நாம் குடிக்கும் தண்ணீரில் பிளாஸ்டிக் இருப்பது எவ்வளவு ஆபத்தானது?

பட மூலாதாரம், Getty Images
மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று சுத்தமான குடிநீர்.
நாம் பயணம் செய்யும்போது அல்லது சுத்தமான தண்ணீர் கிடைக்காத இடத்தில் இருக்கும்போதெல்லாம், பாட்டில் தண்ணீரை அங்கேயே வாங்க முயற்சிக்கிறோம்.
அந்த தண்ணீரில் அழுக்கு இருக்காது என்று நம்புகிறோம். ஆனால் அந்த தண்ணீருக்குள் நுண்ணிய பிளாஸ்டிக் அதாவது பிளாஸ்டிக்கின் எண்ணற்ற நுண்ணிய துகள்கள் இருக்கலாம்.
பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ்கள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
ஒரு லிட்டர் தண்ணீரில் சுமார் 2.5 லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருக்கலாம் என்று கண்டறிந்தனர்.
இந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று பிராண்ட் தண்ணீர் பாட்டில்களை ஆய்வு செய்தபோது, ஒரு லிட்டரில் ஒரு லட்சத்து பத்தாயிரம் முதல் நான்கு லட்சம் நானோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தண்ணீரில் கரைந்த பெரும்பாலான பிளாஸ்டிக் துகள்கள் ஒரு பாட்டிலில் இருந்து வந்தவை.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவிலும் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபட்டுள்ள தண்ணீர்
நாம் இருக்கும் இடத்தைச் சுற்றிப் பார்த்தால் பல பிளாஸ்டிக் பொருட்கள் தெரியும்.
அத்தகைய பொருட்களை நுண்ணிய துண்டுகளை மிகச் சிறிய அளவில் வெட்டினால், அதுவே மைக்ரோபிளாஸ்டிக்ஸ் என அழைக்கப்படுகின்றது.
பொதுவாக ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவில் உள்ள பிளாஸ்டிக் துண்டுகள் மைக்ரோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன. அதை விட சிறியதாக இருக்கும் பிளாஸ்டிக்கை நானோ அளவில் மட்டுமே அளவிட முடியும். அவை நானோ பிளாஸ்டிக் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டு வகைகளும் கண்ணுக்கு எளிதில் புலப்படுவதில்லை. ஆனால், அவை உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ளன. அது ஆறுகளின் நீராகவோ, கடலின் அடிப்பகுதியாகவோ அல்லது அண்டார்டிக்கில் உறைந்த பனியாகவோ இருக்கலாம்.
ஐஐடி பாட்னா நடத்திய ஆய்வில் , மழைநீரிலும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல், இந்தியாவில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் கூட மைக்ரோபிளாஸ்டிக்ஸ் காணப்படுவதாக மற்றொரு ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் அழுக்கு நீர், நகர்ப்புறங்களில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் கழிவுகள் என பல காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மைக்ரோபிளாஸ்டிக்ஸின் ஆபத்துகள் என்ன?
ஒரு பிரச்னை என்னவென்றால், குடிநீரில் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருக்கலாம். ஆனால், அதில் முக்கியமான சிக்கல் என்னவென்றால், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் மனித உடலில் என்ன விளைவை ஏற்படுத்துகிறது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
2019 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ஒரு மதிப்பாய்வை நடத்தியது. அதில், மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மனித உடலில் நுழைந்தால் என்ன ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தது.
ஆனால், வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி காரணமாக, உலக சுகாதார மையம், எந்த முடிவுக்கும் வரவில்லை. இன்னும் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்று மட்டும் வேண்டுகோள் விடுத்து.
டெல்லியில் உள்ள புஷ்பாஞ்சலி மருத்துவ மையத்தின் மூத்த மருத்துவர் மணீஷ் சிங், பிபிசி செய்தியாளர் ஆதர்ஷ் ரத்தோரிடம், மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் பற்றி அதிகம் அறியப்படவில்லை, எனவே அந்த விஷயத்தில் இன்னும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது எனக் கூறினார்.
“மைக்ரோபிளாஸ்டிக்கின் ஆபத்துகள் குறித்து வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அது நமது நாளமில்லா சுரப்பிகளின் (ஹார்மோன் உற்பத்தி செய்யும் சுரப்பிகள்) செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் சில ஆராய்ச்சிகள் உள்ளன. மைக்ரோபிளாஸ்டிக் மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எதிர்காலத்தில் அறியப்படலாம், எனவே இப்போதிலிருந்தே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது," என்றார் மணீஷ் சிங்.

பட மூலாதாரம், Getty Images
எல்லா இடங்களிலும் மைக்ரோ பிளாஸ்டிக்
தண்ணீரைத் தவிர, மைக்ரோ பிளாஸ்டிக்குகள் விவசாயம் செய்யும் நிலத்திலும் ஏராளமாகக் காணப்படுகின்றன.
2022 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது . இதன்படி, பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படும் சாக்கடைக் கழிவுகளில் மைக்ரோபிளாஸ்டிக் கலந்ததால், 80 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் விவசாய நிலம் மாசுபட்டிருந்தது.
அந்த மண்ணில் மைக்ரோபிளாஸ்டிக் தவிர, சில இரசாயனங்களும் இருந்தன, அவை ஒருபோதும் மக்காது, அதாவது அதே நிலையில் இருக்கும்.
அதே நேரத்தில், பிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகம்(Cardiff University), ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் பயிரிடப்பட்ட நிலங்களில் டிரில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாகவும், அவை ஒவ்வொரு பிடி உணவின் மூலமாக மக்களின் உடலில் கலப்பதாகவும் தங்களின் ஆய்வில் கண்டறிந்தனர்.
பிபிசி ஃபியூச்சரில் எழுதியுள்ள இசபெல் ஜெரெட்சன், மற்ற பொருட்களைவிட, தாவரங்களின் அதிக மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதாக எழுதியுள்ளார்.
உண்மையில், வேர் காய்கறிகளில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் அதிகம் இருப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் முள்ளங்கி மற்றும் கேரட் போன்ற காய்கறிகள் அதிகமாக இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
மைக்ரோ பிளாஸ்டிக்கை எவ்வாறு தவிர்ப்பது?
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் கழிவுகளை அகற்றுவதற்காக முறையான அமைப்பு இல்லாததுதான் பிரச்னை என்கிறார் டாக்டர் மணீஷ் சிங். இதன் காரணமாக, மைக்ரோபிளாஸ்டிக்கள், ஆறுகள் மற்றும் விவசாய நிலங்களை சென்றடைகின்றன.
“எண்ணற்ற உணவுப் பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டுள்ளன. அப்போது பிரச்னை என்னவென்றால், மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
பிளாஸ்டிக் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க, இந்திய அரசு ஜூலை 1, 2022 முதல் ஒருமுறை பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. உலகின் பல நாடுகள் ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
பிரிட்டனின் பிளைமவுத் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மக்கும் தன்மை கொண்டவை என பெயரிடப்பட்ட பைகள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் என்று கண்டறிந்துள்ளனர்.
அதுமட்டுமின்றி சிறு சிறு துண்டுகளாக உடைந்து அவை மாசுபடுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர்.
உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேருவதைத் தடுக்க, கண்ணாடி பாட்டில்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது.
ஆனால் இசபெல் ஜெரெட்சன் எழுதுகையில், "கண்ணாடி பாட்டில்களை பல முறை மறுசுழற்சி செய்யலாம் என்றாலும், சிலிக்கா (மணல்) கண்ணாடி தயாரிக்கப் பயன்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதன் செயல்பாட்டில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது," என எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மாசுபாட்டை எப்படி குறைக்க முடியும்?
பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட கட்டுரையின்படி, மைக்ரோபிளாஸ்டிக்கால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க வாய்ப்புள்ளது.
பிளாஸ்டிக்கை மக்கச் செய்வதற்கு உதவும் பூஞ்சை மற்றும் பாக்டீரியாவை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதற்கான கொள்கைகளை அரசாங்கம் ஒருபுறம் உருவாக்குவதும், மறுபுறம் மக்கள் தங்கள் சொந்த மட்டத்தில் பிளாஸ்டிக்கை சார்ந்திருப்பதைக் குறைப்பதும் இந்த நடவடிக்கைகளை விட சிறந்தது என்கிறார் டாக்டர் மணீஷ் சிங்.
"உதாரணமாக, சணல் அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்துங்கள். துணிகளை வாங்கும் போது கூட செயற்கை இழை ஆடைகளுக்கு பதிலாக பருத்தி ஆடைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்," என்றார் மணிஷ் சிங்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












