You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா - பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் ஒரே நேரத்தில் இலங்கை வந்தது ஏன்?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
பாகிஸ்தானிற்கு சொந்தமான போர் கப்பல், கொழும்பில் நங்கூரமிட்டுள்ள தருணத்தில், இந்தியாவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இந்தியாவிற்கு சொந்தமான ஐ.என்.எஸ் வகீர் என்ற நீர்மூழ்கி கப்பலே இவ்வாறு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அதிகாரபூர்வ பயணமாக இந்திய நீர்மூழ்கி கப்பல் இவ்வாறு கொழும்பு வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கொழும்பை வந்தடைந்த நீர்மூழ்கி கப்பலை, இலங்கை கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்றிருந்தனர்.
ஐ.என்.எஸ். வகீர் நீர்மூழ்கி கப்பல்
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஐ.என்.எஸ், வகீர் நீர்மூழ்கி கப்பலானது, 67.5 மீட்டர் நீளம் கொண்டது. அதில் 60 வீரர்கள் உள்ளனர்.
இந்த கப்பலின் கட்டளை தளபதியாக கமாண்டர் எஸ். திவாகர் கடமையாற்றி வருகின்றார். இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலானது, இந்திய கடற்படையுடன் இணைந்த புதிய நீர்மூழ்கி கப்பலாக கருதப்படுகின்றது.
இந்த நீர்மூழ்கி கப்பல் கல்வாரி வகுப்பை சேர்ந்த ஒன்றாகும்.
இந்த கப்பலின் தயாரிப்பு நடவடிக்கைகள் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி பணிகள் நிறைவடைந்து அதிகாரப்பூர்வமாக இயக்கப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சியில், இந்த நீர்மூழ்கி கப்பலில் வருகை தந்த படையினரும், இலங்கை கடற்படை அதிகாரிகயும் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பலின் செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த பயணத்தின் போது இந்திய படையினர், இலங்கை படையினருக்கு தெளிவூட்டல்களை வழங்கவுள்ளனர்.
அத்துடன், இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளிலும் இருநாட்டு அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்.
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல், எதிர்வரும் 22ம் தேதி பயணத்தை நிறைவு செய்து, நாட்டிலிருந்து வெளியேறும் என இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாள் முன்பாக இலங்கை சென்ற பாக். போர்க் கப்பல்
இந்தியாவிற்கு சொந்தமான ஐ.என்.எஸ் வகீர் நீர்மூழ்கி கப்பல், இலங்கைக்கு பயணம் செய்வதற்கு ஒரு நாளிற்கு முன்பாக, பாகிஸ்தானிற்கு சொந்தமான போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான பீ.என்.எஸ்.திப்பு சுல்தான் என்ற கப்பலே, அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு சொந்தமான, இந்த போர் கப்பலானது, 134.1 மீட்டர் நீளத்தை கொண்டது. அதில் 168 வீரர்கள் இருக்கின்றனர். இந்த கப்பலின் கட்டளை தளபதியாக கேப்டன் ஜவாட் ஹூசேன் செயற்பட்டு வருகின்றார்.
பாகிஸ்தான் போர் கப்பல், இன்று நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படையினருக்கு இடையில் பயிற்சிகள் நடந்துள்ளன.
இந்தியா - பாக் கடற்படையினர் சந்திப்பா?
இலங்கைக்கு ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் கடற்படையினர் எந்தவித சந்திப்புகளையும் நடத்தவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட இரு நாட்டு கடற்படையினரும் வெவ்வேறாக இலங்கை கடற்படையினருடன் பயிற்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
இலங்கை, பிராந்திய ரீதியாகவும், பூகோள ரீதியாகவும் அனைத்து நாட்டு கடற்படையினருடனும் நெருங்கிய தொடர்புகளை ஒரே விதத்தில் பேணி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
அதனாலேயே, அனைத்து நாட்டு கடற்படையினரும் இலங்கைக்கு ஒரே விதத்தில் பயணம் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.
இந்திய கடற்படையினரும், பாகிஸ்தான் கடற்படையினரும் பிராந்திய எல்லை பாதுகாப்புக்கு இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அதனாலேயே, இரு நாட்டு கடற்படையினரும் ஒரே நேரத்தில் வருகை தந்ததாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்