வாரணாசி: மத வெறுப்பு உணர்வுகளை உடைத்தெறிந்த இந்து - முஸ்லிம் மாணவர்களின் நட்பு

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா (இடது) மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நூர் பாத்திமா கான்
    • எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஒரு முஸ்லிம் பெண்ணுடன் நட்பு கொள்வது காவ்யாவுக்கு இதுவே முதல் முறை. பனாரஸ் காசி இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) `ரூம் மேட்’ ஆன பிறகு இந்த நட்பு ஏற்பட்டது.

நூர் பாத்திமா கான் மற்றும் காவ்யா விடுதியில் ஒரே உணவைச் சாப்பிடுவதால் விரைவில் நட்பாகி விட்டதாக காவ்யா கூறுகிறார். அதாவது இருவரும் அசைவம் சாப்பிடுகிறார்கள். ``உணவும், பாடல்களும் ஒன்றிப் போனால், உறவைப் பேணுவது எளிதாகிறது’’ என்கிறார் காவ்யா.

காவ்யா தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று நூர் பாத்திமா கான் அறிந்ததும், இருவருக்கும் இடையே ஒத்துப் போகுமா என்று எண்ணித் தயங்கினார். ஆரம்பத்தில் நூர் காவ்யாவுடன் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று நினைத்தார். ஆனால் காவ்யா நூரிடம் ஹிந்தியில் பேச ஆரம்பித்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டார்.

காவ்யா நீண்ட நாட்களாக வட இந்தியாவில் வசிப்பதால் ஹிந்தியும் நன்றாகப் பேச கற்றுக் கொண்டார்.

நூர் பேசுகையில், "நாங்கள் ஒரே உணவைத்தான் சாப்பிடுகிறோம், ஒரே அறையில் தங்கும்போது, ​​நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான பாடல்களைக் கேட்பதை உணர்ந்தோம். எங்களின் இசை ஆர்வம் ஒத்துப் போனது" என்றார்.

உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நூர், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவ்யா ஆகிய இருவரும் பனாரஸ் பல்கலை வளாகத்தின் விடுதியில் அறை தோழிகளாக மாறியது தற்செயலான நிகழ்வு.

ஆரம்பத்தில், காவ்யாவுக்கு கொடுக்கப்பட்ட அறை பிடிக்கவில்லை. இறுதியில் காவ்யா மற்றும் நூர் மட்டும் அறையின்றி விடுபட்டிருந்தனர். அதன் பின்னர் இருவரும் தங்களுக்குப் பிடித்த அறையைக் கண்டுபிடித்து அறை நண்பர்களாக மாறினர். இருவரும் பனாரஸ் பல்கலையில் கவின்கலைகள் (fine arts) பிரிவில் முதுகலை படித்து வருகின்றனர்.

நூரின் கோபமும் காவ்யாவின் சிரிப்பும்

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, BHU வளாகத்தில் நூர் மற்றும் காவ்யா

இருவரும் ஒரே அறையில் வசிக்க ஆரம்பித்து ஓரிரு நாட்கள் கடந்த நிலையில், காவ்யா தன் அம்மாவிடம் போனில் தமிழில் பேசிக் கொண்டிருந்தார். இந்த உரையாடலில் அவர் 'நூர்' என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். காவ்யாவின் போன் உரையாடலில் தன் பெயரைக் கேட்டதும் நூர் காது கொடுத்து உன்னிப்பாகக் கேட்டார்.

வந்து இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை, ஆனால் காவ்யா என்னைப் பற்றி அம்மாவிடம் புறம் பேசுகிறார் என்று எண்ணி கோபமடைந்த நூர் காவியாவிடம் முறையிட்டார்.

“உன் அம்மாவிடம் என் பெயரைத் திரும்பத் திரும்பக் குறிப்பிட்டது ஏன்?” என்று காவியாவிடம் நூர் கேட்டதற்கு, காவ்யா சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்து சிறிது நேரம் சிரித்துக்கொண்டே இருந்தார். இதனால் நூர் மேலும் எரிச்சலடைந்தார்.

காவ்யா சிரிப்பை அடக்கிக்கொண்டு, 'நூர்' என்றால் தமிழில் நூறு என்று அர்த்தம். இன்று நான் செலவிட்ட ஐநூறு ரூபாய் காசு, நேற்று செலவிட்ட முந்நூறு ரூபாய் காசு பற்றி அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்” என்று விளக்கினார். இம்முறை நூர் சிறிது நேரம் சிரித்துக் கொண்டே இருந்தார், பிறகு இருவரும் சேர்ந்து சிரிக்க ஆரம்பித்தார்கள்.

இந்த சிரிப்பொலிகள்தான் அவர்களின் நட்புக்குத் தொடக்கப் புள்ளி. அதன் பின்னர் அவர்கள் உறவில் அழுகை, வெறுப்பு, கோபம் என அனைத்து உணர்வுகளும் வெளிப்பட்டு நெருங்கிய நட்பு மலர்ந்தது.

அவர்களின் நட்பைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு, முகமது ஷாஹித் மற்றும் மனீஷின் விடுதி அறையைச் சுற்றி பார்ப்போமா?

அந்த அறைக்குள் நுழைந்தவுடன் பல அழகிய ஓவியங்கள் மீது பார்வை செல்கிறது. ஷாஹித்தும் மணீஷும் தங்கள் துக்கங்களையும், கோபத்தையும், மகிழ்ச்சியையும், கனவுகளையும் வண்ணங்களாகத் தீட்டி அறையை ஓவியங்களால் நிரப்பிவிட்டதாகத் தோன்றியது.

கவின்கலை மாணவர்கள் இருவரும் சிற்பங்களைச் செய்கிறார்கள். ஷாஹித்தின் தந்தை கொத்தனார், மணீஷின் தந்தை தையல் தொழிலாளி. ஷாஹித் மற்றும் மணீஷ் தங்கள் கடினமான காலங்களில் கூலித் தொழிலாளர்களாக வேலை செய்திருக்கிறார்கள், ஆனால் இப்போது அவர்கள் புதிய திறன்களை வளர்த்துக் கொண்டனர்.

குர்ஆனும் சரஸ்வதியும் ஒன்றாக சங்கமிக்கும் அறை

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, பனாரஸில் உள்ள முகமது ஷாஹித் மற்றும் மனீஷின் அறை

இருவரின் அறைகளிலும் இருந்த புத்தக அலமாரி கவனத்தை ஈர்க்கிறது. புத்தக அலமாரியின் ஒரு மூலையில் குர்ஆன் மற்றும் தொழுகைக்கான தொப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு சற்று மேலே சரஸ்வதியின் சிலை மற்றும் படம் வைக்கப்பட்டுள்ளது.

ஷாஹித் இந்த அறையில்தான் நமாஸ் செய்வதாகவும், அவரது அறை தோழர்கள் பூஜை செய்வதாகவும் கூறுகிறார். ஷாஹித் குர்ஆனையும் சரஸ்வதி தேவியின் சிலையையும் காட்டி - "ஐயா, இந்தியா இப்படித்தான் இருக்க வேண்டும், இல்லையா?" என்கிறார். இது அவரது விருப்பமா அல்லது கேள்வியா என்பதை ஷாஹித்தின் வார்த்தைகளில் இருந்து புரிந்துகொள்வது கடினம்.

காவ்யா மற்றும் நூர், ஷாஹித் மற்றும் மணீஷ், இந்த இளைஞர்களின் வாழ்க்கையில் பல கேள்விகள், பல கனவுகள் மற்றும் பல சிக்கல்கள். ஆனால் இந்த நண்பர்களின் சித்திரங்களில் பகிரப்பட்ட வண்ணங்களின் ஓட்டத்தில் உள்ள தடைகள் ஒன்றுதான்.

இந்தியாவில் மதப் பிரிவினை அரசியலால், இரண்டு அறை தோழர்களுக்கு இடையிலான நட்பின் சித்திரத்தின் மீது அவநம்பிக்கையின் மேகம் தோன்றியது, ஆனால் அவர்கள் இந்த இளம் வயதிலும் தங்கள் ஒற்றுமையின் நிறங்களை அழியவிடவில்லை.

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, வளாக கோவிலில் இருந்து வெளியே வரும் நூர் மற்றும் காவ்யா

நான் காவ்யா மற்றும் நூரிடம், ``உத்தர பிரதேசத்தில் வகுப்புவாத வெறுப்பு சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம், உங்களின் உறவு எவ்வாறு பாதிக்கப்படுகிறது?” என்று கேட்டேன்.

காவ்யா பதில் சொன்னார்: ​​"இருவரும் அதைப் பற்றி பேசுவோம், நூர் ஒரு முறை, தான் முஸ்லீம் என்பதால், பனாரஸில் அறை வாடகைக்கு எடுக்க முடியாது என்று சொன்னார், நூரின் இந்த வார்த்தைகள் என்னை மெளனமாக்கியது. நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன், அவர் தாழ்வாக உணராதபடி எப்படி பதில் சொல்வது என்று யோசித்தேன்?”

"நான் அசைவம் சாப்பிடுவதால் டெல்லியில் எனக்கும் அறை கிடைக்கவில்லை என்று நூரிடம் விளக்கினேன். தென்னிந்தியாவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான இந்துக்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள். இங்கு மத அடிப்படையில் மட்டுமின்றி உணவுப் பழக்க வழக்கங்களிலும் பாகுபாடு உள்ளது என்பதை நூருக்கு விளக்கினேன். இந்தப் பாகுபாட்டிற்கு இந்துக்களும் பலியாகின்றனர்," என்றார்.

நூரின் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தியில் காவ்யா ஒரு வலுவான நம்பிக்கையாக நிற்கிறார். ஆனால் ஷாஹித் தன் நிலையை உணர்த்த அவரது அறை தோழருடன் போராட வேண்டியிருந்தது.

ஷாஹித் கூறுகையில், "என்னுடைய கிராமம், நகரம் மற்றும் சுற்றுப்புற மக்களால் நான் ஒரு முஸ்லிமாக என்னென்ன சங்கடங்களைச் சந்தித்தேன் என்று வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் மணீஷின் சிந்தனையும் அப்படித்தான் இருந்தது. இப்போது இருக்கும் மணீஷுக்கும் நான் ஆரம்பத்தில் சந்தித்த மணீஷுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது."

ஷாஹித்தின் வார்த்தைகளுக்கு மணீஷும் உடன்படுகிறார், "ஷாஹித் என்னைச் சந்திக்காமல் இருந்திருந்தால், என்னால் நல்ல மனிதனாக மாறியிருக்க முடியாது. என் மனதில் முஸ்லிம்களை பற்றிப் பல எண்ணங்கள் இருந்தன. இதை வெறுப்பு என்றும் சொல்லலாம். முஸ்லிம்கள் ஏன் இங்கே இருக்கிறார்கள்? பாகிஸ்தான் ஏற்கெனவே அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உருவானபோது, ​​​​முஸ்லிம்களை கொன்று இந்தியாவை விட்டு விரட்டியடிக்க வேண்டும். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்த போதெல்லாம், முஸ்லிம்கள் மீது என் இதயம் வெறுப்பால் நிறைந்தது."

இந்த வெறுப்பு எங்கிருந்து வந்தது?

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, முகமது ஷாஹித் (நடுவில்) மற்றும் மணீஷ் கௌதம் (வலது) அவர்களின் அறையில்

மணீஷின் மனதில் இவ்வளவு வெறுப்பு எங்கிருந்து வந்தது? இந்தக் கேள்விக்கு மணீஷ் மற்றும் ஷாஹித் இருவரும் பதிலளித்தனர்.

