You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் கேமிங் மசோதா நிறைவேற்றம்: பப்ஜி, ஃபிரீ ஃபயர் தொடர்ந்து விளையாட முடியுமா? 7 கேள்வி-பதில்கள்
- எழுதியவர், அபினவ் கோயல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
நீங்கள் ஃபேன்டஸி கிரிக்கெட், ரம்மி, லூடோ, போக்கர் (poker) போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் பந்தயம் வைத்து விளையாடுகிறீர்களா? வீட்டில் உட்கார்ந்து கொண்டே நிமிடங்களில் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாயை சம்பாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறீர்களா?
ஆம் என்றால், நீங்கள் இனி கவனமாக இருக்க வேண்டும்.
புதன்கிழமை (ஆகஸ்ட் 20), இந்திய அரசு மக்களவையில் 'ஆன்லைன் கேமிங்கை ஊக்குவித்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் மசோதா, 2025'-ஐ அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகளின் கூச்சலுக்கு மத்தியில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்பின், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு சட்டமாக மாறும்.
இந்த மசோதாவின்படி, எலெக்ட்ரானிக் விளையாட்டுகள் (Esports) மற்றும் சமூக விளையாட்டுகள் (Social games) ஊக்குவிக்கப்படும், அதே சமயம் ஆன்லைன் பணம் சார்ந்த (Money games) விளையாட்டுகள் முற்றிலும் தடை செய்யப்படும்.
எளிமையான வார்த்தைகளில் சொன்னால், விளையாட்டுகளின் பேரில் இனி யாரும் ஆன்லைன் பந்தயம் கட்ட முடியாது.
இத்தகைய ஆன்லைன் விளையாட்டுகள் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாக அரசாங்கம் நம்புகிறது. மேலும் அவை 'பணமோசடி, வரி ஏய்ப்பு மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பது' ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது என அரசாங்கம் கூறுகிறது.
எலெக்ட்ரானிக் விளையாட்டு- பணம் சார்ந்த விளையாட்டு, வேறுபாடு என்ன?
அரசாங்கம் ஆன்லைன் கேமிங்கை மூன்று பிரிவுகளாகப் பிரித்துள்ளது.
- முதல் வகை – எலெக்ட்ரானிக் விளையாட்டு
- வகை 2 - ஆன்லைன் சமூக விளையாட்டுகள்
- வகை 3 - ஆன்லைன் பண விளையாட்டுகள்
'ஜீ பிசினஸ்' உடனான உரையாடலில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன், இந்த மூன்று வகைகளைப் பற்றி விளக்கினார்.
"ஒருவர் ஆன்லைனிலும் சதுரங்கம் விளையாடலாம். இதுபோன்ற விளையாட்டுகள் எலெக்ட்ரானிக் விளையாட்டுகளின் கீழ் வருகின்றன. இதில், ஒருவர் வெற்றி பெற்றால் பரிசுத் தொகையைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இதில், விளையாடுபவரின் அனுபவம் முக்கியமானது" என்று அவர் கூறினார்.
"ஆன்லைன் சமூக விளையாட்டுகளின் உதவியுடன் குழந்தைகள் ஏதாவது கற்றுக்கொள்கிறார்கள். இந்த விளையாட்டுகளில், நீங்கள் சில சந்தாக்களை செலுத்த வேண்டியிருக்கலாம், ஆனால் அதற்கு ஈடாக பணம் வெல்லலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்காது" என்று அவர் கூறுகிறார்.
"கொஞ்சம் பணம் முதலீடு செய்தால் அதிக பணம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குக் கிடைப்பது தான் பிரச்னை. அதிகமாக விளையாடினால் அதிகமாக வெல்வீர்கள்- இந்த வகை தான் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகள்" என்று எஸ்.கிருஷ்ணன் கூறினார்.
2. பப்ஜி, ஃபிரீ ஃபயர் மற்றும் ஜிடிஏ போன்ற விளையாட்டுகளின் நிலை என்ன?
பப்ஜி-இல் (PUBG) பலர் ஒன்றாக ஒரு மெய்நிகர் வரைபடத்தில் களமிறங்குகிறார்கள், விளையாட்டில் இறுதிவரை உயிர்பிழைப்பவர் வெற்றியாளராகிறார். ஃபிரீ ஃபயர் விளையாட்டும், பப்ஜி-யைப் போன்றது. இது விரைவான மற்றும் குறுகிய போட்டிகளைக் கொண்டுள்ளது.
ஜிடிஏ என்பது ஒரு அதிரடி-சாகச விளையாட்டு. இதில், விளையாடுபவர்கள் நகரத்தை சுற்றித் திரிந்து 'மிஷன்களை' முடிக்க முடியும். அவர்கள் வெவ்வேறு வாகனங்களை ஓட்ட முடியும்.
