You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடகொரியா: 482 கி.மீ. சீன எல்லையை வேலி அமைத்து மூடுவது ஏன்? என்ன நடக்கிறது?
கோவிட் பெருந்தொற்றின்போது வடகொரியா, சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடியது. அதன்பின் சில மாதங்களுக்கு வர்த்தக நோக்கங்களுக்காக அது திறக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த எல்லை மீண்டும் மூடப்படுகிறது.
ஏன்? என்ன நடக்கிறது வடகொரியாவில்?
சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது.
வடகொரியாவில் மக்கள் மீதான அடக்குமுறை அதிகரித்து வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சீனா மற்றும் வடகொரியா இடையே மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனுடன் சீனாவுடனான வடகொரியாவின் வர்த்தகமும் குறைந்துள்ளது.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், வட கொரியாவை தனிமைப்படுத்துவதையும், அங்கு அதிகரித்து வரும் மனிதாபிமான நெருக்கடியையும் முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஐ.நா. உறுப்பு நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீப காலமாக, வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன், எல்லை பாதுகாப்பை கடுமையாக அமல்படுத்தி வருகிறார். எல்லையில் மக்கள் நடமாட்டத்தை நிறுத்த கோவிட்-19 காலகட்டத்தைப் பயன்படுத்தினார்.
இருப்பினும், சீனாவுடனான வர்த்தகத்தை அதிகரிக்க சில மாதங்களுக்கு முன்பு இது மீண்டும் திறக்கப்பட்டது.
482கி.மீ நீளமுள்ள புதிய வேலி
இது சம்பந்தமாக, 'புல்லட்டை விட வலிமையான பயங்கரவாத உணர்வு: வட கொரியாவின் மூடல் 2018-2023' என்ற அறிக்கையில், கோவிட் -19 தொற்றுநோயின் போது மக்களிடம் அதிகப்படியான மற்றும் தேவையற்ற கண்டிப்பு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள், சீனாவுடனான எல்லையில் 482கி.மீ. நீளத்துக்கு வடகொரிய அதிகாரிகள் வேலி அமைப்பதைக் காட்டுகின்றன.
இது தவிர, ஏற்கனவே நிறுவப்பட்ட 260கி.மீ. நீளமுள்ள வேலி மேலும் நீட்டிக்கப்படுகிறது.
எல்லையில் வேலி அமைக்கும் பணியுடன், மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதில், மக்களை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்ல எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் 20 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. காவலர் பணியிடங்களின் எண்ணிக்கை 38-இல் இருந்து 650 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் மீது அடக்குமுறையை ஏவிய வடகொரியா
கிம் ஜாங் உன் இத்தகைய கொள்கைகளை நிறுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த கொரியா ஆராய்ச்சியாளர் லினா யுன் கூறுகிறார்.
மக்களை ஒடுக்கும் அவர்களின் நடவடிக்கைகளால், வடகொரியா மிகப்பெரிய சிறைச்சாலையாக மாறியுள்ளது என்று அவர் கூறுகிறார்.
வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய பெண்ணுக்கு அங்கு வசிக்கும் அவரது உறவினர் தொலைபேசியில் அரிசி மற்றும் கோதுமையை வெளியில் இருந்து நாட்டிற்கு கொண்டு வர முடியாது என தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் வசிக்கும் அவரது உறவினர் பெண், “இப்போது ஒரு எறும்பு கூட எல்லையை கடக்க முடியாது,” என்றார்.
இதுபோன்ற கண்டிப்பால் வடகொரியாவை விட்டு வெளியேறும் மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் வடகொரியா மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
வட கொரியாவை விட்டு வெளியேறிய மற்றொரு நபர் 2022-இன் இறுதியில் தனது நாட்டில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினர்களைக் குறித்துப் பேசினார். உலகின் பல பகுதிகளில் கோவிட் தொடர்பான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலகட்டம் இது.
அந்த நபர், "கோவிட் நோயை விட மக்கள் பசியால் இறப்பதற்கு அதிகம் பயப்படுகிறார்கள் என்று எனது குடும்ப உறுப்பினர்கள் சொன்னார்கள்," என்றார்.
மக்கள் எப்படி இருக்கிறார்கள்?
வடகொரியாவின் மிகக் கண்டிப்பான நடைமுறையால், தென்கொரியாவிடம் இருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் வசிக்கும் தங்கள் உறவினர்களை தென்கொரியா மக்கள் சந்திக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, பத்து தரகர்களில் ஒருவர் மட்டுமே வெளியில் இருந்து பணம் அனுப்ப முடியும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் மதிப்பிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், 2017-ஆம் ஆண்டு வடகொரியாவின் அணுசக்தித் திட்டத்திற்குப் பிறகு விதிக்கப்பட்ட ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கான மக்களின் உரிமைகளைப் பறித்ததால் இந்த மரணங்கள் நிகழ்ந்தன. மக்கள் உணவு, சுகாதார வசதிகள் கூட இல்லாமல் தவித்தனர்.
"இது பெண்கள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பல பெண்கள் தங்கள் குடும்பத்திற்காக சம்பாதித்தனர், ஆனால் கட்டுப்பாடுகள் காரணமாக, சந்தையில் அவர்களின் செயல்பாடுகள் குறைந்துவிட்டன," என்று அறிக்கை கூறுகிறது.
வட கொரியாவில் தொடர்புகளைக் கொண்ட முன்னாள் தொழிலதிபர் ஒருவர், தனது உறவினர்கள் நண்டுகள் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைச் சாப்பிட்டு வாழ வேண்டும் என்றும், சீனாவுடனான முறைசாரா வர்த்தகம் காரணமாக உயிர்வாழ முடிந்தது என்றும் கூறினார்.
ஆனால் கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த வணிகமும் மூடப்பட்டது. இதன் காரணமாக, இந்த தொழிலதிபர் தனது பொருட்களை வடகொரியாவில் மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டியிருந்தது.
சீனாவில் வடகொரிய மக்கள் சுரண்டப்படுகிறார்களா?
சீனாவில் பணிபுரியும் வடகொரியர்கள் பணம் கிடைக்காததால் வன்முறையில் ஈடுபட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.
ஆயுத உற்பத்திக்காக வடகொரிய அரசுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு.
வட கொரிய மக்கள் தங்களது எதிர்ப்புகளை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை, ஏனெனில், அரசாங்கம் அதன் குடிமக்களை இறுக்கமாகக் கட்டுப்படுத்துகிறது மற்றும் பொது மறுப்பு மரண தண்டனைக்குரியது.
வன்முறைச் செய்திகள் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வெளிநாட்டில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட கொரியர்களின் நல்வாழ்வு குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
சீனாவில் பணிபுரிந்த வட கொரிய தொழிலாளி ஒருவரிடம் பிபிசி பேசியது, அவர் போராட்டம் நடத்தியவர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)