இந்தியாவின் தொடர் வெற்றிக்கு காரணமான டிராவிட்டின் 'டிரஸ்ஸிங் ரூம்' உத்தி என்ன தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நிதின் ஸ்ரீவத்ஸவா
- பதவி, பிபிசி செய்தியாளர்
உலகக்கோப்பையில் இந்திய அணியின் இதுவரையிலான பயணத்துக்கும் 2011, 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடந்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் ஆட்டத்துக்கும் இடையே ஒரு பொதுவான விஷயம் உள்ளது.
இந்தியா லீக் போட்டிகளில் வலுவான ஆட்டம் ஆடி, நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.
இந்திய அணி 2011இல் இறுதிச் சுற்றில் வெற்றி பெற்றது. ஆனால் 2015 மற்றும் 2019 போட்டிகளில், நாக்-அவுட் சுற்றின் முதல் போட்டியில், அதாவது அரையிறுதியில் தோல்வியடைந்தது.
டிரஸ்ஸிங் ரூம் உத்தி
ஆனால் கடந்த சில மாதங்களில், இந்திய கிரிக்கெட் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
செப்டம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரின்போது, இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் ஒரு வழக்கம் தொடங்கப்பட்டது. அது தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
போட்டிக்குப் பிறகு, வீரர்களின் ஃபீல்டிங் குறித்து கருத்து தெரிவிக்கவும், அவர்களுடன் ஆட்டம் குறித்து உரையாடவும், பின்னர் அவர்களுக்கு பதக்கங்கள் வழங்கவும் புதிய வழக்கம் தொடங்கப்பட்டது.
இதற்காக, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த டி திலீப்பை தேர்வு செய்துள்ளார்.
திலீப் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர். அவர் அனைத்து வீரர்களையும் டிரஸ்ஸிங் ரூமில் ஒன்றாக நிறுத்தி, அவர்களின் ஆட்டம் எவ்வாறு இருந்தது என அலசி, தவறுகளைச் சுட்டிக்காட்டி, சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டவும் செய்வார்.
உதாரணமாக, தரம்ஷாலாவில் நியூசிலாந்திடம் கிடைத்த வெற்றிக்குப் பிறகு, அவர் வீரர்களிடம், “உங்கள் திறமையான ஃபீல்டிங் மூலம் 14 ரன்களை தடுத்தீர்கள்,” என்று கூறினார்.
நாக்-அவுட் சுற்று

பட மூலாதாரம், BCCI
முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரும் பிபிசி டிஎம்எஸ் ஒளிபரப்புக் குழு உறுப்பினருமான ஜொனதன் அக்னியூ, "டிரஸ்ஸிங் ரூமில் நடப்பவை களத்தில் உள்ள வீரர்களின் முகங்களில் பிரதிபலிக்கும்,” என்றார்.
“கிளைவ் லாய்ட் மற்றும் விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரைக் கொண்ட உலக சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியின் டிரெசிங் ரூமில், அனைவரும் சகோதரர்களைப் போல ஒன்றாகப் பழகி, வேடிக்கையாகப் பேசிக் கொள்வார்கள். டெஸ்ட் போட்டி ஆனாலும் சரி, ஒருநாள் போட்டி ஆனாலும் சரி, அந்த அணி வீரர்களின் வலுவான ஒற்றுமை களத்தில் எதிரணிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது," என்று அவர் மேலும் கூறினார்.
"நிச்சயமாக இந்திய வீரர்களிடையே ஒற்றுமை உள்ளது, அதனால்தான், பும்ரா, முகமது ஷமியின் கழுத்தைச் சுற்றி தனது கையை இயல்பாகப் போடுகிறார். மேலும் விராட் போட்டியில் வென்ற பிறகு, ரோஹித் சர்மா ஓடி வந்து அவரைக் கட்டிப்பிடிக்கிறார்," என்று அக்னியூ குறிப்பிடுகிறார்.
இப்போதெல்லாம், இந்திய அணி விளையாட வரும்போது, அவர்களின் டிரெசிங் ரூமின் சுவர்களில் A4 அளவு பக்கங்களில் "நீங்களே சிறந்தவர்" மற்றும் "கிரிக்கெட் தான் என் முதல் காதல்" போன்ற மேற்கோள்கள் ஒட்டப்பட்டிருப்பதைக் காணலாம்.

பட மூலாதாரம், Getty Images
தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் பகுப்பாய்வாளரும், மிட்டே பத்திரிகைக்கு உலகக்கோப்பை 2023 குறித்து செய்தி சேகரித்து வருபவருமான சந்தோஷ் சுரி, "நாக்-அவுட் சுற்றில் போட்டிகளை வெல்ல, சரியான மனநிலை தேவை மற்றும் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் - அவரே ஒரு பெரிய வீரர் - இதை வழங்குகிறார்," என்கிறார்.
கடந்த ஆண்டில் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு ராகுல் டிராவிட், "வீரர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியம். தொழில்முறை கால்பந்தில் உள்ளது போலவே, வீரர்களின் பணிச்சுமை சரியாக நிர்வகிக்கப்பட வேண்டும்," என்று கூறியிருந்தார்.
அண்மையில், தரம்ஷாலாவில் நியூசிலாந்திடம் கிடைத்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி, ஒரு நாள் கூடுதலாக அங்கு தங்கியிருக்கும் என்றும் வீரர்கள் ஓய்வெடுப்பார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது. ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோரும் இளைப்பாறினார்கள்.
வீரர்களுக்கு எந்தவித காயங்களும் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவர்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நதியில் குளித்து ஓய்வெடுக்க முழு அனுமதியும் கொடுக்கப்பட்டது.
விராட் கோலி ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு விருந்தினராகச் சென்று குழந்தைகளுடன் நேரத்தை நல்லபடியாகச் செலவிட்டார். நாக்-அவுட் சுற்றில் வெற்றிபெற இதுபோன்ற மனநிலை தேவை என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