ஷாஹித் கூறுகையில், ​​"மணீஷ் படிப்பதைவிட மொபைலில் முஸ்லிம்களுக்கு எதிரான உள்ளடக்கத்தை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பார். அவர் முஸ்லிம்களுடன் பழகியது இல்லை. ஆனாலும் பலமுறை அவர் என் அருகில் அமர்ந்து முஸ்லிம்களை விமர்சிக்கும் வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். பிறகு இதைப் பற்றி அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன்.”

"மணீஷ் வீட்டில் மிகவும் ஏழ்மையானவர். அவர் தலித் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பா மிகவும் கஷ்டப்பட்டு வீட்டை நடத்துகிறார். படிப்பையும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என்று அழுத்தம் கொண்ட சூழல். மணீஷிடம் பெரும்பாலும் வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லை."

​​"நான் மணீஷை சில பெயின்டிங் வேலை செய்ய உதவினேன். அதன் விளைவாக அவர் சம்பாதிக்கத் தொடங்கினார். இனி அவர் வாடகை மற்றும் உணவு செலவு பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. நான் அவரை என் வீட்டிற்கு அழைத்து வந்தேன். அவர் எங்களுடன் தங்கினார். என் குடும்பத்தைச் சந்தித்தார். முஸ்லிம்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பு, பொய்களின் அடிப்படையிலானது என்பதை அவர் படிப்படியாக உணர்ந்தார்,” என்று விவரித்தார் ஷாஹித்.

காவ்யா மற்றும் நூர் விஷயத்தில் நிலைமை வேறு. தான் ஒரு முஸ்லிம் என்பதால் பாகுபாட்டை எதிர்கொள்கிறேன் என்று நூர் உணரும் போதெல்லாம், ​​காவ்யா அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இதுகுறித்து காவ்யா கூறுகையில், ‘‘பல முறை நூர் அறையில் இருந்த பொருட்களை எடுத்து கோபத்தில் தூக்கி எறிவார். அவர் ஏன் கோபப்படுகிறார் என்று நான் அவரிடம் கேட்பேன்? அப்போது அவர் யாரோ ஒருவரின் வார்த்தைகளால் காயப்பட்டது தெரிய வரும்."

"முஸ்லிம் என்பதற்காகப் பல இடங்களில் நூர் அவதூறுகளைச் சந்திக்க நேர்ந்தது. அவர் உடைந்து அழும்போதெல்லாம் நான் தேற்றுவேன். நானும் ஒரு இந்துதான், நான் உன்னுடன் மிகவும் அன்பாக இருக்கிறேன் பார் என்பேன்," என்று விவரித்தார் காவ்யா.

கல்லூரி வளாகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை விவரிக்கும் நூர், "நான் வளாகத்தில் உள்ள கோவிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன். அப்போது சிலர் வந்து ஹிஜாப் அணிந்து கோவிலில் உட்காரக் கூடாது என்று கூறினர். ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்று நான் அவர்களிடம் சொன்னேன்."

"அப்போது ஹிஜாப் அணிந்து கோவிலுக்கு வரத் தடை என்று சுவரில் எழுதி இருந்ததைக் காட்டினார்கள். நான் அமைதியாக வெளியே வந்துவிட்டேன். ஆனால் அங்கு எனக்கு ஆதரவாக இந்து நண்பர்கள் ஏன் ஹிஜாப் அணிந்து கோவிலுக்கு வரக்கூடாது என வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து நண்பர்கள் என்னை ஆதரித்தது எனக்கு ஆறுதலாக இருந்தது."

பரஸ்பர உறவுகளில் பிரிவினை அரசியல் பதற்றத்தின் தாக்கம்

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, நூர் பாத்திமா கான் மற்றும் காவ்யா

நாட்டில் வகுப்புவாத பதற்றம் ஏற்படும் போதெல்லாம், நூர் மற்றும் காவ்யாவின் உறவில் பாதிப்பு ஏற்படுமா?

காவ்யா கூறுகையில், ​​“எங்கள் இருவரின் வீட்டிலிருந்தும் அழைப்புகள் வரும். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். வெளியே செல்ல வேண்டாம். நூரை கவனித்துக் கொள்ளுங்கள் என்று என் அம்மா கூறுவார். அவளை உன்னுடனே வைத்து பார்த்துக் கொள் என்பார்."

"நூரின் அம்மாவும் வெளியே போகாதே என்று சொல்வார். எங்களின் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் பயப்படுகிறார்கள். பெண்களின் சுதந்திரத்திற்கு இந்த பயம் மிகப்பெரிய தடையாக இருக்கிறது. மதச்சார்பற்ற மனப்பான்மை உள்ளவர்கள் பெரிய அளவில் முன்னுக்கு வரும்போதுதான் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழல் உருவாகும்," என்றார் காவ்யா தெளிவாக.

காவ்யா மற்றும் நூர் பாத்திமா கானின் நட்பு கடினமான காலங்களில் இன்னும் ஆழமாகத் தொடர்கிறது. இருவருக்குமே சைக்கிள் ஓட்டத் தெரியாது ஆனால் ஒருவருக்கு ஒருவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்தனர். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்காமல் இருந்திருந்தால், மனித நேயத்தின் உணர்வை சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்று இருவரும் நினைக்கிறார்கள். நூர் மதப் பாகுபாட்டிற்கு ஆளாகும்போது, ​​காவ்யா அவரைக் கவனித்துக் கொள்கிறார், காவ்யா விரக்தியில் மூழ்கும்போது, ​​நூர் அவரைக் கவனித்துக் கொள்கிறார்.

ஆனால் பிரச்னைகள் தீர்ந்துவிட்டதாக இல்லை.

ஷாஹித் கூறும்போது, ​​“நான் காசிபூர் மாவட்டத்தில் உள்ள கஹ்மர் கிராமத்தைச் சேர்ந்தவன். அது தாக்கூர் ஆதிக்கம் நிறைந்த கிராமம், இங்கு நூற்றுக்கணக்கானோர் ராணுவத்தில் உள்ளனர். ஒரு நாள் நாங்கள் எங்கள் இந்து நண்பர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது ராணுவத்தில் இருந்த ஒரு நண்பரின் தந்தை தன் மகன் என்னுடன் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து கோபப்பட்டு என்னை நோக்கி கை காட்டி தன் மகனிடம் - நீ இவனுடன் என்ன செய்கிறாய்? இவர்களெல்லாம் எதையும் செய்து பிழைப்பார்கள். பஞ்சர் கடைகூட வைத்துப் பிழைப்பார்கள். இங்கிருந்து கிளம்பு என்று கத்தினார்."

``இந்தச் சம்பவம் முழுவதையும் என் தந்தையிடம் கூறும்போது, ​​நீ படித்து நல்ல உத்தியோகத்திற்குச் சென்று பிறகு பதில் சொல், அவமானத்தை கடவுளிடம் விட்டுவிடு என்று கூறினார். அன்றிலிருந்து நான் நன்றாகப் படிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லாம் நன்றாகச் செல்கிறது,'' என்றார் ஷாஹித்.

மேலும் பேசிய அவர் "சார், நீங்கள் ஒரு முஸ்லிமாக இருந்தால், அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவர்களின் ஆக்கிரமிப்புக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என்ற புரிதல் முஸ்லிம்களிடையே ஏற்பட்டுள்ளது. மென்மையாக இருங்கள், மீதமுள்ள நீதி விஷயங்களை கடவுளிடம் விட்டுவிடுங்கள்,” என்றார்.

