You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மம்மூட்டியின் 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தை சுற்றி எழும் விமர்சனங்கள்
நடிகர் மம்மூட்டி, ரம்யா பாண்டியன் ஆகியோர் நடிப்பில் மலையாள இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் உருவான 'நண்பகல் நேரத்து மயக்கம்' திரைப்படம் அண்மையில் ஓ.டி.டி-யில் வெளியாகி சமூக ஊடகங்களில் பரவலாக விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
படத்தின் கதை என்ன?
கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலாவுக்கு குடும்பத்துடன் வருகிறார் ஜேம்ஸ் (மம்மூட்டி). சுற்றுலா முடிந்து சிறிய வேனில் திரும்பி செல்லும் போது பழனிக்கு அருகே ஒரு கிராமத்தில் திடீரென வேனை விட்டு இறங்கி ஓடும் ஜேம்ஸ், ஒரு வீட்டிற்குள் சென்று விடுகிறார்.
அவரை பின்தொடர்ந்து வரும் அவரின் மனைவியும், உறவினர்களும் ஜேம்ஸை பார்த்து திகைக்கின்றனர்.
தெரியாத நபரின் வீட்டிற்குள் செல்லும் ஜேம்ஸ், தன்னை சுந்தரம் எனக் கூறிக் கொண்டு அங்கு வாழும் நபர்களை பெயர் சொல்லி அழைக்கத் தொடங்குகிறான்.
அந்த வீட்டில் வாழும் தமிழர்களான பூ ராமு, ரம்யா பண்டியன் மற்றும் கிராமத்தினரும் என்ன நடக்கிறது என புரியாமல் முழிக்கின்றனர்.
ஜேம்ஸ் (எ) சுந்தரம், மிக இயல்பாக அவர்களின் வண்டியை எடுத்துக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறார்.
கேரளாவிலிருந்து வந்த ஜேம்ஸின் குடும்ப உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் வாழும் சுந்தரத்தின் குடும்ப உறுப்பினர்கள் அடுத்து என்ன செய்தார்கள், ஏன் இப்படி ஆனது என்பதே படத்தின் மீதிக் கதை.
ஆமேன், அங்கமாலி டைரிஸ், ஈமாயூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற மலையாள படங்களின் மூலம் புகழ்பெற்ற லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில் மம்மூட்டி தயாரிப்பில் படம் வெளியாகிறது என்ற தகவல் வெளிவந்த போது படம் குறித்து எதிர்ப்பார்ப்புகள் எழுந்தன.
ஜனவரி 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், பிப்ரவரி 23ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பலரும் இந்த படத்தை ஓடிடியில் பார்த்து பாராட்டியும், விமர்சித்தும் வருகின்றனர்.
சுவாரசியமான அம்சங்கள்
படத்தின் கதைக்களம், காட்சி அமைப்புகளை பலரும் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால் படம் தொடங்குவதற்கு முன்பே இயக்குநர் கவனத்தை ஈர்க்கிறார்.
நண்பகல் நேரத்து மயக்கம் படம் ஒரு பிளைவுட் நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து ஈர்க்கப்பட்டு உருவானது என குறிப்பிடுகிறார்.
அந்த விளம்பரத்தில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் காரைக்குடிக்கு அருகேயுள்ள வீட்டிற்குள் திடீரென நுழைந்து அந்த வீட்டில் வாழ்ந்த நபரை போல செயல்படுவார்.
மேலும் படம் தொடங்கும் போது "இறப்பு என்பது ஒருவனுக்கு உறக்கம் வருவது போன்றது, பிறப்பு என்பது உறக்கத்தில் இருந்து விழிப்பது போல" என்ற பொருள் கொள்ளும் திருக்குறளான
"உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"
என்ற குறளை காட்டுகிறார். இதிலிருந்தே படத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.
ஊடகங்களின் விமர்சனம்
எந்திரமயமான தினசரி வாழ்க்கையில் இருந்து பார்வையாளர்களை தெளியச் செய்திருக்கிறது, நண்பகல் நேரத்து மயக்கம்" என விமர்சனம் எழுதியிருக்கிறது இந்து தமிழ் திசை இணையதளம்.
"எதார்த்தம் குறையாத நடிப்பால் மம்மூட்டி ஈர்க்கிறார். படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இயல்பான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கின்றனர்," என குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக படத்தில் பின்னணி இசையாக வரும் தமிழ் சினிமா பாடல்கள், வசனம், பின்னணியில் பேசும் குரல்கள் என சினிமாவில் புது முயற்சியாக இருக்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கிராமத்து அழகை திரையில் அலங்கரிக்க உதவுகிறது என இந்து தமிழ் விமர்சனம் வழங்கியுள்ளது.
"இசையமைப்பாளர் இல்லாமல் பழைய தமிழ் பாடல்களை மட்டுமே பின்னணியில் ஒலிக்கவிட்டு இரண்டு மணி நேர படத்தை எடுத்திருப்பது ஆச்சரியமளிக்கிறது" என்று நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளம் விமர்சனம் எழுதியுள்ளது.
இயக்குநரின் அதிரடி பதிவு
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை பலரும் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரும் நேரத்தில், 'சில்லு கருப்பட்டி, பூவரசம் பீப்பி, ஏலே' படங்களின் இயக்குநரான ஹலிதா ஷமீம் தனது பேஸ்புக் பக்கத்தில் இந்தப் படம் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதில், "ஏலே படத்திற்காக நான் பார்த்து பார்த்து சேர்த்த அழகியல் யாவும் இந்த படம் நெடுக களவாடப்பட்டிருப்பது, சற்றே அயற்சியை தருகிறது. எனது படத்திற்காக தேர்வு செய்த கிராமத்திலேயே இந்த படமும் படமாக்கப்பட்டுள்ளது, அது மகிழ்ச்சியே.
ஆனால் நான் அறிமுகப்படுத்திய கிராமத்து மக்களை இந்த படத்திலும் பயன்படுத்தி எனது படத்தில் வந்த காட்சி அமைப்புகள், பின்னணி கதாபாத்திரங்கள், அழகியல் போலவே நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் காட்சிகள் வந்துள்ளன. எனக்காக நான் தான் பேச வேண்டும், ஆதங்க பட வேண்டும் என்ற சூழலில் தவிர்க்க முடியாமல் இதை பதிவிடுகிறேன்," என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
'குறும்படமாக வந்திருக்கலாம்'
நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் குறித்து சமூக ஊடகங்களிலும் சிலர் விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். டிவிட்டரில் பதிவுட்டுள்ள ஒருவர், "குறும்படமாக வந்திருக்க வேண்டிய படம், இந்த படத்தின் எடிட்டர் யாருங்க" என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், "குழந்தைகளுக்காக குத்துப்பாட்டு, வீண் சண்டை காட்சிகள் இல்லாத இந்த படத்தை பார்க்க மிஸ் பண்ணாதீங்க" என்று பதிவிட்டுள்ளார்.
அமாவாசை அன்று இறந்தவரின் ஆன்மா பூமிக்கு வந்து, குழந்தைகள் தரும் படையலை ஏற்றுக்கொள்ளும் என்பது நம்பிக்கை என இந்த படத்தின் கதையை குறிப்பிட்டுள்ளார் ஒரு பயனர்.
"மம்மூட்டியின் நடிப்புக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும்" என டிவிட்டரில் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்