இந்த விளையாட்டுகளில் நேரடி பணப் பந்தயம் இல்லை. இங்கே ஒருவர் மெய்நிகர் உலகில் துப்பாக்கிகள், துணிகள் அல்லது பிற பொருட்களை வாங்கலாம், ஆனால் இங்கே பணத்தை முதலீடு செய்வதன் மூலம் பணம் வெல்வது என்ற கேள்விக்கே இடமில்லை.
இதுபோன்ற விளையாட்டுகள் எலெக்ட்ரானிக் விளையாட்டுகளில் சேர்க்கப்படும் என்று ஆன்லைன் கேமிங் நிபுணர்கள் நம்புகின்றனர்.
3. எந்த விளையாட்டுகள் தடை செய்யப்படும்?
மசோதாவின் பிரிவு 2(g) இன் படி, ஒருவர் பணம் சார்ந்த நன்மைகள் அல்லது வெற்றிகளுக்கு ஈடாக, கட்டணம் அல்லது பணத்தை முதலீடு செய்ய வேண்டிய தேவை உள்ள அனைத்து விளையாட்டுகளும் தடை செய்யப்படும்.
இந்த சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஃபேன்டஸி விளையாட்டுகள், ஆன்லைன் ரம்மி, 'கார்ட்' விளையாட்டுகள், போக்கர் தளங்கள் மற்றும் ஆன்லைன் குழுக்களை உருவாக்குவதன் மூலம் நேரடி பணம் முதலீடு செய்யப்படும் விளையாட்டுகளை மக்கள் விளையாட முடியாது என்று கேமிங் துறையைச் சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள்.
இந்த மசோதா அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்று சைபர் சட்ட நிபுணரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான விராக் குப்தா நம்புகிறார்.
"ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளில் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று 'வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு' (சூதாட்டம்) மற்றொன்று 'திறமை அடிப்படையிலான விளையாட்டு'. ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் 'திறமை அடிப்படையிலான விளையாட்டு' என்ற வாதத்தை முன்வைப்பதன் மூலம் கட்டுப்பாடுகளிலிருந்து தப்பிக்கின்றன. அரசாங்கம் கொண்டு வந்த மசோதாவில், 'வாய்ப்பு அடிப்படையிலான விளையாட்டு' (சூதாட்டம்) மற்றும் 'திறமை அடிப்படையிலான விளையாட்டு' ஆகியவை வரையறுக்கப்படவில்லை" என்று அவர் கூறுகிறார்.
மசோதாவின்படி, மத்திய அரசு ஒரு ஆன்லைன் கேமிங் ஆணையத்தையும் உருவாக்கும். எந்த விளையாட்டு பணம் சார்ந்த விளையாட்டு, எது எலெக்ட்ரானிக் விளையாட்டு என்பதை முடிவு செய்வதும் இதன் பணியாக இருக்கும்.
இது தவிர, சமூக மற்றும் எலெக்ட்ரானிக் விளையாட்டுகளைப் பதிவு செய்வதோடு விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் அந்த ஆணையம் உருவாக்கும்.
4. விளம்பரம் செய்பவர்களுக்கு என்ன நடக்கும்?
பல பிரபல கிரிக்கெட் வீரர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் இப்போதெல்லாம் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளை விளம்பரப்படுத்துகிறார்கள்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளின் ஜெர்சிகளிலும் கூட இது விளம்பரப்படுத்தப்படுகிறது. இத்தகைய விளம்பர யுக்தியின் காரணமாக ஆன்லைன் கேமிங் மிகவும் பிரபலமாகிவிட்டதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
மசோதாவின்படி, ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களை யாரும் உருவாக்கவோ அல்லது விளம்பரப்படுத்த உதவவோ முடியாது.
இதுபோன்ற விளையாட்டுகளை விளையாட மக்களை ஊக்குவிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
"புதிய விதிகளின்படி, ஆன்லைன் (பணம் சார்ந்த) விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்கள் சிறையில் அடைக்கப்படலாம்" என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தினேஷ் ஜோத்வானி கூறுகிறார்.
"இந்தியாவின் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்கள் மீது வழக்குகளும் பதிவு செய்யப்படலாம்" என்று அவர் கூறுகிறார்.
5. 'பணம் சார்ந்த விளையாட்டுகளை' நடத்தும் நிறுவனங்களுக்கு என்ன நடக்கும்?
மசோதாவின் பிரிவு 11இன் படி, ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு விதி உள்ளது.
