மத்திய இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் இன்று (வியாழன், பிப்ரவரி 1) மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அவரது பட்ஜெட் உரையில் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள், ஆகியோர்மீது கவனம் செலுத்தினார். அவர்களுக்காக இதுவரை செயல்படுத்தப்பட்டிருக்கும் திட்டங்களையும் புதிய திட்டங்களையும் விளக்கினார்.

இந்த அரசு 25 கோடி மக்களை பல்முனை ஏழ்மையிலிருந்து வெளியேற்றியிருப்பதாகக் கூறினார் நிர்மலா சீதாராமன்.

நேரடி வரி வசூல் மூன்று மடங்காக உயர்ந்திருப்பதாகக் கூறிய அவர், இந்த பட்ஜெட்டில் வரி வசூல் சார்ந்து எந்த மாற்றமும் செய்யப்படாது என்றார்.

2024-2025 ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.1% ஆக இருக்கும், என்றார்.

மேலும் பேசிய அவர், “2014 வரை நடந்துவந்த ஆட்சியின் முறையற்ற நிர்வாகத்தினையும், 2014 முதல் நடந்துவரும் பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளையும் ஒப்பிட்டு அடிக்கோடிட்டுக் காட்ட நாடாளுமன்றத்தில் ஒரு வெள்ளையறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெண்களுக்கான திட்டங்களைப் பட்டியலிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கு 30 கோடி முத்ரா கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பெண்கள் மேற்படிப்பில் சேர்வது 28% உயர்ந்திருப்பதாகக் கூறினார். “தற்போது நாடு முழுவதும் 83 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 9 கோடி பெண்கள் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். 2 கோடி பெண்கள் சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் இலக்கு 3 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என்றார்.

விவசாயிகளுக்கான திட்டங்களைப் பற்றிப் பேசிய அவர், கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 11.8 கோடி விவசாயிகளுக்கு நேரடி நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்படுவதாகக் கூறினார்.

“அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்க, தனியார் மற்றும் அரசு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும். எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் விதைகள் பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்,” என்றார்.

‘ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்குப் புதிய திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்றார் நிர்மலா சீதாராமன். “மேலும் 54 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. 3,000 புதிய தொழில் பயிற்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன,” என்றார்.

"புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 50 வருடங்களுக்கான வட்டியற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கடன் நிதி உருவாக்கப்படும்," என்றார்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தான் இந்த அரசின் குறிக்கோள் என்ற அவர், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், அனைத்து மக்களுக்கும் எரிவாயு, மின்சாரம், வங்கிச் சேவைகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன என்றும், இதனால் கிராமப்புற மக்களுக்கு வருமானம் உயர்ந்துள்ளது என்றும் சொன்னார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024

பட மூலாதாரம், ANI

‘சமூக நீதி எங்கள் செயல்பாட்டில் உள்ளது’

மேலும் பேசிய நிர்மலா சீதாராமன், சமூக நீதி என்பது முன்பு அரசியல் கோஷமாக இருந்தது, ஆனால் இந்த அரசுக்கு அது அடிப்படை நிர்வாகம் சார்ந்தது என்றார் சீதாராமன். “இது தான் செயல்பாட்டு மதச்சார்பின்மை. இது ஊழலைத் தடுக்கிறது,” என்றார்.

34 லட்சம் கோடி ரூபாயை மக்களின் ஜன்தன் கணக்குகளில் செலுத்தியதன்மூலம் 2.7 லட்சம் கோடி ரூபாய் நிதி வீணாவது தடுக்கப்பட்டிருக்கிறது, என்றார்.

சமூக, மின்னணு, உள்கட்டமைப்பு ஆகிய கட்டமைப்பு மேம்பாடுகள் சாதனை வேகத்தில் செய்யப்பட்டுள்ளன, என்று கூறிய நிதியமைச்சர், இந்தியா-மத்தியக் கிழக்கு-ஐரோப்பா சாலை திட்டம் சர்வதேச வணிகத்தில் முக்கியப் பங்காற்றும் என்றும் அது இந்தியாவில் துவங்கப்பட்டது என்றும் கூறினார்.

பிரக்ஞானந்தாவைக் குறிப்பிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன்

விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் நடத்திவரும் சாதனைகளைப் பறிப் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்ஸனை எதிர்த்துப் போட்டியிட்டதைக் குறிப்பிட்டார்.

“இன்று இந்தியாவில் 80 செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர். கடந்த 2010-இல் 20 கிராண்ட் மாஸ்டர்கள் மட்டுமே இருந்தனர்,” என்றார்.

மேலும், 2023-இல் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், பாரா ஆசியப் போட்டிகளிலும் அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களைப் பெற்றது என்றார்.

கங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பட்ஜெட்டை விமர்சித்தனர்.

