ஜப்பான் நிலநடுக்கம், சுனாமி: ஷிகா அணு உலையில் மின் தடை, எண்ணெய் கசிவு - என்ன நடக்கிறது?

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், Getty Images

ஜப்பானில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், ஜப்பான் கடல் பகுதிகளில் விடுக்கப்பட்டிருந்த அனைத்து ‘சுனாமி எச்சரிக்கைகளும்’ தளர்த்தப்பட்டுள்ளன.

நிலநடுக்கம் மற்றும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட தீயால் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோட்டோ கடற்கரையோர பகுதியில் ரயில், படகு சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஆயிரக்கணக்கிலான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஜப்பான் ராணுவம் உணவு, குடிநீர், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கிவருகிறது.

ஜப்பானுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் நிலநடுக்கம்

பட மூலாதாரம், EPA

இஷிகாவா நகரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 32,500 வீடுகளில் மின் தடை ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோளிட்டு கியோடோ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்குள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே தென்கொரியாவின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியிலும் சிறியளவில் சுனாமி அலைகள் எழுந்ததாக தகவல் வெளியாகியது.

43 செமீ (1.4 அடி) உயரம் கொண்ட சுனாமி அலை கிழக்கு மாகாணமான கேங்வோனை அடைந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் கூறுகிறது.

கடல் மட்டம் உயரும் என்ற அச்சத்தின் காரணமாக உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு முன்னதாக அதிகாரிகள் இந்த மாகாணத்தில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், Reuters

அணுஉலைகளின் நிலை என்ன?

ஜப்பான் கடலோரத்தில் அமைந்துள்ள ஓஹி, டாகாஹாமா பகுதிகளில் செயல்பாட்டில் உள்ள 5 அணு உலைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

எனினும், நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான ஷிகா அணு உலையில் மின் தடை மற்றும் எண்ணெய் கசிவு உள்ளிட்டவை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அணுக் கதிர்வீச்சு கசியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நேற்று ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது.

"இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்" என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்தது.

ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை "உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு" இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

5 மீட்டர் (சுமார் 16 அடி) உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நோட்டோ பகுதிக்கு அருகிலுள்ள நீகாட்டா, டோயாமா உள்ளூர் நிர்வாகமும் சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்தது. இந்த பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

'காலி செய்யுங்கள்' என்ற வாசகம் ஜப்பானின் அரசு தொலைக்காட்சியில் பெரிய வடிவில் தோன்றி மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், Reuters

13 பேர் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காயமடைந்திருப்பதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்ட பிறகு தான், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என அந்நாட்டு ஊடகங்கள் கூறியுள்ளன.

திங்கட்கிழமை நிலநடுக்கத்தின் மையமாக இருந்த ஜப்பானின் வடமேற்கு கடற்கரையில் உள்ள இஷிகாவா மாகாணத்தில் அனைத்து இறப்புகளும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் நேற்று ஒரே நாளில் 155 முறை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது எனவும், அதில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவிற்கு மேலானவை என அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களை மீட்பதில் சிக்கல்

சாலைகள் பெரிய அளவில் சேதமடைந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் ஃபூமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பான் இராணுவத்திற்கு சமமான, எஸ்.டி.எப் என அழைக்கப்படும் தற்காப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 1,000 உறுப்பினர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்ட வடக்கு நோட்டோ தீபகற்பத்தின் பகுதிகளுக்கு கடல் வழியாக செல்ல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், பேரிடர் பாதித்த பகுதிகளுக்குச் செல்ல தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுமாறு தற்காப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் எனவும் திரு.கிஷிடா கூறினார்.

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், Reuters

பின்னதிர்வுகள் மிகவும் மோசமாக இருக்கும்

"சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களுக்கு ஜப்பான் மிகவும் பழக்கப்பட்ட நாடாக தான் உள்ளது, ஆனால் இந்த முறை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மிகவும் அதிகம்" என லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் புவியியல் மற்றும் புவி அறிவியல் பேராசிரியரான டான் பால்க்னர் பிபிசியிடம் கூறினார்.

நிலநடுக்கங்கள் நின்றுவிட்டாலும், அதன் பின்னதிர்வுகள் மிகவும் மோசமாக இருக்கும் என டான் பால்க்னர் கூறுகிறார்.

"அடுத்தடுத்து ஜப்பான் எதிர்கொள்ளப்போகும் பின்னதிர்வுகள் சக்தி வாய்ந்ததாக இருக்கும். நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்கனவே கட்டிங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. பின்னதிர்வுகள் காரணமாக மேலும் சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும்" என்று அவர் எச்சரிக்கிறார்.

ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம், Japan Meteorological Agency

அணு உலைகளுக்கு பாதிப்பா?

நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தை அதிகாரிகள், நிலநடுக்கத்தால் அணு உலையிலிருந்து எவ்வித அணுக் கதிர்வீச்சும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் 'அசாதாரண நிலை ஏதுமில்லை' என்று விளக்கமளித்துள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இந்த அணு உலை விபத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம், Reuters

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், EPA

சுனாமியால் என்ன பாதிப்பு?

நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்துள்ளது.

இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஷிகவா பிராந்தியத்தில் 36,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை சுட்டிக் காட்டி கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான இஷிகவாவிற்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்தியர்களுக்கு உதவி எண்கள்

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம், X/IndianEmbTokyo

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்காக, ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் உதவி எண்களை அறிவித்துள்ளது. இந்தியர்களுக்கு உதவுவதற்காக கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தலை கேட்டு நடந்து கொள்ளுமாறும், உதவி தேவைப்படும் இந்தியர்கள் தூதரகத்தால் கொடுக்கப்பட்டுள்ள தொலை பேசி எண் மற்றும் இமெயில் முகவரியை தொடர்பு கொள்ளுமாறு ஜப்பானிலுள்ள இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)