நெருக்கம் காட்டும் சீனா - இந்தியா நம்பலாமா?
உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் இடம்பெறும் இந்தியாவும் சீனாவும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளாகவும் உள்ளன.
பல ஆண்டுகளுக்குப் பிறகு இரு நாடுகளின் உயர்மட்டத் தலைமைகளும் மிகப்பெரிய மேடையில் சந்திப்பது சர்வதேச அரசியலில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
லடாக்கில் 2020 ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலை இன்னும் மீட்டெடுக்கப்படாத நிலையில் பிரதமர் மோதி சீனா சென்றிருக்கிறார். சீனா, இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகப் பங்காளி. கடந்த ஆண்டு, சீனாவுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் சுமார் 127.7 பில்லியன் டாலராக இருந்தது.
இந்திய தொழில்துறை சீனாவை சார்ந்திருக்கும் நிலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024ஆம் ஆண்டில் சீனாவில் இருந்து 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணுவியல் மற்றும் மின் சாதனங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்தியாவும் சீனாவும் நெருங்கி வருவதற்கு அமெரிக்கா மட்டுமே காரணமாக இருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தியா, சீனாவில் இருந்து மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்கிறது. இந்திய தொழில்கள் இன்னும் பல துறைகளுக்கான மூலப் பொருட்களுக்காக சீனாவையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அத்துடன், சீனாவில் பொருட்கள் மலிவாகக் கிடைப்பதால், இந்திய சில்லறை சந்தையில் அவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது.
சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியா, சீனாவுக்கு மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இருக்கிறது. ஐடி மற்றும் மருந்துத் துறைகளில் இந்தியா சிறப்பாகச் செயல்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், இன்றைய காலகட்டத்தில் இந்தியா, சீனா இரு நாடுகளில், யாருடைய தேவை யாருக்கு அதிகமாக இருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், சீனாவுக்கு இந்தியா அதிகம் தேவை என்பதுதான் நிலைமை என்று கூறுகிறார் பேராசிரியர் ஸ்ரீபர்ணா பாடக்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



