You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது?
- எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது.
ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது.
விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தற்போது எந்த சந்தேகமும் இன்றி எங்களின் உபகரணங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ளது என்பதை எங்களால் உறுதியாச் சொல்ல முடியும். நாங்கள் அவற்றிக்கு தகவல் கொடுக்கிறோம்,” என திட்டத்தின் இயக்குநர் டிம் கிரெய்ன் அறிவித்தார்.
இந்த செய்தியைக் கேட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து, உற்சாகமடைந்தனர்.
விண்வெளியின் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், பொதுவாக, அமெரிக்க விண்வெளித் திட்டத்திற்கும் இந்த வெற்றி முக்கியமானது.D
இன்டுயட்டிவ் மெஷின்ஸ் நிலவின் மேற்பரப்புக்குச் சென்றதன் மூலம், அமெரிக்காவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலவிற்கு செல்லாத குறையை, இன்டுய்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கடைசியாக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 1972இல் தங்களின் விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது.
கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு
நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தனியார் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க மீண்டும் நிலவுக்கு சென்றுவிட்டது. இன்று மனிதகுல வரலாற்றில், முதன்முறையாக ஒரு அமெரிக்க வணிக நிறுவனம், நிலாவுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இது நாசாவின் வணிக கூட்டின் சக்தியைக் காட்டுகிறது,” என்றார் பில் நெல்சன்.
தரையிறங்கும் பணி தொடங்குவதற்கு முன்பே, அந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டாளர்கள் மிக மோசமான தொழில்நுட்பச் சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது.
விண்கலத்தில் உயரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் லேசர்கள் திடீரென சரியாக வேலை செய்யவில்லை.
ஆனால், நல்வாய்ப்பாக, நாசாவிடமிருந்து வாங்கிய சில லேசர்கள் அந்த விண்கலத்தில் இருந்ததால், பொறியாளர்கள் அவற்றை கணினியில் இணைத்து செயல்பட வைத்தனர்.
ஒடிஸியஸ் விண்கலம் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.23 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. முதலில் நிலவில் தரையிறங்கிய ரோபோக்களிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. பின், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அந்த ரோபோக்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது.
இந்த தொழில்நுட்பச் சிக்கல், தரையிறக்கம் தொடர்பாக சில கவலைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மணி நேரத்திற்குள் அவை சரி செய்யப்பட்டு, நிலவில் இருந்து படங்கள் உள்ளிட்ட தரவுகளை அவை அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
"நிலாவில் உள்ள பனியை பயன்படுத்தலாம்"
தரையிறங்கிய இடம், மலாபெர்ட்(Malapert) எனப்படும் சுமார் 5 கிமீ உயரமுள்ள மலை போன்ற பகுதிக்கு அடுத்ததாக உள்ள ஒரு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பாகும். இது நிலவின் இதுவரை தரையிறங்காத தென்துருவப்பகுதியாகும், அதாவது நிலவில் இருந்து 80 டிகிரி தெற்குப் புறம்.
இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் இதுவும் ஒன்று.
இந்தப் பகுதியில் சூரிய ஒளியைக் காணாத சில பள்ளங்கள் உள்ளன. அவை நிரந்தரமாக நிழலில் உள்ள பகுதிகள். மேலும், இந்தப் பகுதியில் உறைந்த நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“நிலவில் உள்ள பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நிலவின் மேற்பரப்பில் உள்ள பனியை நம்மால் உண்மையில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், அதுவே நாம் இந்தப் பயணத்தில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்,” என்றார் நாசாவின் கிரக அறிவியல் இயக்குனர் லோரி கிளேஸ்.
“நாம் அந்த பனியை தண்ணீராக மாற்றலாம். அவை குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய குடிநீராக இருக்கும். மேலும், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அவற்றை எரிபொருளாகவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும் பயன்படுத்த முடியும். எனவே, இது உண்மையில் மனித ஆய்வுக்கு உதவும்,”என்றார்.
நிலாவில் உள்ள தூசியால் விஞ்ஞானிகள் கவலை
ஒடிசியஸ் விண்கலத்தில் நாசாவின் ஆறு பேலோடுகள் (உபகரணத் தொகுப்புகள்) உள்ளன.
இவற்றில் முக்கியமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியது நிலாவில் உள்ள தூசி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றித்தான். ஏனென்றால், அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி வீரர்கள் இதனை ஒரு கடுமையான பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இந்த தூசியால், விண்வெளியில் செலுத்தப்படும் உபகரணங்களில், அரிப்பு மற்றும் அடைப்புகள் ஏற்படுகின்றன.
தரையிறங்கிக்கலன் உள்ளிட்டவை மீது எவ்வாறு தூசி படிகிறது என்பதை நாசாவின் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள்.
விண்கலத்தில் உள்ள ஆறு வணிக பேலோடுகளில் எம்ப்ரி-ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தின் (Embry-Riddle Aeronautical University) மாணவர் கேமரா அமைப்பு உள்ளது, இது நிலவின் மேற்பரப்பில் இருந்து 30 மீ உயரத்தில் இருக்கும்போதே ஒடிஸியஸிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
ரோபோ தன்னைத்தானே கீழே வைத்து செல்ஃபி படங்களை எடுக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க கலைஞரான ஜெஃப் கூன்ஸ், ஒரு மாதத்தில் நிலவின் வெவ்வேறு கட்டங்களைக் குறிக்க 125 சிறிய துருப்பிடிக்காத எஃகு பந்துகளைக் கொண்ட ஒரு பெட்டியை தரையிறங்கிக்கலனின் பக்கத்தில் இணைத்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)