ஒரு நிறுவனம் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளை வழங்குவதன் மூலம் சட்டத்தை மீறினால், அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள், மேலாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்படும்.
இந்த மசோதாவின்படி, நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர்களுக்கு அன்றாட முடிவுகளில் பினாங்கு இல்லை என்பதால், அவர்களுக்கு எதிராக எந்த வழக்கும் இருக்காது.
இந்த மசோதாவின் நோக்கம், நிறுவனத்தின் உண்மையான குற்றவாளிகள், குற்றமிழைக்கும் போது அவர்களைப் பிடிப்பதாகும்.
6. வெளிநாட்டிலிருந்து இயங்கும் தளங்களுக்கு என்ன நடக்கும்?
இந்த மசோதா ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளை விளையாடுபவர்களை குற்றவாளிகளாகக் கருதுவதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவர்களாகக் கருதுகிறது. அத்தகையவர்களைப் பாதுகாப்பதே மசோதாவின் நோக்கம்.
பணம் சார்ந்த விளையாட்டுகளை வழங்குபவர்களுக்கும், ஊக்குவிப்பவர்களுக்கும் மட்டுமே தண்டனை வழங்கப்படும்.
மசோதாவின் பிரிவு 1(2) இன் படி, இந்த சட்டம் இந்தியாவில் இயங்கும் விளையாட்டுகளுக்கு மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்து இயங்கும் தளங்களுக்கும் பொருந்தும்.
பல ஃபேன்டஸி விளையாட்டுகள், பணம் பந்தயம் கட்டுதல், கேசினோ தளங்கள் வெளிநாட்டிலிருந்து நடத்தப்படுகின்றன. இந்தியாவில் உள்ளவர்கள் அவற்றை செயலிகள் அல்லது வலைத்தளங்கள் மூலம் பயன்படுத்துகின்றனர்.
மசோதா செயல்படுத்தப்பட்டவுடன், அரசாங்கம் அத்தகைய தளங்களைத் தடுக்க முடியும்.
7. வங்கிகள் மற்றும் கட்டண நிறுவனங்கள் தொடர்புடைய கட்டுப்பாடுகள்?
மசோதாவின் பிரிவு 7இன் படி, ஒரு நபர் ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளை விளையாட வங்கிகள் மூலம் இயங்கும் கட்டண செயலிகள் அல்லது வாலட்-களைப் பயன்படுத்த முடியாது.
சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளில் பணத்தை டெபாசிட் செய்யும் அல்லது திரும்பப் பெறும் வசதியை அந்த நிறுவனங்கள் வழங்க முடியாது.
ஆன்லைன் கேமிங் துறை என்ன சொல்கிறது?
அகில இந்திய கேமிங் கூட்டமைப்பு, இ-கேமிங் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஃபேன்டஸி ஸ்போர்ட்ஸ் கூட்டமைப்பு ஆகியவை உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளன.
அனைத்து ஆன்லைன் பணம் சார்ந்த விளையாட்டுகளையும் தடை செய்ய முன்மொழியப்பட்டுள்ள இந்த மசோதா, இந்தியாவின் ரூ.2 லட்சம் கோடி மதிப்புள்ள திறன் சார்ந்த விளையாட்டுத் துறையை அழித்துவிடும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டுகளை தடை செய்வதற்குப் பதிலாக அதை ஒழுங்குபடுத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
சந்தை எவ்வளவு பெரியது?
உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதப்பட்ட கடிதத்தில், "இது ஆண்டுக்கு சுமார் ரூ.31 ஆயிரம் கோடி சந்தை மதிப்புடைய துறை" என்று கேமிங் துறையுடன் தொடர்புடையவர்கள் கூறியுள்ளனர்.
கேமிங் துறையின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் சுமார் ரூ.20,000 கோடிக்கு வரிகள் செலுத்தப்படுகின்றன. இந்தத் தொழிலில் சுமார் இரண்டு லட்சம் பேர் பணிபுரிகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
மதிப்பீடுகளின்படி, 2020ஆம் ஆண்டில் நாட்டில் கேமர்களின் (விளையாடுபவர்கள்) எண்ணிக்கை 36 கோடியாக இருந்தது, இது 2024ஆம் ஆண்டில் 50 கோடியாக அதிகரித்திருக்கும்.
முக்கிய சர்வதேச நிறுவனங்களின்படி, சர்வதேச கேமிங் துறையின் சந்தை மதிப்பு 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.66 ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவைப் பற்றிப் பேசினால், ஆன்லைன் கேமிங் துறையின் வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் 32 சதவிகிதமாக உள்ளது, இது சர்வதேச ஆன்லைன் கேமிங்கை விட இரண்டரை மடங்கு அதிகம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு