இந்தியாவை 'வெளியேறச்' சொன்ன மாலத்தீவு அதிபர் முய்சுவுடன் பிரதமர் மோதி சந்திப்பு: என்ன பேசினர்?

முதல் சந்திப்பு

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

படக்குறிப்பு, காலநிலை மாநாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோதி, மாலத்தீவு அதிபர் முய்சுவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

துபாயில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் காலநிலை உச்சி மாநாட்டை (COP28) முன்னிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஆகியோருக்கு இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

அண்மையில் மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முய்சுவுக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில், இரு தலைவர்களும் இந்தியா-மாலத்தீவு உறவுகள் குறித்து விவாதித்ததுடன், பரஸ்பர ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதிபராகப் பொறுப்பேற்றுள்ள முய்சுவுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பரஸ்பர சந்திப்பின் போது, ​​இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். மேலும், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகளை ஆழப்படுத்துவது மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இது தவிர, பொருளாதார உறவுகள், பருவநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது குறித்தும் அவர்கள் விவாதித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக ஒரு முக்கிய குழுவை அமைக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் உறவுகளை மேம்படுத்த உயர்மட்டக் குழுவை அமைப்பது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக மாலைதீவு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முதல் சந்திப்பு

பட மூலாதாரம், REUTERS/NISHAN ALI

படக்குறிப்பு, மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு 'சீனாவுக்கு ஆதரவானவர்' என்பதுடன் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்று கருதப்படுகிறது.

‘இந்தியாவுக்கு எதிரான’ முய்சு

மாலத்தீவின் புதிய அதிபர் முகமது முய்சு 'சீனாவுக்கு ஆதரவானவர்' என்பதுடன் 'இந்தியாவுக்கு எதிரானவர்' என்று கருதப்படுகிறார்.

நாட்டின் எட்டாவது அதிபராக முய்சு பதவி வகிக்கிறார். அவர் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். அவரது ஆட்சியின் போது மாலத்தீவுக்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் ஆழமாக இருந்தன.

முய்சுவின் தேர்தல் பிரசாரம் முழுவதும் 'இந்தியா அவுட்' என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. அல்லது இந்தியாவுக்கு எதிராக இருந்தது. மாலத்தீவு மண்ணில் வெளிநாட்டு ராணுவ வீரர்கள் தங்க அனுமதிக்க மாட்டோம் என தேர்தல் பிரசாரத்தின் போது அவர் அறிவித்திருந்தார். அதிபர் பதவியேற்ற பிறகும் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

மாலத்தீவில் சுமார் 70 இந்திய வீரர்கள் இந்தியா நிறுவியுள்ள ரேடார்கள் மற்றும் விமானங்களை கண்காணித்து வருகின்றனர்.

முய்சு அந்நாட்டு அதிபராகப் பதவியேற்ற பிறகு தனது முதல் பயணமாக துருக்கி நாட்டுக்குச் சென்றார். இது அவரது 'இந்திய எதிர்ப்பு' இமேஜையும் வலுப்படுத்தியது. ஏனெனில் இதற்கு முன்பு மாலத்தீவின் புதிய அதிபர் பதவியேற்ற பிறகு இந்தியாவுக்கு வருவது தான் வழக்கமாக இருந்துவருகிறது.

முதல் சந்திப்பு

பட மூலாதாரம், MURAT KULA/ANADOLU VIA GETTY IMAGES

படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முய்சு, அதிபர் பதவியேற்ற பின் முதன்முதலாக துருக்கி சென்று அதிபர் ரெசெப் தையிப் எர்துவானைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

சீனத் துணைப் பிரதமருடன் சந்திப்பு

துபாயில் நடந்து வரும் காலநிலை உச்சிமாநாட்டின் ஒருபுறம், மாலத்தீவு அதிபர், சீனாவின் முதல் துணைப் பிரதமர் டிங் க்ஸூசியாங்கையும் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க முய்சு விருப்பம் தெரிவித்ததாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாலத்தீவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவின் வளர்ச்சியில் சீனா மிக முக்கிய பங்களிக்கும் நட்பு நாடாக இருந்துவருகிறது. எனவே மாலத்தீவின் வளர்ச்சியில் சீனாவின் ஒத்துழைப்பு வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று அதிபர் நம்பிக்கை தெரிவித்தார்,” எனக்கூறப்பட்டுள்ளது.

சீனாவின் முதல் துணைப் பிரதமர் டிங், முய்சு அதிபராகப் பதவியேற்றதற்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், மாலத்தீவுடன் வலுவான உறவுகளைப் பேணுவதற்கு சீனா உறுதிபூண்டுள்ளது என்றும் கூறினார்.

மாலத்தீவு அதிபர் அலுவலகத்தின் கூற்றுப்படி, டிங் மாலத்தீவு-சீனா உறவுகள் குறித்து நம்பிக்கையை வெளிப்படுத்தினார். மேலும், இந்த உறவுகள் முய்சுவின் பதவிக்காலத்தின் போது மேலும் மேம்படும் என்றும், மாலத்தீவின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு சீனாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.

முதல் சந்திப்பு

பட மூலாதாரம், PRESIDENCY.GOV.MV

படக்குறிப்பு, முய்சு துபாயில் சீனாவின் முதல் துணைப் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

சீனாவுடனான உறவுகள் மற்றும் கடன்கள்

மாலத்தீவில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இந்தியாவும் சீனாவும் பில்லியன் கணக்கான டாலர்களை கடனாகவும் நிதி உதவியாகவும் வழங்கியுள்ளன.

இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அமைந்துள்ள இடம் வியூக ரீதியாக மிகவும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் கொண்டு வரும் கப்பல்கள் அந்தப் பகுதி வழியாகத் தான் செல்கின்றன.

மாலத்தீவு நீண்ட காலமாக இந்தியாவின் ஆதரவின் கீழ் இருந்துவருகிறது. மாலத்தீவில் இருந்து இந்தியப் பெருங்கடலின் பெரும் பகுதியைக் கண்காணிக்கும் திறன் கிடைக்கும் என்பதால் புவியியல் ரீதியாக அந்நாடு மிக முக்கிய நாடாக இருக்கிறது.

முதல் சந்திப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவின் இருப்பிடம் ஒரு சுற்றுலாத் தலமாக இருக்கிறது என்பதைத் தவிர, வியூக ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது

இந்தியாவுக்கு மாலத்தீவு எப்படி முக்கியமோ, அதே போல சீனாவுக்கும் வியூக ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு சீனா தொடர்ந்து தனது இருப்பை அதிகரித்து வருகிறது. அங்கு பெரிய முதலீடுகளும் சீனாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

2016-ஆம் ஆண்டில், மாலத்தீவு தனது தீவுகளில் ஒன்றை சீனாவிற்கு 50 ஆண்டுகளுக்கு வெறும் 4 மில்லியன் டாலர்களுக்கு குத்தகைக்கு அளித்தது. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்திற்கு மாலத்தீவும் வெளிப்படையாக ஆதரவளித்துள்ளது.

மாலத்தீவு சீனாவிடம் இருந்து சுமார் ஒரு பில்லியன் டாலர் கடனை பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. இந்தத் தொகை அந்நாட்டில் உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

சீன கடற்படை மாலத்தீவில் தனது எல்லையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது. ஆனால், அங்கு சீனாவின் செல்வாக்கை தடுக்க இந்தியா முயற்சித்து வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)