எத்தியோப்பியா இளவரசர் உடலை திருப்பி தர மறுக்கும் பிரிட்டன் அரச குடும்பம் - வேதனையில் வம்சாவளிகள்

பட மூலாதாரம், Alamy
- எழுதியவர், ஜிபாட் டமிராட் மற்றும் செசிலியா மக்குலே
- பதவி, பிபிசி நியூஸ்
எத்தியோப்பியா நாட்டின் இளவரசராக இருந்த அலிமாயேஹு, 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டனில் மரணம் அடைந்தார். வின்ட்சர் கோட்டை வளாகத்தில் புதைக்கப்பட்ட அவரது உடலின் எஞ்சிய பாகங்களை திரும்பத் தரும்படி எத்தியோப்பிய அரச வம்சாவளியினர் விடுத்துள்ள கோரிக்கையை பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் நிராகரித்துள்ளது.
எத்தியோப்பியா இளவரசராக இருந்த அலிமாயேஹு அவரது ஏழாவது வயதில் அனாதையாக பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டார். பிரிட்டனுக்கு வரும் வழியில் அவரின் தாயார் இறந்ததை அடுத்து, அந்த சிறு வயதில் அவருக்கு அப்படியொரு துயர நிலை ஏற்பட்டது.
இளவரசர் அலிமாயேஹுவின் பரிதாப நிலையை அறிந்த விக்டோரியா மகாராணி அவர் மீது அக்கறை கொண்டதுடன் கல்வி பயிலவும் ஏற்பாடு செய்தார். ஆனால் தனது 18 வயதில் அலிமாயேஹு இறக்கவே, அவரது உடல் பாரம்பரிய சிறப்புமிக்க வின்ட்சர் கோட்டை வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது உடலின் எஞ்சிய பாகங்களை எத்தியோப்பியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரச வம்சாவளியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“எப்பியோப்பியர்களாகவும், அரச குடும்ப வழி வந்தவர்கள் என்ற முறையிலும் இளவரசர் அலிமாயேஹுவின் எஞ்சிய உடல் பாகங்கள் எத்தியோப்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஏனென்றால் அவர் பிரிட்டனில் பிறந்தவர் அல்ல” என்று எத்தியோப்பியா அரச வம்சாவளியைச் சேர்ந்த பாசில் மினாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
எத்தியோப்பியா மீது படையெடுத்த பிரிட்டிஷ் அரசு
“பிரிட்டனில் இறந்தார் என்பதற்காக இளவரசரின் உடலை அங்கேயே அடக்கம் செய்தது சரியல்ல,” எனவும் அவர் கூறினார்.
எத்தியோப்பிய அரச வம்சாவளியினரின் இந்தக் கோரிக்கை தொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனை செய்தித் தொடர்பாளர், பிபிசிக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.
அதில், ‘வின்ட்சர் கோட்டை வளாகத்தில் புதைக்கப்பட்ட இளவரசர் அலிமாயேஹுவின் உடலை தற்போது தோண்டி எடுத்தால், அது அவரது உடலுக்கு அருகே புதைக்கப்பட்டுள்ள பிறரின் உடல்களுக்குப் பாதிப்பாக அமையக்கூடும்.
இளவரசரின் உடலுக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளவர்களின் உடல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், அவரின் உடலைத் தோண்டி எடுப்பது சாத்தியமில்லை,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் அலிமாயேஹுவின் நினைவு போற்றப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வின்ட்சர் கோட்டை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலய நிர்வாகம் நன்கு உணர்ந்துள்ளது. ஆனால் அதேநேரம், இறந்தவர்களின் மேன்மையைக் காக்க வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உள்ளது என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இளவரசர் அலிமாயேஹு அடக்கம் செய்யப்பட்டுள்ள வின்ட்சர் கோட்டைக்கு வருகை புரிவது தொடர்பான எத்தியோப்பியா அரசு பிரதிநிதிகளின் கோரிக்கையைக் கடந்த காலங்களில் அரண்மனை நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இளவரசர் அலிமாயேஹுவின் இளம் வயது மரணம், ஏகாதிபத்திய நடவடிக்கைகள் மற்றும் ராஜதந்திர உத்திகளில் ஏற்பட்ட தோல்வியின் முடிவாகவே பார்க்கப்படுகிறது.
இளவரசர் அலிமாயேஹுவின் தந்தையும், எத்தியோப்பியா அரசருமான இரண்டாம் டிவோத்ரோஸ், ஐரோப்பாவில் தனது ராஜாங்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகளை 1862இல் மேற்கொண்டார். இந்த முயற்சி கைகூட பிரிட்டன் அரச குடும்பத்தின் ஒத்துழைப்பை அவர் நாடினார். இதுதொடர்பாக அவர் விக்டோரியா மகாராணிக்கு எழுதிய கடிதங்களுக்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை.
ராணியின் இந்த மெளனத்தால் ஆத்திரமடைந்த அரசர் டிவோத்ரோஸ், பிரிட்டன் தூதர் உள்ளிட்ட சில ஐரோப்பியர்களை பணயக் கைதிகளாக சிறை வைத்தார்.
இதனால் கோபமடைந்த பிரிட்டிஷ் அரசு, எத்தியோப்பியா மீது அதிரடியாகப் போர் தொடுத்தது. பிரிட்டன் மற்றும் இந்திய துருப்புகள் 13 ஆயிரம் பேர் கொண்ட பெரும் படை, பிணைக் கைதிகளை மீட்கும் நோக்கத்தோடு எத்தியோப்பியாவை நோக்கி முன்னேறியது.
1868 ஏப்ரலில் வடக்கு எத்தியோப்பியாவில் மக்டாலா பகுதியில் அமைந்திருந்த அரசர் டிவோத்ரோஸின் மலைக் கோட்டையை பிரிட்டிஷ் படை முற்றுகையிட்டது. இந்த முற்றுகை சம்பவம் நிகழ்ந்த சில மணி நேரத்திலேயே எத்தியோப்பியா படையை பிரிட்டிஷ் கூட்டுப் படை முறியடித்தது.

பட மூலாதாரம், Alamy
சூறையாடப்பட்ட கலைப் பொருட்கள்
பிரிட்டிஷ் படையினரிடம் சிக்கி, பிரிட்டனில் சிறைவாசம் அனுபவிப்பதைவிட, தமது உயிரை மாய்த்துக் கொள்வது மேல் என்று அரசர் டிவோத்ரோஸ் முடிவு செய்தார். அவரது இந்த முடிவு, எத்தியோப்பியா மக்கள் மத்தியில் அவரை வரலாற்று நாயகனாக உயர்த்தியது.
எத்தியோப்பியா போரின் வெற்றிக்குப் பின், அந்த நாட்டிலிருந்த மதம் மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் ஆயிரக்கணக்கான கலைப்பொருட்களை பிரிட்டிஷ் படை சூறையாடியது. தங்கக் கிரீடங்கள், ஆபரணங்கள், ஆடைகள் மற்றும் கையெழுத்து பிரதிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
விலைமதிப்பற்ற அந்த கலைப்பொருட்கள், ஐரோப்பாவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள், சில தனியார் நிறுவனங்கள் வசம் இன்று உள்ளன. அந்த கலைப்பொருட்களை எத்தியோப்பியாவில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு வர அன்று டஜன் கணக்கில் யானைகளும், நூற்றுக்கணக்கான கழுதைகளும் தேவைப்பட்டிருக்கலாம் என்று கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
பிரிட்டன் படையினர் நாடு திரும்பியபோது எத்தியோப்பியா மகாராணி திர்வொர்க் வுபே மற்றும் அவரது மகனும், இளவரசருமான அலிமாயேஹுவையும் தங்களுடன் அழைத்து வந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் பல இன்னல்களுக்கு ஆளான இளவரசர்
எத்தியோப்பிய அரசர் டிவோத்ரோஸின் எதிரிகளால் அவரது மனைவியும், இளவரசர் அலிமாயேஹும் கொல்லப்படலாம் என்று பிரிட்டிஷ் படையினர் கருதியிருக்கலாம். அதன் காரணமாகவே அவர்கள் இருவரையும் தங்களோடு பிரிட்டனுக்கு அழைத்து வந்திருக்கலாம் என்று ஆண்ட்ரூ ஹெவன்ஸ் என்ற வரலாற்று ஆசிரியர், தனது ‘The Prince and the Plunder recounts Alemayehu's life’ என்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனுக்கு வரும் வழியில் மகாராணி திர்வொர்க் வுபே இறந்துவிடவே தாய், தந்தையை இழந்த ஆதரவற்ற சிறுவனாக இளவரசர் அலிமாயேஹு, 1868 ஜூனில் பிரிட்டனுக்கு அழைத்து வரப்பட்டார்.
அந்த சிறுவயதில் இளவரசருக்கு ஏற்பட்ட இக்கட்டான நிலையை அறிந்து, அவர் மீது விக்டோரியா ராணி இரக்கம் கொண்டார். பிரிட்டனின் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்திருந்த தமது விடுமுறை கால ஓய்வு இல்லத்தில் இளவரசர் அலிமாயேஹுவை விக்டோரியா ராணி சந்தித்தார்.
இளவரசருக்கு பொருளாதார ரீதியாக உதவ ஒப்புக்கொண்ட அவர், எத்தியோப்பியாவில் இருந்து இளவரசருடன் பிரிட்டன் வந்திருந்த கேப்டன் திரிஸ்டம் சார்லஸ் சாயர் ஸ்பீடியை அவருக்கு பாதுகாவலராகவும் நியமித்தார்.
ஆரம்பத்தில் சிறிது காலம் இளவரசரும், அவரது பாதுகாவலரும் விக்டோரியா மகாராணியின் ஓய்வு இல்லம் அமைந்திருந்த ஐல் ஆஃப் வைட் தீவில் ஒன்றாக வசித்தனர். அதன் பின்னர் கேப்டன் ஸ்பீடி, இளவரசரை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அழைத்துச் சென்றார்.
ஆனால், இளவரசர் அலிமாயேஹு முறையாக கல்வி கற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து அவர் ரக்பியில் இருந்த பிரிட்டிஷ் பொதுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அங்கு அவர் மகிழ்ச்சியாக இல்லாததையடுத்து, சண்ட்ஹர்ஸ்டில் இருந்த ராயல் ராணுவ கல்லூரிக்கு மாற்றப்பட்டார். அங்கு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான அவர் வீடு திரும்ப விரும்பினார். ஆனால் அவரது விருப்பம் நிறைவேறவில்லை என்று வரலாற்று ஆய்வாளர் ஹெவன்ஸ் தனது கடிதங்களில் குறிப்பிடுகிறார்.
“இளவரசரை நான் நன்கு அறிந்தவன் போல் உணர்கிறேன்” என்று எத்தியோப்பிய அரச வம்சாவளியைச் சேர்ந்த அபேபெக் காசா பிபிசியிடம் கூறினார்.
“கருப்பின மக்களின் பூமியான ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளவரசர் அலிமாயேஹு அங்கு வீடற்றவர் போல் இருந்துள்ளார்” என்றும் காசா வேதனையுடன் தெரிவித்தார்.
இறுதியாக, லீட்சுக்கு சென்ற இளவரசருக்கு அங்கு தனியாக கல்வி போதிக்கப்பட்டது. ஆனால் அங்கு அவர் நோய்வாய்ப்பட்டார். ஒருவேளை அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த இளவரசர், ஒரு கட்டத்தில் தமக்குத் தரப்பட்ட மருந்து விஷமாக இருக்கலாம் என்று எண்ணி அதை உட்கொள்ள மறுத்தார்.
நாடு கடத்தப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1879இல் தனது 18வது வயதில் இளவரசர் அலிமாயேஹு மரணத்தைத் தழுவினார்.
இளவரசரின் மரணம் பிரிட்டன் நாளிதழ்களில் முக்கியச் செய்தியானது. அவரது மரணம் குறித்த வருத்தத்தை விக்டோரியா மகாராணி தமது நாட்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இளவரசரின் மரணச் செய்தி
“இளவரசரின் மரணச் செய்தியை தந்தி மூலம் அறிந்தபோது மிகவும் வேதனையாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. அந்த நல்ல இளைஞர் இன்றைய காலைப் பொழுதில் காலமாகிவிட்டார்” என்று நாட்குறிப்பில் தமது உணர்வை வெளிப்படுத்தி இருந்தார் விக்டோரியா மகாராணி.
“அவரது வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை. மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவராக இருந்த அவர், தன் வாழ்நாளில் பல்வேறு இன்னல்களை அனுபவித்தார்” என்றும் விக்டோரியா ராணி குறிப்பிட்டிருந்தார்.
மறைந்த இளவரசரின் உடலை வின்ட்சர் கோட்டை வளாகத்தில் அடக்கம் செய்த மகாராணி ஆவன செய்தார்.
பிரிட்டனில் உயிர்நீத்த எத்தியோப்பிய இளவரசர் லிமாயேஹுத்தின் உடலை திரும்பத் தர வேண்டும் என்று கோரிக்கை எழுவது ஒன்றும் புதிதல்ல.

பட மூலாதாரம், Alamy
2007இல் எத்தியோப்பியாவின் அதிபராக இருந்த கிர்மா வோல்ட் ஜியோர்ஜிஸ், ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு இதுதொடர்பாக முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
“இளவரசரின் இறந்த உடல் இன்னமும் ஓர் அயல் நாட்டில் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. அவரது உடலை திரும்பப் பெற விரும்புகிறோம்” என்கிறார் எத்தியோப்பிய அரச வம்சாவளியைச் சேர்ந்த அபேபெக்கின் மனைவி.
“ஒரு துயரமான வாழ்க்கையை வாழ்ந்த இளவரசரை எண்ணும்போது தமக்கு கண்ணீர் வருவதாகக் கூறும் அவர், அவரது உடலைத் திரும்ப தருவதற்கு பிரிட்டன் அரசு ஒப்புக்கொண்டால், அதையே அவர் உயிருடன் திரும்ப வந்ததாகக் கருதுவேன்” என்று உணர்ச்சி ததும்ப கூறுகிறார் அவர்.
பிரிட்டனின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்டுள்ள மூன்றாம் சார்லஸ் தங்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அபேபெக்கின் மனைவி.
“எத்தியோப்பிய அரச வம்சத்தினரின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது, நல்லிணக்கத்தின் அடையாளமாக இருக்கும்” என்கிறார் பிரிட்டன் - எத்தியோப்பியா உறவுகள் குறித்து ஆராயும் நிபுணரும், விரிவுரையாளருமான அலுவா பன்குர்ஸ்ட்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












