You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீரில் விழுந்த செல்போனை அரிசிக்குள் வைக்கலாமா? ஆப்பிள் நிறுவனம் என்ன சொல்கிறது?
நீரில் விழுந்த ஃபோனை அரிசிக்குள் வைத்தால் உலர்ந்து சரியாகிவிடும் என்று மிகவும் பிரபலமான அறிவுரையை தவறு என்று கூறியிருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்த யோசனை பயன்படாத ஒன்று என்று ஏற்கெனவே நிபுணர்கள் பலர் எச்சரித்து வருகின்றனர்.
இப்போது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனமும் இதுதொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறைக் கையேட்டை வெளியிட்டிருக்கிறது.
ஈரமான ஃபோனை அரிசிக்குள் வைத்தால் அதில் உள்ள சிறிய துகள்கள் ஃபோனை சேதப்படுத்தும் என்றும் அந்த கையேட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரில் விழுந்த செல்போனை என்ன செய்யவேண்டும்?
செல்போன் நீரில் விழுந்துவிட்டாலோ, மழையில் நனைந்துவிட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையையும் ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.
அரிசிப் பைக்குள் போனை வைப்பதற்குப் பதிலாக, சார்ஜர் கனெக்டர் கீழ்நோக்கி இருக்கும் வகையில் போனை வைத்துக்கு கொண்டு மெதுவாகத் தட்ட வேண்டும் என்றும், உலர விட வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது.
ஸ்மார்ட்போன்களில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும்போதிலும், அவை நீரில் விழுந்துவிட்டால் சரிசெய்வதற்கான நுட்பமான முறைகள் ஏதும் இல்லை.
ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகள் நீரில் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கும் புகைப்பட உலகில் இருந்து வந்தது. உலகின் வெப்பமான பகுதிகளில் கேமராக்கள் நனைந்துவிட்டால், அவற்றை அரிசிக்குள் வைக்கும் பழக்கம் 1940 களில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. அப்போது ஃபிலிம் சுருள்களுக்கும் இந்த உத்தியை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அந்தப் பழக்கமே செல்போன்களுக்கும் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் பல ஆண்டுகளாக, அரசி உள்பட தானியங்களுக்குள் ஈரமான செல்போன்களை வைப்பது எந்த வகையிலும் ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவாது என்று நிபுணர்கள் எச்சரித்து வந்திருக்கிறார்கள்.
ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி என்ன சொல்கிறது?
அரிசிப் பைக்குள் ஃபோனை வைப்பது ஒரு யோசனை என்றால், வெப்பமான ஹேர்டிரையர் போன்றவற்றைக் கொண்டு அதை உலர்த்துவதற்கு முயற்சிப்பது மற்றொரு வகை.
ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டி இந்த யோசனையையும் தவறு என்கிறது. ஹீட்டர்கள் அல்லது ஹேர் ட்ரையர்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்கிறது ஆப்பிள்.
ஈரம் இருப்பது தெரிந்தவுடன் பருத்தி அல்லது காகிதத் துண்டு போன்றவற்றை போனுக்குள் நுழைக்க முயல்வதும் தவறானது செயல் என ஆப்பிள் வழிகாட்டி எச்சரிக்கிறது.
அதற்குப் பதிலாக, சார்ஜரில் மீண்டும் செருகுவதற்கு முன், செல்போனை "காற்றோட்டமான காய்ந்த பகுதியில்" வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ஈரமான செல்போன் "முழுமையாக உலர 24 மணிநேரம் ஆகலாம்," என்று ஆப்பிள் தனது வழிகாட்டியில் குறிப்பிடுகிறது.
ஈரமான செல்போன்களில் என்ன செய்யக்கூடாது?
ஐபோன்களைப் பொறுத்தவரை, சார்ஜர் கனெக்டரில் ஈரம் இருந்தால் உடனடியாக திரையில் எச்சரிக்கைச் செய்தி தோன்றும். மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், ஃபோன் மற்றும் சார்ஜர் இரண்டும் காயும் வரை காத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை தரப்படுகிறது.
"ஃபோன் ஈரமாக இருக்கும்போது சார்ஜ் செய்தாலோ அல்லது சார்ஜரை செருகினாலோ பின்கள் அரிக்கப்பட்டு நிரந்தர சேதத்தை ஏற்படுத்தலாம், அல்லது வேலை செய்வதை நிறுத்தலாம். இதன் விளைவாக உங்கள் ஐபோனின் செயலிழந்து போகலாம்,” என ஆப்பிள் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறை குறிப்பிடுகிறது.
ஆப்பிளின் புதிய வழிகாட்டி ஆவணத்தை முதன்முதலில் வெளியிட்ட மேக்வேர்ல்ட் இணையதளம், ஐபோன்களின் புதிய பதிப்புகள் அதிக நீர் எதிர்ப்புத் திறன் கொண்டதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.
ஐபோன் 12-இல் தொடங்கும் அனைத்து ஆப்பிள் சாதனங்களும் ஆறு மீட்டர் ஆழம் வரை, அதிகபட்சம் அரை மணி நேரம் வரை மூழ்குவதைத் தாங்கும் திறன் கொண்டவை.
ஆனால் மற்ற போன் வைத்திருப்பவர்கள், போன் நீரில் நனையும்போது அரிசி வேலை செய்யாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)