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சசி தரூர்

‘ஏமாற்றம் தரும் பட்ஜெட்’

இது மிகச்சிறிய பட்ஜெட் உரையாக இருந்தது, பெரிதாக எதுவும் கூறப்படவில்லை, என்று சசி தரூர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

“இதில் வெறும் மேடைப்பேச்சுக்கான விஷயங்கள் மட்டுமே இருந்தன, புள்ளிவிவரங்கள் பெரிதாக இல்லை. அந்நிய முதலீடுகள் குறைந்திருக்கின்றன என்ற தகவலைத் தெரிவிக்காமலேயே அந்நிய முதலீடுகளைப் பற்றிப் பேசினார் நிதியமைச்சர். இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட் உரை,” என்றார் சசி தரூர்.

இந்த பட்ஜெட்டில் இருக்க வேண்டியது எதுவும் இல்லை, என்று விமர்சித்திருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். “இது குறைந்தபட்ச நிர்வாகச் செயல்பாடு போல இருக்கிறது. இதில் முழுக்க சுய பெருமை தவிர வேறு எதுவும் இல்லை,” என்று அவர் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

அதே சமயம், நிதிப் பற்றாக்குறை 5.1% என்று வரையறுக்கப்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கும் விஷயம் என்று தொழில்துறையினர் கூறினர். இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் தினேஷ், இது ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றார்.

மத்திய இடைக்கால பட்ஜெட் 2024

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சிவப்புத் துணியால் ஆன பையில் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு அவர் நாடாளுமன்றம் வந்தடைந்தார்

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் என்ன?

இளைஞர்கள்:

  • 'ஸ்கில் இந்தியா’ திட்டத்தின் மூலம் 1.4 கோடி இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, என்றார் நிர்மலா சீதாராமன்.
  • பெண்கள் தொழில்நுட்ப மேற்படிப்புகளில் சேர்வது அதிகரித்துள்ளது.
  • சமூக, மின்னணு, உள்கட்டமைப்பு ஆகிய கட்டமைப்பு மேம்பாடுகள் சாதனை வேகத்தில் செய்யப்பட்டுள்ளன.
  • மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படும்.
  • சராசரி வருமானம் 50% உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள்:

  • இளம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஊக்கம் அளிக்கப்படும்.
  • 83 லட்சம் சுய உதவிக் குழுக்கள் 9 கோடி பெண்கள் கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். 2 கோடி குழுக்களிலிருந்து 3 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகள்:

  • 4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
  • அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைத் தடுக்கும் கட்டமைப்புகளை உருவாக்க, தனியார் மற்றும் அரசு முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.
  • எள், நிலக்கடலை, சூரியகாந்தி ஆகிய எண்ணெய் விதைகள் பயிரிடுவதற்கு ஊக்கம் அளிக்கப்படும்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்கள்

  • புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காக 50 வருடங்களுக்கான வட்டியற்ற 1 லட்சம் கோடி ரூபாய் கடன் நிதி உருவாக்கப்படும். இது தனியார் நிறுவனங்களை ஆராய்ச்சி மறும் கண்டுபிடிப்புகள் செய்ய ஊக்குவிக்கும்.
  • 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் பாரத் பெட்டிகளாக மாறப்படும்.
  • சிறிய நகரங்களுக்கும் விமான நிலையங்கள், விமானச் சேவைகள் ஆகியவை வழங்கப்படும்.

சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள்

  • லட்சத்தீவுகளுக்கான சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • ஆன்மீகச் சுற்றுலாவை உள்ளடக்கிய உள்நாட்டுச் சுற்றுலா வளர்ச்சி உள்ளூர் தொழில்முனைவோருக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
  • மாநில அரசுகள், அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் சுற்றுலா தலங்களை மேம்படுத்த ஊக்குவிக்கப்படும்.
  • சுற்றுலாவிற்கான துறைமுக இணைப்புகள் மேம்படுத்தப்படும்.
மத்திய இடைக்கால பட்ஜெட் 2024

பட மூலாதாரம், X/President of India

படக்குறிப்பு, முன்னர், பட்ஜெட் தாக்கல் செய்வதன் மரபின்படி, நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த நிர்மலா சீதாராமன்

முன்னர், பட்ஜெட் தாக்கல் செய்வதன் மரபின்படி, அவர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்தார்.

பின்னர், சிவப்புத் துணியால் ஆன பையில் காகிதமில்லா மின்னணு பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு அவர் நாடாளுமன்றம் வந்தடைந்தார்.

இடைக்கால பட்ஜெட் என்பது, தேர்தலுக்கு அடுத்து வரும் அரசு அடுத்த பட்ஜெட்டைத் தாக்கல் செய்வது வரையிலான காலத்திற்கான பட்ஜெட்.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பதன் மூலம், முன்னர் ஐந்து முறை ஆண்டு பட்ஜெட் மற்றும் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை நிகர் செய்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை (ஜனவரி 30) அன்று துவங்கியது. இரு அவைகளும் இணைந்த கூட்டத்தை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றித் துவங்கிவைத்தார். அதில், இந்தியா தொடர்ந்து இரண்டு காலாண்டுகளுக்கு 7.5% வளர்ந்திருப்பதாகத் தெரிவித்தார்.

விரைவில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், இந்த இடைக்கால் பட்ஜெட் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)