You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சூடானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் தப்பிச்செல்ல குவிவதால் தத்தளிக்கும் துறைமுக நகரம்
- எழுதியவர், லிஸ் டோவ்சே
- பதவி, சர்வேதேச தலைமைச் செய்தியாளர்
(சூடான் நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போர்ட் சூடான் என்ற துறைமுக நகரம், அந்நாட்டிலிருந்து தப்பிச் செல்ல முயலும் பொதுமக்களின் முக்கிய வழித்தடமாக மாறியுள்ளது. அங்கிருந்து சௌதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லும் மீட்புக் குழுவுடன் பிபிசியின் சர்வதேச தலைமைச் செய்தியாளர் லிஸ் டோவ்சே இணைந்து பயணித்தார்.)
சூடான் நாட்டு துறைமுகத்துக்கு அந்த மயான இரவில் சவுதி அரேபியாவின் எச்எம்எஸ் அல் திராயா கப்பல் வந்து மீட்புப் பணிகளை உடனடியாக தொடங்கிய பின், அந்த இடம் அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பிய பொதுமக்களை மீட்கும் ஒரு மிக முக்கிய தலமாகவும், மனிதநேய மையமாகவும் மாறியது. நள்ளிரவு 2 மணிக்கு போர்ட் சூடான் நகருக்கு வெளியில் மேலும் இரண்டு கப்பல்கள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இந்த கப்பல்கள் தங்களது மீட்புப் பணிகளைத் தொடங்கத் தயாராக இருந்தன.
இந்த மீட்பு நடவடிக்கையின் மூலம் மிகுந்த நிம்மதியடைந்ததாகவும், ஆனால் சூடான் நாட்டில் நடக்கும் கொடூரங்களைக் கண்டு மிகுந்த சோகமடைந்ததாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹசான் ஃபராஸ் என்பவர் தெரிவித்தார்.
போர்க்களமாகக் காட்சியளிக்கும் சூடான் நாட்டுக்குள் சென்று பார்க்கும் அனுமதி ஒரு சில வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு மட்டும் கிடைத்தது. சவுதி அரேபியா துறைமுக நகரமான ஜெட்டாவிலிருந்து அல் திராயா கப்பலில் பத்து மணிநேர பயணத்துக்குப் பின் ஒரு இழுவைப் படகு மூலம் இந்த கரைப்பகுதியை அடைந்தோம்.
அங்கே பாஸ்போர்ட்டுகளுடன் நீண்ட வரிசையில் இளம் பணியாளர்கள் நின்றிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவர்கள். இரண்டு வார காலம் தாக்குதல் கொடுமைகளைக் கடந்து அந்த துறைமுகத்துக்கு வந்து மூன்று நாட்களாக காத்துக்கொண்டிருந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இது போன்ற மோசமான நிலையை மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என சூடானிலிருந்து தப்பிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டின் ஹசான் ஃபராஸ் கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நபர், தான் பவுண்டரி ஒன்றில் வேலை பார்த்ததாகவும், ஏராளமான குண்டுவெடிப்புகள் மற்றும் துப்பாக்கி தாக்குதல்களைக் கடந்து வந்து, ஏதாவது உதவி கிடைக்குமா என கடலையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.
அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ராணுவ ஜெனரல் ஜென் அப்தல் ஃபட்டா அல்- புர்ஹான் மற்றும் ஆர்.எஸ்.எஃப். எனப்படும் துணை ராணுவப் படையின் ஜெனரல் ஹெமெத்தி ஆகியோருக்கு இடையே நிலவும் மோதலின் வெளிப்பாடாகவே சூடானில் கடந்த சில வாரங்களாக இது போன்ற தாக்குதல்கள் நடந்துவருகின்றன.
இந்த தாக்குதலின் போது போர்ட் சூடான், தலைநகர் கார்ட்டூம் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து தப்பிச் செல்ல முயலும் பொதுமக்களுக்கு இந்த துறைமுக நகரம் மிகவும் நிம்மதியளிக்கும் இடமாக மாறியுள்ளது என என்னுடன் பணியாற்றும் மற்றொரு சூடான் நாட்டுப் பணியாளரான முகனது ஹாஷிம் தெரிவிக்கிறார்.
சூடான் தாக்குதல் காரணமாக தப்பி வந்த பொதுமக்கள் அப்போது மோசமான தெருக்களில் தூங்கிக்கொண்டிருந்தனர். உள்ளூரில் இருக்கும் விடுதிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் நிரம்பி வழிந்தன. தாக்குதல் ஆபத்திலிருந்து ஒவ்வொரு நாடும் தங்களது குடிமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அவசர அலுவலகங்களைத் திறந்து அதிவிரைவாக மேற்கொண்டு வந்தன.
போர்ட் சூடான் நகரில் யேமன், சிரியா மற்றும் அங்கிருந்து தப்பிச் செல்ல விரும்பிய சூடான் நாட்டு மக்கள் அதிக எண்ணிக்கையில் பதற்றத்துடன் குழுமியிருந்தனர்.
மேலும், இந்நகரில் யேமன் நாட்டைச் சேர்ந்த சுமார் 3,000 மாணவர்கள் வாரக்கணக்கில் சிக்கித் தவித்துவந்தனர். சவுதி அரேபிய அரசு யேமன் நாட்டவர்களை மீட்பதில் அக்கறை காட்டினாலும், பெரும் எண்ணிக்கையிலான மக்களை மீட்க அந்நாட்டு அரசு தயக்கம் காட்டுகிறது என அவர்களுக்கு உதவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சவுதி அரேபியாவுக்கு வரும் பெரும்பாலான மக்கள் அங்கே சிறிது நாட்கள் விடுதிகளில் தங்கியிருக்க அந்நாட்டு அதிகாரிகள் உதவுகின்றனர். ஆனால், அந்த மக்களின் சொந்த நாட்டு அரசுகள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களுக்கான விடுதிக் கட்டணங்களை செலுத்திவிட்டு, அவர்களை அந்தந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஜெட்டாவிலிருந்து கிளம்பிய போது, என்னுடன் பணியாற்றிய முகமது ஹஷீமின் நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது இரண்டு குழந்தைகளுடன் செங்கடலில் 18 மணிநேரப் பயணத்தில் சவுதி அரேபியாவுக்கு தப்பிச் சென்றதைப் பார்த்தபின், போர்ட் சூடானில் தமது உறவினர்கள் யாராவது இருக்கின்றனரா என சல்லடை போட்டு அவர் தேடிவிட்டார்.
வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகளை வைத்திருக்கும் சூடான் நாட்டு மக்கள் அங்கிருந்து தப்பிச் செல்வது சோகத்திலும் ஒரு நிம்மதியான அனுபவமாகவே இருந்தது.
கார்ட்டூமில் உள்ள ஸ்போர்ட் சிட்டியில் ஏப்ரல் 15-ம் தேதி தாக்குதல் தொடங்கிய நிலையில், அங்கே வசித்து வந்த ரஷா என்ற பெண், தூங்கும் குழந்தையை தோளில் சுமந்தபடியே எங்கள் குடும்பம் சூடானில் இருந்து வெளியேற உதவுங்கள் எனக் கதறினார். சூடானைக் காப்பற்ற உலக நாடுகளிடம் பேசும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
அழகாக அமெரிக்க ஆங்கிலம் பேசும் அவரது எட்டு வயது மகள் லீன், அவர்களது வீட்டிற்குள் ஆயுதமேந்திய தாக்குதல்தாரிகள் புகுந்த போது ஏற்பட்ட அனுபவத்தை அச்சத்துடன் விவரித்தார். தாக்குதல்தாரிகள் உட்புகுந்த போது, அந்த வீட்டில் இருந்த பத்து பேரும் மறைவான இடங்களில் பதுங்கிக் கொண்டதாகவும், அழுதால் சத்தம் கேட்டு விடும் என்பதற்காக அழுகையை அடக்கிக்கொண்டு ஒளிந்திருந்ததாகவும் அந்தக் குழந்தை தெரிவித்தது.
அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என லீனின் இளைய சகோதரன் சொன்னதைக் கேட்டபோது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. வீட்டிற்குள் புகுந்த தாக்குதல்தாரிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஃப். படையைச் சேர்ந்தவர்கள் என லீனின் தந்தை விளக்கினார். அவர்கள் அனைவரும் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதாக பெரும்பாலானோர் புகார் தெரிவித்தனர்.
சூடான் நாட்டில் சக்தி வாய்ந்த இருநபர்களுக்கு இடையே நடக்கும் இப்போர் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், அவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட மற்றும் அரசியல் விரோதம் தான் காரணம் என்பதை விட அவர்களது ஆதிக்க அதிகாரங்களுக்கு இடையே நிலவும் போட்டிதான் காரணம் என்பதே சரியாக இருக்கும்.
யேமன் ஹௌதிகளுடன் போரிட, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு ஆதரவாக தமது படைகளை அனுப்பிய துணை ராணுவப் படையின் ஜெனரல் ஹெமெத்திக்கு இந்நாடுகள் தாராளமாக நிதி அளித்ததால் அவர் பொருளாதார வளம் மிக்க ஜெனரலாக இருக்கிறார்.
ஆனால், அண்மைக்காலமாக சூடான் ராணுவ ஜெனரல் புர்ஹானுக்கும் நெருக்கம் மிகுந்த நாடாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. கனிம வளம் மற்றும் விவசாய வளங்களை அதிகமாகக் கொண்ட சூடான் நாட்டின் மீது எகிப்து, இஸ்ரேல், ரஷ்யா மட்டுமல்லாமல், ரஷ்யாவின் ஆதரவு பெற்ற தனியார் ராணுவமும் ஒரு கண் வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
ஆனால் தற்போதைய ஒரு மோசமான சூழலில், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தான் இந்த கொடூரமான தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடன் பேச்சு நடத்திக் கொண்டிருக்கின்றன.
மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சவுதி அரேபியாவுக்கு பல நாட்டு தூதர்கள் மனமாற நன்றி தெரிவித்துவருகின்றனர். இதுவரை 100 நாடுகளைச் சேர்ந்த 5,000 பேர் செங்கடல் வழியாக சவுதி அரேபிய போர்க்கப்பல்கள் மற்றும் அல்லது அந்நாட்டு ராணுவம் அனுப்பிய தனியார் கப்பல்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதில் சனிக்கிழமையன்று மிக அதிகமாக ஒரே நாளில் ஈரானியர்கள் உள்பட 2,000 பேர் சவுதி அரேபியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பரம்பரை விரோதிகளாக விளங்கிய சவுதி அரேபியாவும், ஈரானும் அண்மையில் தங்கள் பகையை மறந்து, தூதரக உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியைத் தொடங்கியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.
சூடானில் பல ஆண்டுகள் பொறியாளராகப் பணியாற்றிய கணவருடன் ஜெட்டா வந்த நஸ்லி என்ற ஈரானிய சிவில் எஞ்சினியர், சவுதி அரேபியாவும், ஈரானும் உறவுகளைப் பலப்படுத்தினால் அது தங்களுக்கு ஒரு வரமாகவே அமையும் என்றார்.
இந்நிலையில், தாக்குதலில் இருந்து தப்பி வந்த மேலும் பலர், ஞாயிறன்று சவுதி போர்க்கப்பலை எதிர்பார்த்து இழுவைப் படகு மூலம் பயணத்தைத் தொடங்கினர். அவர்கள், சூடான் நாட்டை நினைத்து வருந்தியதுடன், வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை அந்த நாட்டின் பக்கமே தலைவைத்தும் படுக்கக்கூடாது என்ற தீர்க்கமான எண்ணத்தில் அங்கிருந்து வெளியேறும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்