புவிசார் குறியீடு: இந்திய அளவில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு - தொழில்களுக்கு பயன் என்ன?
- உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை
- 1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.
- வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.
- வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன.இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமையை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.
- புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது.
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்

பட மூலாதாரம், Getty Images
”இந்தியாவுடைய வளர்ச்சியில் கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி பெரும்பங்கு வகிக்கின்றன. இதனால் கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது.எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்” என்கிறார் சஞ்சய் காந்தி.
இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
ஏற்கனவே மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 45 பொருட்கள் புவிசார் குறியீடுகளை பெற்றிருந்தன. இந்த நிலையில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட மேலும் 11 பொருட்களுக்கு சமீபத்தில் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளன. இதனால் தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
அதிகமான புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டிற்கு அடுத்ததாக கர்நாடக மாநிலம் இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
புவிசார் குறியீடு பெறுவதனால் கிடைக்கக்கூடிய சிறப்புகள் என்ன, இதனால் கிராம பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
புவிசார் குறியீடு என்றால் என்ன?
”உணவு பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினை மற்றும் கைத்தறி பொருட்கள்,இயற்கை பொருட்கள் என ஐந்து வகையான உற்பத்தி பொருட்கள் புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெறுவதற்கு தகுதியானவை.
இப்படி கிராமப்புற பகுதிகள், மாநகரப் பகுதிகள் , சிற்றூர்கள் என இந்தியாவின் ஒவ்வொரு உள்ளூர் அல்லது வட்டாரப் பகுதிகளில் உருவாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் தரத்தை நம்பிக்கைக்குரிய முறையில் உறுதிப்படுத்தி, அதனை உலகளவில் எடுத்துச் செல்வதற்கு இந்த புவிசார் குறியீட்டு அங்கீகாரம் உதவுகிறது”என்கிறார் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், அறிவுசார் சொத்துரிமை அட்டர்னி கழகத் தலைவருமான சஞ்சய் காந்தி.
தமிழகத்தை பொறுத்தவரை காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் இந்த சஞ்சய் காந்தி. புவிசார் குறியீடு பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும், அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் பிபிசி தமிழிடம் சில தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

“1999 ஆம் ஆண்டு மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் கீழ் புவிசார் குறியீடு (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம், 1999) உருவாக்கப்பட்டு, 2002ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வட்டாரப் பகுதிகளில் உற்பத்தி ஆகக்கூடிய தனித்துவமான பொருட்களை அடையாளம் கண்டு, அதற்கான சட்ட பாதுகாப்பு வழங்குவதே இந்த புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் நோக்கம்.
வணிக சின்னம் (ட்ரேட் மார்க்), காப்புரிமை (பேடெண்ட்) மற்றும் புவிசார் குறியீடு (Geographical indication) ஆகிய மூன்று விஷயங்களும் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் வருகின்றன. இதில் புவிசார் குறீட்டை தவிர மற்ற இரண்டுமே தனி நபர்களுக்கான உரிமை நிர்ணயிப்பதாக விளங்குகின்றன.
ஆனால் புவிசார் குறியீடு மட்டுமே குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் பொதுவான உரிமையாக விளங்குகிறது. உதாரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வாங்க முடிந்தது, ஆனால் அதுவே திருநெல்வேலி இருட்டு கடை அல்வாவிற்கு நம்மால் புவிசார் குறியீடு வாங்க முடியாது” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.
”உள்ளூர் உற்பத்தியாளர்களின் வாழ்க்கை தரம் மேம்பட வேண்டுமென்பதற்காகவே,கடந்த 20 ஆண்டுகளாக நம் தமிழகத்தின் தனித்துவமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தருவதில் தீவிரமாக இயங்கி வருகிறேன். இதுவரை தமிழ்நாட்டில் மொத்தம் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதில் 37 பொருட்களுக்கு என்னுடைய தனிபட்ட முயற்சியினால் மட்டுமே புவிசார் குறியீடுகள் கிடைத்துள்ளன.
இதுதவிர நம்முடைய தமிழக அரசும் பல வேளாண் மற்றும் இயற்கை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
அங்கீகாரம் பெறுவது எப்படி?
”புவிசார் குறியீடு பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் நிறைய ஆதாரங்களையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
முதலில் குறிப்பிட்ட பொருளுக்கான விவரக்குறிப்பு, விளக்கம், பொருளின் ஆரம்பம் முதல் இறுதி வரை நடைபெறும் உற்பத்தி முறை, தனித்துவம், பொருளுக்கான சிறப்பு தன்மை, சிறப்பு மூலபொருட்கள், வேளாண் அல்லது இயற்கை பொருட்களாக இருந்தால் அது உற்பத்தியாகக் கூடிய காலநிலை விவரங்கள், மனிதர்கள் தயாரிக்கக்கூடிய கைவினைப் பொருட்களாக இருந்தால் அவர்களுடைய தனித்துவமான திறன், எந்த பகுதியில் உற்பத்தியாகிறது போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய முறையான ஆவணங்களை நாம் சமர்பிக்க வேண்டும்.
மிக முக்கியமாக அந்த பொருட்களுக்கு இருக்கும் வரலாற்று சிறப்புகளை நிரூபிக்கும் வகையிலான ஆவணங்களை நாம் அளிக்க வேண்டும். பாரம்பரியமாகவே அந்த பொருட்கள் சிறப்பு தன்மை வாய்ந்ததாக விளங்கி வருகிறது என்பதை குறிப்பிட வேண்டும். உதாரணமாக மதுரை மல்லிக்காக புவிசார் குறியீட்டை விண்ணப்பிக்கும்போது சங்க இலக்கியத்தில் இருந்த ஒரு பாடலை ஆதாரமாக சமர்ப்பித்தோம்.
மணப்பாறை முறுக்கு நூறாண்டுகளுக்கும் மேலாக தயாரிக்கப்பட்டு வருகிறது. எனவே அதனுடைய விண்ணப்பத்தின்போது மணப்பாறை முறுக்கு முதன்முதலில் யாரால், எப்போது தயாரிக்கப்பட்டது என்பது போன்ற பூர்விக ஆவணங்களை சமர்ப்பித்தோம்.

பட மூலாதாரம், Getty Images
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சில மாதங்களில், மத்திய அரசின் குழுவால் பொருட்களினுடைய உற்பத்தி முறைகள் குறித்து மேலும் சில கேள்விகள் கேட்கப்படும். அதற்கான பதிலை நாம் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
அதன்பிறகு 7பேருக்கு குறையாத நபர்களால் ஒரு குழு அமைக்கப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட துறையில் இயங்கி வருபவர்கள் இந்த குழுவில் இருப்பார்கள். அவர்களின் முன்னிலையில் நாம் நம்முடைய பொருட்கள் குறித்த சிறப்பு தன்மையை நேரில் விளக்க வேண்டும்.
நம்முடைய பதில்கள் அவர்களுக்கு திருப்தி அளித்து அனைவரும் ஒப்புக்கொண்டால், சில மாதங்களில் நம்முடைய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவது குறித்த தகவல் மத்திய அரசு நாளிதழில் வெளியிடப்படும். ஒரு மாதத்திற்கு பின் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகு, அதிகாரப்பூர்வமாக புவிசார் குறியீடு வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்” என்று கூறுகிறார் சஞ்சய் காந்தி.
”இத்தனை பெரிய செயல்முறைகள் இருப்பதால்தான், ஒரு சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது தாமதமடைகிறது. மணப்பாறை முறுக்கிற்கு பத்தாண்டுகளுக்கு முன்பாகவே விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் அதற்கு சமீபத்தில்தான் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது” எனவும் அவர் விவரிக்கிறார்.
புவிசார் குறியீடு ஏன் அவசியம்?
“இந்தியாவுடைய வளர்ச்சிக்கு கிராம பொருளாதாரங்களின் வளர்ச்சி மிகவும் முக்கியம். குறிப்பாக கிராமங்களில் உற்பத்தியாகக் கூடிய தனித்துவமான பொருட்களின் சிறப்புகளை நாம் மேம்படுத்தி காட்டுவது மிகவும் அவசியமாகிறது. இது கிராமங்களின் வளர்ச்சியை உயர்த்துவதோடு மக்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கிறது. எனவே புவிசார் குறியீடு என்பது ஒரு அங்கீகாரம் மட்டுமல்ல, அது நாட்டின் வளர்ச்சிக்கான ஒரு திறவுகோல்” என்கிறார் சஞ்சய் காந்தி.
அவர் தொடர்ந்து பேசும்போது, “நம்முடைய தனித்துவமான உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவது மிகவும் அவசியம். ஏனென்றால், புவிசார் குறியீடு பெறுவதற்காக விண்ணப்பிக்கப்படும் படிவத்தில், அந்த குறிப்பிட்ட பொருட்கள் எந்த ஊர் அல்லது வட்டாரம் அல்லது மாவட்டத்தில் உற்பத்தியாகிறது என்பது குறித்து குறிப்பிடப்படும்.
எனவே புவிசார் குறியீடு பெற்ற பிறகு எந்த வட்டாரப் பகுதியை குறிப்பிட்டு விண்ணப்பிக்கப்பட்டதோ, அந்த குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மட்டும்தான் அந்த பொருள் சம்பந்தப்பட்ட உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் விற்பனைகளில் ஈடுபட முடியும்.
குறிப்பாக சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்ற ஊர்களில் தயாரிக்கப்பட்டு வந்தாலும்,புவிசார் குறியீடு பெற்ற சிறப்புதன்மையை பயன்படுத்தி அவர்களால் வியாபாரம் செய்ய முடியாது. உதாரணமாக சேலத்தில் தயாரிக்கும் முறுக்கை மணப்பாறை முறுக்கு என்று கூறி சந்தைப்படுத்த முடியாது, விழுப்புரத்தில் விளையும் மல்லிகை பூக்களை மதுரை மல்லி என்று கூறி ஏற்றுமதி செய்ய முடியாது.

பட மூலாதாரம், Getty Images
இதன் மூலம் ஒவ்வொரு உள்ளூர் உற்பத்தி பொருட்களின் எண்ணிக்கைகளும் உயர்கின்றன, இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களின் வியாபாரம் பெருகி அவர்களின் பொருளாதார சூழல் மேம்படுகிறது.
காஞ்சிபுரம் பட்டு என்றால் முன்பு எங்கு வேண்டுமானாலும் சென்று மக்கள் வாங்கி கொண்டிருந்தனர். ஆனால் புவிசார் குறியீடு பெற்ற பிறகு, பட்டு வாங்குவதற்காகவே காஞ்சிபுரம் செல்லும் குடும்பங்களை இன்று நம்மால் காணமுடிகிறது. அதேபோல் கோவில்பட்டி மிட்டாய் என்று பெயரிட்டு அனைத்து ஊர்களிலும் உற்பத்தி செய்துகொண்டிருந்தார்கள்.
தற்போது புவிசார் குறியீடு பெற்ற பிறகு அப்படி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகிறது. இதன்மூலம் கோவில்பட்டியில் கடலைமிட்டாய் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு பலன் கிடைக்கிறது” என்று சஞ்சய் காந்தி விவரிக்கிறார். இதேபோல் ஒவ்வொரு பகுதியின் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கும் வெவ்வேறு வகைகளில் பயன்கள் கிடைக்கின்றன.
இன்று தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான கைவினை மற்றும் கைத்தறி பொருட்களுக்கு புவிசார் குறியீடு வாங்கிவிட்டோம். ஆனால் இன்னும் தனித்துவமான வேளாண் மற்றும் இயற்கை பொருட்கள் பெரும் எண்ணிக்கையில் மீதம் இருக்கின்றன. இனி அவற்றுக்கு புவிசார் குறியீடு வாங்கும் முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும் ” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












