்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதில் ரோஹிஞ்சா அகதிகள் புகைப்படம் எடுக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்படுகிறது. பல மணி நேரங்களுக்குப் பிறகு, அவர்கள் நகரில் உள்ள இந்தர்லோக் தடுப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினர்.

அவரது சகோதரர் அப்போது தன்னைஅழைத்து, தாங்கள் மியான்மருக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறி, ஒரு வழக்கறிஞரை அமர்த்தி யென்ஹெச்சிஆர்-ஐ எச்சரிக்குமாறு கேட்டுக்கொண்டார் என அமின் கூறினார்.

மே 7 அன்று, அகதிகள் டெல்லிக்கு கிழக்கே உள்ள ஹிண்டன் விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, வங்காள விரிகுடாவில் உள்ள இந்தியப் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு செல்லும் விமானங்களில் ஏற்றப்பட்டதாகக் கூறினர்.

"விமானத்தில் இருந்து இறங்கியவுடன், எங்களை அழைத்துச் செல்ல இரண்டு பேருந்துகள் வந்திருந்ததைப் பார்த்தோம்," என்று சோயேட் நூர் வீடியோ அழைப்பில் கூறினார். பேருந்துகளின் பக்கவாட்டில் "பாரதிய நௌசேனா" என்று எழுதப்பட்டிருந்ததாகவும், இது இந்திய கடற்படையைக் குறிக்கும் இந்தி சொல் என்றும் அவர் கூறினார்.

அகதிகள் நடத்தப்பட்ட விதம் இந்தியாவில் உள்ள ரோஹிஞ்சா சமூகத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு ஆண்டில், இந்திய அதிகாரிகளால் நாடு கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக ரோஹிஞ்சா சமூக உறுப்பினர்கள் கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்த உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இல்லை.

சிலர் தலைமறைவாக வாழ்கின்றனர். அமின் போன்றவர்கள் வீட்டில் தூங்குவதில்லை. அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளை வேறு இடத்திற்கு அனுப்பியுள்ளார்.

"என் இதயத்தில் இந்திய அரசாங்கம் எங்களையும் எந்த நேரத்திலும் தூக்கி கடலில் எறிந்துவிடும் என்ற பயம் மட்டுமே உள்ளது. இப்போது எங்கள் வீட்டை விட்டு வெளியேறவே பயப்படுகிறோம்," என்று அமின் கூறினார்.

"இவர்கள் இந்தியாவில் இருக்க விரும்பி இங்கு இருப்பவர்களில்லை," என்று ஐ.நா.வின் ஆண்ட்ரூஸ் கூறினார்.

"மியான்மரில் நடக்கும் பயங்கரமான வன்முறை காரணமாக இவர்கள் இங்கு உள்ளனர். அவர்கள் உண்மையில் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஓடி வந்தவர்கள்."

முழு விவரம் காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு