நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் என்ன நடக்கும்? வெயில் காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- அதிக தண்ணீர் தாகம்
- வறண்ட தோல்
- உதடுகளில் பிளவு
- நாக்கு வறட்சி
- பேசும்போது உளறல்
- வலிப்பு
- வயிறு வலி
- தலை வலி
- தலை சுற்றல்
- நெஞ்சு எரிச்சல்
- செரிமான கோளாறு
- படபடப்பு
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பையில் அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 13 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் வெயிலின் தாக்கத்தால்(Heat Stroke) இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன? வெயில் காலத்தில் வேறு என்ன பாதிப்புகள் ஏற்படும்? வெயிலின் தாக்கத்தில் இருந்து உடலை எப்படி பாதுகாப்பது? எந்த மாதிரி உணவுகளை எடுத்துக் கொள்வதால் செரிமானக் கோளாறை தடுக்க முடியும் என்று பல கேள்விகளுக்கு பொதுநல மருத்துவர் பூபதி ஜான் பதிலளித்தார்.
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஹீட் ஸ்ட்ரோக் என்பது மிக அதிகமான வெப்பத்தை உடலால் தாங்க முடியாமல் போகும் போது ஏற்படும் பாதிப்பாகும்.
மனிதர்களின் உடல்நிலை இயல்பாக 98.6 டிகிரி ஃபாரான்ஹீட் அல்லது 37 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
வெயில் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று, அதிக நேரம் வெயிலில் இருப்பதால் இந்த உடல் வெப்பம் இயல்பை விட அதிகரித்து 104 டிகிரி ஃபாரான்ஹீட்டுக்கு மேல் போகும் போது ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது.
வழக்கமாக காய்ச்சல் வரும் போது உடலின் வெப்பநிலை அதிகமாகி, அதற்கான மாத்திரை எடுத்துக்கொண்டால் வியர்வை வந்து உடலின் சூட்டை தணித்துவிடும்.
ஆனால் வெயில் காலங்களில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக சில நேரங்களில் வியர்வை வராது. மேலும் உடலில் இருந்து வியர்வையை வெளியேற்றும் அமைப்பு செயல்படாமல் போனால், உடல் வெப்பம் அதிகரித்து ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும்
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் பாதிப்பினால், மனிதர்கள் அப்படியே மயங்கி சரிந்து விழுகின்றனர். இதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நமது உடலின் வெப்பம் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதையொட்டி நமது உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து நமக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட போகிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் மேலே கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு ஏற்பட்டால், அந்த நபருக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.
பாதிப்பின் உச்சமாக மயக்கமடையும் நபர் கோமாவுக்கு செல்லும் அபாயமும் உள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
உடலின் வெப்ப நிலை 104 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை தாண்டும் போது பிரச்னை ஏற்படுகிறது.
அதனால் வெயிலில் அதிக நேரம் இருக்கும் நபர்களுக்கு, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பின் அறிகுறிகள் தெரியவந்தவுடன் உடனடியாக வெயிலில் இருந்து நிழலான பகுதி செல்ல வேண்டும்.
வாய்ப்பு இருந்தால் ஏசி இருக்கும் அறைகளுக்கு அழைத்துச் சென்று உடலின் வெப்பத்தை இயல்பான நிலைக்கு அழைத்து வர வேண்டும்.
உடலில் தலை, மார்பு, இடுப்பு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் ஐஸ் அல்லது நீரில் முக்கிய துணி கொண்டு தேய்த்து உடல் சூட்டை தணிக்கலாம்.
ஏரி, குளம், போன்ற நீர்நிலைகளில் உடனடியாக இறங்கி குளிப்பதன் மூலமும் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்னையினால் மயங்கி சரிவதை தடுக்க முடியும்.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு யாருக்கு ஏற்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகமாக வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது.
குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக நேரம் வெயிலில் இருக்கும் போது மிக எளிதாக ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
அதே போல 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் நீர்சத்து வற்றி, ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு வரும்.
சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட இணைநோய் இருக்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது.
இதுமட்டுமின்றி, வெயிலில் அதிக நேரம் வெளியே வேலை செய்யும் நபர்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக்கூடும். குறிப்பாக வெயிலின் தாக்கம் உச்சபட்சமாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை இருக்கும்.
இந்த நேரத்தில் கடினமான வேலையை வெயிலில் நின்று பார்க்கும் நபர்களுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படுகிறது.
சம்மர் அசிடிட்டி என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சம்மர் அசிடிட்டி (Summer Acidity) என்று தனியாக எந்த பிரச்னையும் ஏற்படாது. இது வெயிலின் தாக்கத்தால் ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வரும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்று செரிமான கோளாறு என்று அழைக்கப்படும் சம்மர் அசிடிட்டி.
வெயில் காலத்தில் அதிக சூட்டின் காரணமாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளின் மூலம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை அதிகமாகி, உடலில் பல அசௌகரியங்கள் ஏற்படுகிறது.
வயிற்றில் சுரக்கும் இந்த அமிலம் அதிகமாவதால், செரிமான கோளாறு, நெஞ்செரிச்சல், வாய் துர்நாற்றம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இந்த பாதிப்பு வெயில் காலத்தில் சிலருக்கு அதிகமாக ஏற்படுகிறது.
என்ன உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது?

பட மூலாதாரம், Getty Images
பொதுவாக வெயில் காலத்தில் உடலில் வெப்பம் அதிகரித்து வயிறு தொடர்பான தொந்தரவுகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்னையை சரி செய்ய குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
வழக்கமான நாட்களை விட அதிகளவில் தண்ணீர், காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சாதாரணமாக 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கும் மனிதர்கள், வெயில் காலத்தில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். அப்போது மட்டுமே உடலில் தேவையான நீர்சத்து குறையாமல் இருக்கும்.
- பால், தயிர், மோர் போன்ற உணவு வகைகளை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடல் சூட்டை தணிப்பது மட்டுமின்றி, வயிற்றின் அமிலத்தன்மை அதிகமாகாமல் இருக்க உதவும்.
- நீர்ச்சத்து உள்ள காய்களை உணவுடன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலின் சூட்டை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முடியும்.
- அடிக்கடி இளநீர் குடித்தால், வயிற்றில் pH அளவு சீராக இருக்க்கும். இதன் மூலம் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளை வெயில் காலங்களில் ஏற்படாது.
- உணவை அதிக சூடாக சாப்பிட வேண்டாம். வெயில் காலத்தில் சூடாக உணவை சாப்பிடும் போது குறைவாக மட்டுமே சாப்பிட முடியும். மேலும் உணவில் எண்ணெய் குறைவாக இருப்பது அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
உங்களுக்கு அருகில் கிடைக்கும் பருவகால பழங்களை சாப்பிடுவதும் வெயில் காலத்தில் உடலுக்கு நல்லது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