புரிதலா அல்லது ஆழ்ந்த அவநம்பிக்கையா?

மதத்தின் சுவர் இடிந்து விழுந்து நட்பு மலர்ந்த தருணம்!
படக்குறிப்பு, முகமது ஷாஹித் மற்றும் மணீஷ்

ஷாஹித் மிகவும் பக்குவத்துடன் இவ்வளவு இளம் வயதில் இதுபோன்ற புத்திசாலித்தனமான விஷயங்களைப் பேசுகிறார்.

பனாரஸ் இந்து பல்கலையின் ஹிந்தி இலக்கியப் பேராசிரியர் ஆஷிஷ் திரிபாதி, இது நம்பிக்கையின்மையில் இருந்து பிறந்த ஞானம் என்றும், இதனால் நாம் நிம்மதி அடையாமல் கவலைப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

பேராசிரியர் ஆஷிஷ் திரிபாதி கூறுகையில், "வட இந்திய இந்துக்கள் தங்கள் மதத்தைப் பற்றி பகிரங்கமாக ஆக்ரோஷம் ஆகிவிட்டனர், அதாவது அவர்கள் மத அடையாளங்களை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இந்துக்களின் இந்தப் பொதுவான பார்வை அவர்களின் மனநிலையையும் மாற்றிவிட்டது, இது வெளிப்புற மாற்றம் என்று முன்பு தோன்றியது, ஆனால் படிப்படியாக அவர்கள் மத்தியில் உள் மாற்றமும் நடைபெறுகிறது,” என்றார்.

பேராசிரியர் திரிபாதி, "மறுபுறம், வட இந்திய முஸ்லிம்கள் தங்கள் சொந்த ஆளுமைத் திறனில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். முஸ்லிம் என உணர்வு மனதில் இருந்தால் போதும், வெளிப்படையாகக் காட்ட வேண்டியதில்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர். அதாவது கடந்த 150 ஆண்டுகளில் சுதந்திர இயக்கம் மற்றும் நவீனமயமாதலின் தாக்கத்தால் முஸ்லிம்கள் மத்தியில் நவீன சிவில் சமூகம் ஓரளவு குறைந்து வருகிறது. அதாவது, இந்துக்கள் பகிரங்கமாக இந்துக்களாகவும், முஸ்லிம்கள் மனதளவில் முஸ்லீம்களாகவும் மாறிவிட்டனர். இப்போது அந்த பாரம்பரிய உறவு இரு சமூகத்தினரிடையே தெரியவில்லை. இந்த மாற்றம் அரசியலில் மட்டுமல்ல சமூகத்திலும் ஏற்பட்டுள்ளது. ஷாஹித்தின் ஞானம் இந்த உள் மாற்றத்தின் ஒரு பகுதியாகும்."

"முன்பு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அடிக்கடி கலவரங்கள் நடந்தன. வெளிப்படையாக, இது அவநம்பிக்கை மற்றும் வெறுப்பு காரணமாக இருந்தது. ஆனாலும் அதில் ஒருவித தன்னியல்பு இருந்தது. இரு சமூகங்களைச் சேர்ந்த ஆக்ரோஷமான அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இப்போது முஸ்லிம்கள் மத்தியில் கோபத்தின் தன்னிச்சையான எதிர்வினை முடிவுக்கு வந்துவிட்டது. இப்போது அதற்குப் பதிலாக ஒரு திட்டமிட்ட மௌனம் பதிலாக வருகிறது. இரண்டாவது பெரிய மதத்தைச் சேர்ந்த மக்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய மதத்தினர் (இந்துக்கள்) மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்,” என்றார் திரிபாதி.

ஆனால் இத்தனைக்கும் மத்தியில் நூர்-காவ்யா, ஷாஹித்-மனிஷ் ஆகியோரின் நட்பைப் பார்க்கும்போது, ​​நிம்மதியான சகவாழ்வுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாகவே தோன்றுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)