மிக்ஜாம் புயல்: தற்போது எங்கு உள்ளது? எப்போது கரையைக் கடக்கும்? - முழு தகவல்கள்

மிக்ஜாம் புயல், சென்னை மழை

பட மூலாதாரம், IMD

மிக்ஜாம் புயல் இன்று (செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 5) ஆந்திர மாநிலம் நெல்லூர் மற்றும் பாபட் இடையே கரையை கடக்கவிருக்கிறது. இப்புயல் 110கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்று வானிலை அய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஆந்திர மாநிலத்தின் நெல்லூர், திருப்பதி, பிரகாசம், பாபட்லா மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசிவருகிறது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

இரண்டு நாட்களாக இடைவிடாது பெய்த மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பலர் மழைநீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் புயலின் தீவிரம் அதிகரித்தது.

ஆந்திரப் பிரதேச பேரிடர் மேலாண்மைத் துறை அறிக்கையின்படி, மிக்ஜாம் புயல் மேற்கு-மத்திய வங்கக் கடலில் தீவிரப் புயலாகக் குவிந்துள்ளது.

தற்போது மிக்ஜாம் புயல், சென்னைக்கு 170 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு 120 கி.மீ தொலைவிலும், இருக்கிறது. ஆந்திரக் கடற்கரையில் மணிக்கு 90-110 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது.

காணொளிக் குறிப்பு, புயல் வெள்ளத்தால் மூழ்கியது சென்னை; தத்தளிக்கும் மக்கள்
மிக்ஜாம் புயல்

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மிக்ஜாம் புயல் கரையை கடக்கவுள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளது

புயல் எச்சரிக்கை - விடுமுறை

நேற்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்தது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசியது.

இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

மிக்ஜாம் புயலால் என்னென்ன பாதிப்பு?

தமிழ்நாடு புயல்

பட மூலாதாரம், IMD

நேற்று (திங்கள், டிசம்பர் 4) மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன.

நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர்.

முதலை

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

பெருங்களத்தூரில் முதலை வந்ததா?

சென்னையில் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், பெருங்களத்தூர் அருகே முதலை ஒன்று சாலையில் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. பிபிசி இந்தக் காணொளியை சரிபார்க்க இயவில்லை.

இது தொடர்பாக பதிவிட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, "இந்த வீடியோ குறித்து பலர் ட்வீட் செய்து வருகின்றனர்.சென்னையில் உள்ள பல நீர்நிலைகளில் சில குவளை முதலைகள் உள்ளன. இவை கூச்ச சுபாவமுள்ள விலங்குகள். மனித தொடர்பைத் தவிர்க்கின்றன. புயலின் தாக்கத்தில் பாரிய மழை காரணமாக நீர் பெருக்கெடுத்துள்ளதால், தயவு செய்து நீர்நிலைகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். இந்த விலங்குகளை தனியாக விட்டுவிட்டு, தூண்டாமல் இருந்தால், மனிதர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட வாய்ப்பில்லை. பீதியடைய தேவையில்லை. வனவிலங்கு பிரிவு உஷார்படுத்தப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்," என்று தெரிவித்துள்ளார்.

ரத்தான விமானம் மற்றும் ரயில்கள்

மிக்ஜாம் புயல் விமானம் ரத்து

பட மூலாதாரம், UGC

படக்குறிப்பு, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் 20 விமானங்களின் வருகை, புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது

நேற்று (திங்கள், டிசம்பர் 4) மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழையினால், சென்னை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான நிலைய ஓடுதளத்தில் தண்ணீர் சூழ்ந்தது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

மோசமான வானிலையின் காரணமாக 4ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாக சென்னை விமான நிலையம் அறிவித்திருந்தது.

இதனால் வெளியூர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் சிலர், விமான நிலையங்களில் முடங்கினர்.

சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால், 150 விமான சேவைகள் வரை சேவை பாதிக்கப்பட்டன.

சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானங்கள், தரையிறங்க ஏதுவான சூழல் இல்லாத நிலையில் பெங்களூரூவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.

மிகவும் அவசியமான சூழலில் மட்டும் விமான பயணங்களை மேற்கொள்ளுமாறும், பிற பயணிகள் தங்களது பயணங்களை ரத்து செய்யுமாறும் சென்னை விமான நிலையம் அறிவுறுத்தியிருந்தது.

கனமழை காரணமாக ஒரு சில ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட வேண்டிய 6 ரயில்கள், வியாசர்பாடி - பேசின் பிரிட்ஜ் ரயில் பாலத்தில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் ரத்தாகின.

அதே போல சென்னைக்கு வர வேண்டிய 6 ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்பட்டன.

அதே போல சென்னை புறநகர் ரயில் சேவையும் இன்று காலை 8 மணி வரை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

கனமழையின் காரணமாக சென்னையின் ஒரு சில மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. மெட்ரோ ரயில் வழக்கம் போல இயக்கப்பட்டாலும், பரங்கிமலை, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

காணொளிக் குறிப்பு, மிக்ஜாம் புயல்: திரும்பும் இடமெல்லாம் வெள்ளம், தத்தளிக்கும் சென்னை - காணொளி

'பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' - வானிலை ஆய்வு மையம்

டிசம்பர் 4 மற்றும் 5 ஆம் தேதி, பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையமும், தமிழ் நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனாவும் அறிவுறுத்தியிருந்தது.

“புயல் கரையை கடந்துவிட்டது என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும்வரை பொது மக்கள் வெளியில் வராமல் இருக்க வேண்டும்," என வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.

மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் அல்லது நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும் மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

புயல்

பட மூலாதாரம், NDRF

சென்னையில் மழை

புயலின் பெயர் எப்படி வைக்கப்பட்டது?

இது புயலாக உருமாறிய பிறகு இதற்கு, 'மிக்ஜாம்' எனப் பெயரிடப்பட உள்ளது. இந்தப் பெயர் மியான்மரால் வழங்கப்பட்டது.

இந்தப் புயலின் காரணமாக, வடதமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மூன்றாம் தேதி காலை வரை 80கி.மீ. வேகத்திலும் அன்று மாலை வரை மணிக்கு 70 முதல் 80கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மூன்றாம் தேதி மாலை முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் படிப்படியாக உயர்ந்து, டிசம்பர் 4ஆம் தேதி மாலை முதல் மணிக்கு 80 முதல் 90கி.மீ வேகத்திலும் இடையிடையே 100 கி.மீ வேகத்தில் அடுத்த 12 மணி நேரத்திற்கு வீசக்கூடும்.

இதன் காரணமாக மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்களும் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

சென்னையில் மழை

புயல் கரையைக் கடக்கும்போது என்ன செய்யக்கூடாது?

புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று 10 முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புயல் வரும் சமயத்தில் வெளியே, குறிப்பாக கடற்கரைப் பகுதிகளுக்கு, சென்று வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் ஈடுபடக் கூடாது. இது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்

2. வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை மூடி வைக்க வேண்டும். வீட்டின் கதவோ, சன்னல் கதவோ நல்ல நிலையில் இல்லாவிட்டால், அதை உடனடியாக சரி செய்துகொள்வது நல்லது.

3. காற்றின் அழுத்தத்தால் சன்னல் கண்ணாடிகள் விரிசல் விட்டு உடையவோ, உடைந்து சிதறவோ வாய்ப்புண்டு. மரப்பலகை, துணி ஏதேனும் இருந்தால், சன்னலை அதை வைத்து மூடிக்கொள்ளுங்கள். கண்ணாடித் துண்டுகள் காற்றின் வேகத்தில் வீட்டுக்குள் சிதறுவதை அது தடுக்கும்.

4. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் பழைய கட்டடங்களுக்கு உள்ளேயோ அருகிலோ இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. பலத்த காற்றின் காரணமாக மின் இணைப்பு துண்டிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டார்ச் லைட், பவர் பேங்க், மெழுகுவர்த்தி, இன்வர்ட்டர் போன்றவற்றை தயார் செய்து வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

6. பலத்த மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் முன்னெச்சரிக்கையாக காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களுக்கு தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

7. உங்கள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தொண்டூழிய அமைப்புகளின் உதவி எண்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்.

8. மின்சாரம் இல்லாமல் போனால், தொலைக்காட்சி செய்திகளை எல்லோரும் பார்க்க முடியாது. செல்பேசியே தகவல்களை பெற வழியாக இருக்கும். பேட்டரியில் இயங்கும் பழைய டிரான்சிஸ்டர் இருந்தாலும் அது உதவியாக இருக்கும். அதனால் சமூக ஊடகங்களில் வரும் அனைத்து தகவல்களையும் நம்பி விடாமல், போலிச் செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்.

9. புயல் கரையைக் கடக்கும்போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லாமல் வெளியே செல்ல நேர்ந்தால் கவனமாக இருக்கவும். இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் கவனம் தேவை.

10. கனமழையும் புயலுடன் சேர்ந்து வரும். தாழ்வான பகுதிகளில் உங்கள் வீடு இருந்தால், விலைமதிப்புள்ள பொருட்களையும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை பத்திரப்படுத்திவிட்டு, நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது நல்லது.

சென்னையில் மழை

பட மூலாதாரம், imd.gov.in

சென்னையில் மழை

தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்

படகுகள், தண்ணீரில் இருக்கும் போது பயன்படுத்தப்படும் டியூப்கள், என மாநில பேரிடர் மீட்புக் குழு மற்றும் கமாண்டோ குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளன. இரவு நேரங்களில் வெள்ள நீர் சூழந்து மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டால் அவர்களை மீட்புப் பணிகளை தொடங்குவார்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)