டங்கி பாதையில் ரஷ்யா சென்ற இந்திய இளைஞர்கள் அனுபவித்த கொடூரம் - என்ன நடந்தது?
‘கழுதைப் பாதை’ எனப்படும் சட்டவிரோத குடியேற்றப் பாதையின் மூலம் ஹரியாணா மாநிலத்தில் இருந்து ரஷ்யா சென்று, அங்கு சிறைத் தண்டனை அனுபவித்த இரண்டு நபர்கள், தாம் அனுபவித்த சித்ரவதைகளை பிபிசி பஞ்சாபி சேவையிடம் பகிர்ந்துகொண்டனர்.
ஹரியாணாவின் கர்ணல் நகரைச் சேர்ந்த முகேஷ் மற்றும் சன்னி ஆகிய இரு சகோதரர்கள் ரஷ்யாவில் சிறைத்தண்டனை அனுபவித்துவிட்டு, இப்போது தங்கள் ஊருக்குத் திரும்பியுள்ளனர்.
முகேஷ், தான் ரஷ்ய சிறையில் மனரீதியாகப் பல சித்ரவதைகளை அனுபவித்ததாகக் கூறினார். “இப்போது எனக்கு வெளிநாடு செல்லும் எண்ணமே இல்லை, மனரீதியாக நிறைய சித்ரவதை அனுபவித்தேன். என் குடும்பத்திடம் இப்போது பணம் இல்லை," என்றார்.
முகேஷ் மற்றும் அவரது சகோதரர் சன்னிக்கு வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து, அவர்களது குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே கனவு. அவர்கள் இருவரும் வெளிநாடு செல்வதற்கான முகவரைச் சந்தித்தபோது, அவர்களுக்கு அந்த முகவர் பணி அனுமதி வழங்குவதாக உறுதியளித்தார்.
ஆனால் முகேஷ் சென்றபோது, அவர்களுக்குப் பணி அனுமதி வழங்கப்படவில்லை. அவர்கள் கழுதைப் பாதையில் விடப்பட்டனர். அதாவது, ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு சட்டவிரோதமாக எல்லைகளைக் கடந்து பல்வேறு நாடுகளைக் கடந்து பயணிப்பதே பஞ்சாபி மொழியில் டங்கி என்று அழைக்கப்படும் கழுதைப் பாதை எனப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



