'10 அடிக்கு ஒரு பாம்பு': உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா?

    • எழுதியவர், பாரா பட்டையா
    • பதவி, பிபிசி தெலுங்கு

பலருக்கும் பாம்புகள் என்றால் பயம்.

அவற்றின் பற்களில் உள்ள விஷம், திடீரென தாக்கும் தன்மை, "ஸ்...ஸ்..." என அவை சீறும் முறை போன்றவற்றை இந்த பயத்திற்கான காரணங்களாகக் கூறலாம். ஆனால் அனைத்து பாம்புகளும் நச்சுத்தன்மை கொண்டவை அல்ல. ஒரு சில பாம்புகள் மட்டுமே ஆபத்தானவை.

பல்லுயிர் பாதுகாப்பில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

பாம்புகளால் மிக வேகமாகச் செல்ல முடியும். கருப்பு பைத்தான் மணிக்கு 19 கி.மீ வரையில் வேகம் கொண்டது. அதேபோல, பக்கவாட்டில் நகரும் திறன் கொண்ட சைட்-வைண்டிங் ரேட்டில்ஸ்னேக் பாம்பு மணிக்கு 29 கி.மீ வரை வேகம் கொண்டது.

பாம்புகளால் உணவை மென்று சாப்பிட முடியாது. எனவே, இரையை முழுவதுமாக விழுங்கிவிட்டு மெதுவாக ஜீரணிக்கின்றன. சில வகைப் பாம்புகள் முதலை போன்ற பெரிய உயிரினத்தையும் விழுங்கி ஜீரணிக்கும் திறன் கொண்டவை.

உலகளவில் 4,000க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் 600 இனங்கள் நச்சுத்தன்மை கொண்டவை.

அதில் 200 இனங்கள் மட்டுமே மனித உயிரைப் பறிக்க வல்ல நச்சுத்தன்மையைக் கொண்டிருப்பதாக ஊர்வன விலங்குகள் பற்றிய தரவு தெரிவிக்கிறது.

அதிகம் ஆபத்தான நச்சுப் பாம்பான சுருட்டை விரியன் (Saw-scaled Viper) இது மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் சில பகுதிகளில் காணப்படுகிறது. இந்தப் பாம்பு கடியால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைவதாக, 'ப்ரெண்ட்ஸ் ஆப் ஸ்னேக்ஸ் சொசைட்டி' அமைப்பின் பொதுச் செயலாளர் அவிநாஷ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இது அதிக விஷத்தன்மை கொண்ட பாம்புகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

பாம்புகளின் எண்ணிக்கை கணக்கிடப்படுவது எப்படி?

பாம்புகள் இயல்பிலேயே தனித்து வாழ்பவை என்பதால், அவற்றின் எண்ணிக்கையைக் கணக்கிடுவது கடினம்.

உலகிலுள்ள பாம்புகளின் எண்ணிக்கை தெளிவாக இல்லை என்றாலும், கிடைக்கக்கூடிய சில தரவுகளின் அடிப்படையில் எந்த நாடுகளில் அதிக பாம்பு இனங்கள் உள்ளன என்பது குறித்த புள்ளிவிவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

மற்ற பாலூட்டிகள் மற்றும் பறவைகளைப் போலன்றி, காடுகள் நிறைந்த பகுதிகளில் பாம்புகளை எண்ணுவது கடினம்.

ஊர்வன ஆராய்ச்சியாளர்கள் (நீர்நில வாழ்விகள், ஊர்வன உயிரினங்களை ஆய்வு செய்யும் உயிரியலாளர்கள்), கள ஆய்வுகள் மற்றும் பல்லுயிர் தொகுப்புகளைப் பயன்படுத்தி பாம்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுகின்றனர்.

இவை தவிர, அவர்கள் பல்வேறு உயிரினங்கள் எவ்வாறு பரவியுள்ளன என்பது தொடர்பான வரைபடங்கள், உள்ளூர்வாசிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் பாம்புக்கடி சம்பவங்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் இதற்குப் பயன்படுத்துகின்றனர்.

இந்தக் கணக்கீடுகளின் அடிப்படையில், உலக மக்கள்தொகை மதிப்பாய்வு வலைத்தளம் மெக்சிகோவில் அதிக பாம்பு இனங்கள் இருப்பதாகக் கூறியுள்ளது.

மெக்சிகோ

மெக்சிகோவில் மட்டும் 438 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அங்கு அதிக பாம்புகள் வசிக்கும் பகுதிகளில், ஒவ்வொரு பத்து அடி தூரத்திற்கும் ஒரு பாம்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மெக்சிகோவில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ரேட்டில்ஸ்னேக் இனங்கள் உள்ளன. மெக்சிகோவில் பாம்புகள் இல்லாத பகுதி என எதுவும் இல்லை.

மெக்சிகோவின் 32 மாநிலங்களில் எங்கு சென்றாலும் பாம்புகளைக் காணலாம்.

அங்கு பாம்புகள் அதிகமாக இருப்பதற்குக் காரணம், சாதகமான காலநிலையும் உணவு பரவலாகக் கிடைப்பதும்தான்.

மெக்சிகோவின் மேற்குக் கடற்கரையில் காணப்படும் குரோட்டலஸ் பசிலிஸ்கஸ் என்ற ராட்டில்ஸ்னேக் ஆறு அடி நீளம் வரை வளரக் கூடியது.

மெக்சிகோவில் வேட்டைக்காரர்களிடம் இருந்து பாம்புகளைப் பாதுகாக்க சிறப்புச் சட்டங்கள் உள்ளன.

பிரேசில்

அமேசான் மழைக்காடு இருப்பதால் பிரேசில் இந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமளிக்கும் விஷயமல்ல.

பிரேசிலில் 420 வகையான பாம்புகள் உள்ளன. அமேசான் மழைக் காடுகள் உலகிலேயே பாம்புகள் மிகப்பெரிய அளவில் இனப்பெருக்கம் செய்யும் இடமாகக் கருதப்படுகின்றது.

இந்தக் காடுகள் பல ஆண்டுகளாகப் பல்வேறு உயிரினங்களுக்குத் தாயகமாக இருந்து வருகின்றன.

பிரேசிலில் உள்ள மொத்த பாம்பு இனங்களில் 15% சதவிகிதம் வகைகள் நச்சுப் பாம்புகள். பிரேசிலில் நகரங்களிலும்கூட பாம்புகளைக் காண முடியும்.

நகரங்களில் பிளைண்ட் ஸ்னேக், ரேட் ஸ்னேக் ஆகிய நஞ்சற்ற பாம்புகளையும், பேரட் ஸ்னேக் எனப்படும் வீரியம் குறைந்த நஞ்சைக் கொண்ட பாம்புகளையும் எளிதாகப் பார்க்க முடியும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

உலகின் இரண்டாவது நீளமான பாம்பாக அங்கீகரிக்கப்பட்ட அனகோண்டாவும் பிரேசிலில் காணப்படுகிறது. அடர்த்தியான தோலும், உடல் அமைப்புமுமே அதன் அச்சுறுத்தும் தோற்றத்திற்குக் காரணமாகின்றன.

இந்தோனீசியா

மலைப் பகுதிகளில் மலையேற்றம் செய்வதும், அங்குள்ள இயற்கையான சூழலைச் சுற்றிப் பார்ப்பதும் சாகச விரும்பிகளின் கனவுத் திட்டங்களில் ஒன்று. மற்ற நாடுகளில் இது அவ்வளவு கடினம் அல்ல.

ஆனால், இந்தோனீசியாவின் ஜாவா அல்லது சுமத்ரா பகுதிகளில் இப்படிப்பட்ட ஒரு சாகச பயணத்தைத் தொடங்கி முடிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம்.

இந்தப் பகுதிகளில் நீங்கள் ஒரு மலையில் ஏறினாலும் சரி அல்லது அங்குள்ள காடுகளின் வழியாக உங்களது பயணத்தைத் தொடங்கினாலும் சரி, இலக்கை அடைவதற்கு முன்பு பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இங்குள்ள ஆபத்தான பாம்புகள் உங்கள் உடலின் ரத்த நாளங்களில் வலுவான விஷத்தை செலுத்துகின்றன.

அப்பகுதியில் காணப்படும் தேள்கள் கடித்தால் கடும் வலியுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. பவளப் பாம்பின் (coral snake) நஞ்சு, உடலில் உள்ள திசுக்களைச் சேதப்படுத்திவிடும்.

இதை வாசிக்கும்போது மிகையாகத் தோன்றலாம். ஆனால் இந்தோனீசியாவின் பாம்புகளை எடுத்துக்கொண்டால், இந்த விவரணையே சற்று குறைவுதான்.

இந்தோனீசியாவில் 376 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. சில வகைப் பாம்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கடந்த 2024ஆம் ஆண்டு தெற்கூ சுலவேசியில் உள்ள ஏரி ஒன்றில் ஹைப்சிஸ்கோபஸ் இந்தோனெசினிஸ் என்ற அரிய நீர்ப்பாம்பின் இருப்பு முதன்முதலில் உலகிற்கு தெரிய வந்தது.

இந்தியா

இந்தியாவும் இந்தப் பட்டியலில் இருப்பது ஆச்சரியமல்ல. காரணம், இந்தியா மிதவெப்ப மண்டலத்தில் உள்ளது.

ஒரு பக்கம் பாலைவனம், மறுபுறம் பனி மலைகள், நாட்டின் நடுவில் பெரிய மலைத் தொடர்கள், பரந்த சமவெளிகள் என இந்தியா நிலவியல் பன்முகத்தன்மையின் மையமாகத் திகழ்கிறது.

இந்தியாவில் 300க்கும் மேற்பட்ட பாம்பு இனங்கள் உள்ளன.

கடந்த 2021ஆம் ஆண்டு இமயமலையில் உள்ள மரு முலா கிராமத்தில் உள்ள சூரா பள்ளத்தாக்கில் குக்ரி வகையைச் சேர்ந்த ஒரு பாம்பு காணப்பட்டது.

இந்தியாவில் எல்லா பிராந்தியங்களிலும் பாம்புகள் உள்ளன. சாம்பல் நிற கீல்பேக் வகை உள்படப் பல நச்சுப் பாம்புகள் உள்ளன.

இந்தியாவில் மிகவும் ஆபத்தான நச்சுப் பாம்புகளில் ஒன்றான சுருட்டை விரியன் (saw-scaled viper) 1801இல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதிக நஞ்சுள்ள பாம்புகளில் ஒன்றான நாகப் பாம்பு, மணிக்கணக்கில் அசையாமல் நிற்கும் திறன் கொண்டது. விவசாய நிலங்களில் அவை காணப்படுவது, விவசாயிகளுக்கு ஓர் ஆபத்தாக உள்ளது.

கொலம்பியா

கொலம்பியாவில் பாம்புகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல், அங்குள்ள போதைப் பொருள் கும்பல்கள் மீதான அச்சத்திற்கு இணையானவை.

மேகங்கள், மூடுபனி மற்றும் ஈரமான காடுகள் கொண்ட நாடாக கொலம்பியா திகழ்கிறது. அங்குள்ள காடுகளில் எங்கு திரும்பினாலும் உங்களால் பாம்புகள் எழுப்பும் சத்தத்தைக் கேட்க முடியும்.

அங்குள்ள காடுகளின் எந்த மூலையிலோ அல்லது வளைந்து செல்லும் சாலைகளிலோகூட பாம்புகள் பதுங்கியிருக்கலாம்.

கொலம்பியாவில் ஆண்டிஸ் மலைத்தொடர் உள்ளது.

பிரேசிலில் இருப்பதைப் போலவே கிழக்கு கொலம்பியாவிலும் அனகோண்டா பாம்புகள் பெருமளவில் காணப்படுகின்றன.

கொலம்பியாவை தொடர்ந்து சீனா, ஈக்வடார், தாய்லாந்து, வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் உள்ளன.

மக்களிடையே அதிகரிக்கும் விழிப்புணர்வு

"இந்தியாவில் காணப்படும் நச்சுப் பாம்புகளில் நான்கு பாம்பினங்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்தாகும். இவை 'பிக் ஃபோர் விஷப் பாம்புகள்' (Big Four Venomous Snakes) என்று அழைக்கப்படுகின்றன," என ப்ரெண்ட்ஸ் ஆப் ஸ்னேக் சொசைட்டி (Friends of Snake Society) அமைப்பின் பொதுச் செயலாளர் அவினாஷ் தெரிவித்தார்.

பாம்புகள் குறித்து பொது மக்களிடையே இன்னும் தவறான எண்ணங்களும் அச்சங்களும் இருப்பதாகவும், ஆனால் சில அமைப்புகளும் அரசாங்கமும் மேற்கொண்ட திட்டங்களால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

"முன்னதாக, பாம்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை மீட்கவும் ஒரு நாளைக்கு நூறு அழைப்புகள் மட்டுமே எங்களுக்கு வந்தன. இப்போது ஒரு நாளைக்கு 300 அழைப்புகள் வருகின்றன," என்று அவினாஷ் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

அதிக எண்ணிக்கையிலான பாம்பு இனங்களைக் கொண்ட நாடுகள் மட்டுமல்ல, பாம்புகளே இல்லாத நாடுகளும் உள்ளன.

நியூசிலாந்து, அயர்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, அன்டார்டிகா, பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான கிரிபாட்டி ஆகியவற்றில் பாம்புகளே இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு