மூன்றே மாதங்களில் சரிந்ததா செல்வாக்கு? டிரம்ப்க்கு எதிரான போராட்டங்கள் ஏன்?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்கள் திரண்டு பெரியளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனவரி மாதம் டிரம்ப் அமெரிக்க அதிபரானதிலிருந்து அவருக்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய போராட்டம் இது.
"ஹேண்ட்ஸ் ஆஃப்" (Hands Off) எனும் பெயரில், அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் 1,200 இடங்களில் பேரணிகள் நடத்த போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். பாஸ்டன், சிகாகோ, லாஸ் ஏஞ்சலிஸ், நியூ யார்க் மற்றும் வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சனிக்கிழமை ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமூகம் முதல் பொருளாதார பிரச்னைகள் வரை டிரம்ப் நிர்வாகத்தின் நோக்கங்களில் குறைகள் உள்ளதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
உலகளவில் பல்வேறு நாடுகளில் டிரம்ப் புதிய இறக்குமதி வரியை அறிவித்த நிலையில், அமெரிக்காவை தாண்டியும் லண்டன், பாரிஸ், பெர்லின் போன்ற நகரங்களிலும் மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஸ்டனில் போராட்டங்களில் ஈடுபட்ட சில போராட்டக்காரர்கள் கூறுகையில், அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் மீதான குடிவரவு அதிகாரிகளின் சோதனைகளைத் தொடர்ந்து நிகழ்ந்த கைதுகள் மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகளே தங்களை போராட தூண்டியதாக தெரிவித்தனர்.
சில கருத்துக்கணிப்புகள் அதிபர் டிரம்புக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவு சிறிது குறைந்துள்ளதை காட்டுகின்றன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு






