ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது ஏன்? வரலாறு சொல்வது என்ன?

பட மூலாதாரம், ANI
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் போட்டியிடுவதற்கான காங்கிரஸ் வேட்பாளர்களை அக்கட்சி வெள்ளிக்கிழமை காலை அறிவித்துள்ளது.
இதில் திடீர் திருப்பமாக ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே(மே 3) கடைசி நாளாகும்.
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும். அவரை எதிர்த்து பாஜக தரப்பில் தினேஷ் பிரதாப் சிங்போட்டியிடுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் சோனியா காந்தியை எதிர்த்து களமிறங்கிய இவர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
இந்த தொகுதியில் 2004 முதல் 2024 வரை கிட்டத்தட்ட 20 வருடங்களாக சோனியா காந்தியே மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார்.
ஆனால் இந்த முறை அவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ள நிலையில், ரேபரேலி தொகுதியில் போட்டியிடவில்லை.
அதேபோல், வழக்கமாக ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் இந்த முறை கிஷோரி லால் சர்மாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது. அவருக்கு எதிராக பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.
கடந்த முறை அமேதியில் ராகுல் காந்தியை தோற்கடித்து ஸ்மிருதி இரானி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முறை அமேதி அல்லது ரேபரேலி ஆகிய ஏதாவது ஒரு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வேட்பாளர் பட்டியல் அந்த ஊகங்களை பொய்யாக்கியுள்ளது.
அமேதி தொகுதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டியிடுவது குறித்து தனது சமூக வலைதளத்தில் கருத்தை பகிர்ந்திருந்த பிரியங்கா காந்தி, " எங்களது குடும்பத்திற்கும், கிஷோரி லால் சர்மாவுக்கும் பல ஆண்டுகளாகவே உறவு நீடித்து வருகிறது. அவர் எப்போதும் அமேதி மற்றும் ரேபரேலி மக்களுக்கு சேவை செய்வதில் முழு மனதுடன் ஈடுபட்டுள்ளார். சமூக சேவையின் மீது அவருக்குள்ள ஆர்வமே அதற்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.
மேலும், “இன்று காங்கிரஸ் கட்சியால் அமேதி வேட்பாளராக கிஷோரி லால் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கிஷோரி லால் ஜியின் விசுவாசமும், அர்ப்பணிப்பும் அவருக்கு இந்தத் தேர்தலில் வெற்றியைத் தேடித்தரும்” என்று கூறியுள்ளார் பிரியங்கா.

ராகுல் காந்தியும், அமேதி தொகுதியும்
2004 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து அமேதி தொகுதியில் மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்று வந்த ராகுல் காந்தியை, 2019ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடையச் செய்தார் பாஜகவின் ஸ்மிருதி இராணி.
ஆனாலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் கிடைத்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் ராகுல்.
அதேபோல் இந்த முறையும் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் ராகுல் காந்தி, வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
1999ஆம் ஆண்டுக்கு பிறகு காந்தி குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் அமேதி தொகுதியில் போட்டியிடாதது இதுவே முதல்முறையாகும்.
சோனியா காந்தியும் கூட 1999 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் இருந்துதான் அரசியலுக்கு வந்தார்.
அதன்பிறகு, 2004 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில், ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் சோனியா காந்தி.
அதே ஆண்டு அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டைத் தவிர, 1977 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளிலும் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு முறையும் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியிடவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அமேதி மற்றும் ரேபரேலியின் வரலாறு
அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகள் காந்தி குடும்பத்திற்கே உரித்தான இடங்களாக கருதப்படுகின்றன.
1952 மற்றும் 1957 ஆம் ஆண்டுகளில் ரேபரேலியில் இருந்து தான் பெரோஸ் காந்தி மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இதே தொகுதியில் 1967 இல் போட்டியிட்ட இந்திரா காந்தி மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
மீண்டும் 1971ஆம் ஆண்டில் ரேபரேலியில் இந்திராகாந்தி வெற்றி பெற்றிருந்தாலும், அவசர நிலைக்கு பிறகு 1977 தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
ஆனால், 1980ல் நடந்த தேர்தலில் இதே ரேபரேலி தொகுதியில் மீண்டும் வெற்றிபெற்றார் இந்திரா காந்தி. அதே சமயம் இந்த தேர்தலில் ஆந்திராவின் மேடக் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார்.
1980இல் இருந்துதான் அமேதி தொகுதியில் காந்தி குடும்பத்தின் அரசியல் பயணம் தொடங்கியது. சஞ்சய் காந்தி இங்கிருந்துதான் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவுக்கு பிறகு 1981ஆம் ஆண்டு இதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு சென்றார் ராஜிவ் காந்தி.
அதற்கு பின் அவர் இறக்கும் வரை இதே தொகுதியில் தொடர் வெற்றிகளை பெற்று மக்களவை உறுப்பினராக நீடித்து வந்தார் அவர்.
இதில் 1991 முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்த தொகுதியில் காந்தி குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், ANI
கிஷோரி லால் சர்மா யார்?
அமேதியில் களமிறங்கியுள்ள கிஷோரி லால் சர்மா, நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், தன்னைப்போன்ற ஒரு சிறு தொழிலாளிக்கு தங்களுடைய குடும்ப தொகுதியின் பொறுப்பையே வழங்கும் கார்கே, ராகுல், சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார் கிஷோரி லால் சர்மா.
மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னால் முடிந்த சிறப்பான பணியை செய்வேன் என்று கூறியுள்ள அவர், “1983ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் ஊழியராக இங்கு வந்தேன். ராஜீவ் காந்திதான் என்னை அழைத்து வந்தார். அன்றிலிருந்து இங்குதான் பணியாற்றி வருகிறேன்” என்று கூறினார்.
“சோனியா ஜியை அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட செய்தோம். 1981ஆம் ஆண்டை தவிர மற்ற அனைத்து சூழல்களிலும் ராஜீவ்ஜியோடு இணைந்து பணியாற்றியுள்ளோம்” என்று கூறியுள்ளார் அவர்.
இப்போது ராகுல் காந்தி போட்டியிலிருந்து வெளியேறிவிட்டாரா என்று கேள்வியெழுப்பிய போது, “இல்லை, அவர் ஒட்டுமொத்த நாட்டிற்குமான போட்டியில் களம் கண்டுள்ளார்” என்றார் கிஷோரி லால் சர்மா.

பட மூலாதாரம், Getty Images
இவர் இன்று தனது வேட்புமனு தாக்கலை சமர்ப்பிக்க உள்ளார். கிஷோரி லால் சர்மா ரேபரேலி தொகுதியில் சோனியாவின் பிரதிநிதியாக இருந்து வந்தவர்.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் இதழின் செய்தி அறிக்கையின்படி, அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காந்தி குடும்ப தொடர்பான விவகாரங்களுக்கு கிஷோரி லால் சர்மாவே தொடர்பு புள்ளியாம்.
உண்மையில் பஞ்சாபை சேர்ந்த இவர், 1983ஆம் ஆண்டு காங்கிரஸ் ஊழியராக இந்த தொகுதிக்கு வந்துள்ளார்.
இவர் ராஜீவ் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.
ராஜீவ் காந்தி இறப்புக்கு பிறகு, இவர் தொடர்ந்து அமேதி தொகுதியில் பணியாற்றி வந்துள்ளார். குறிப்பாக 1990களில் காந்தி குடும்பம் இந்த தொகுதியில் இருந்து விலகியிருந்த காலகட்டத்தில் இவர் மிகத்தீவிரமாக பணியாற்றியுள்ளார்.
1999ஆம் ஆண்டு சோனியா காந்தி போட்டியிட்ட முதல் தேர்தலில் கிஷோரி லால் சர்மா முக்கியமான பாத்திரம் வகித்ததாக கூறப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












