You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செவ்வாய் கோளைப் போலவே பூமியில் காணப்படும் இந்த நகரும் ராட்சத குன்று எங்கே உள்ளது தெரியுமா?
- எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
பூமியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மணல் திட்டுகளில் ஒன்றின் வயது முதன்முறையாக கணக்கிடப்பட்டுள்ளது.
நட்சத்திர குன்றுகள் அல்லது பிரமிட்(Pyramid) குன்றுகள் என அவற்றின் தனித்துவமான வடிவங்களுக்கு ஏற்ற வகையில் பெயரிடப்பட்டுள்ள இவை, பல நூறு மீட்டர் உயரம் கொண்டவையாக இருக்கின்றன.
இவை, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் வட அமெரிக்காவிலும், செவ்வாய் கிரகத்திலும் காணப்படுகின்றன. ஆனால், இதுநாள் வரையிலும், அவை உருவான தேதியை எந்த நிபுணர்களும் இதற்கு முன் குறிப்பிடவில்லை, அவர்களால், குறிப்பிடவும் முடியவில்லை.
தற்போது, மொரோக்கோவில் உள்ள இந்த வகையான லாலா லல்லியா என்ற குன்று 13,000 ஆண்டுகளுக்கு முன் உருவானது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எதிரெதிர் காற்றினால், திசை மாற்றும் ஏற்படுவதில் தான் இதுபோன்ற நட்சத்திர குன்றுகள் உருவாகின்றன. இந்த குன்றுகளின் வயதை புரிந்துகொண்டு, தெரிந்து கொள்வதன் மூலம் அந்தக் காலத்தில் இருந்த காற்றையும், அந்தக் கால காலநிலையையும் அறிவதற்கு உதவுதாகக் கூறினார் அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜியோஃப் டுல்லர். இவர், இந்த குன்றுகள் தொடர்பாக ஆராய்ச்சி முடிவுகளை பேராசிரியர் சார்லஸ் பிரிஸ்டோவுடன் இணைந்து வெளியிட்டார்.
லாலா லால்லியா என்ற குன்று ஒரு பழங்குடியான அமாஸிகின் பெயர். அதன் பொருள் மிக உயர்ந்த புனிதமான இடம் என்பதாகும். இந்த குன்று தென்கிழக்கு மொரோக்கோவில் உள்ள எர்க் செப்பி மணல் கடலில் அமைந்துள்ளது. இது 100 மீட்டர் உயரமும், 700 மீட்டர் அகலமும் கொண்டது.
உருவான ஆரம்ப காலத்திற்கு பிறகு, சுமார் 8000 ஆண்டுகளாக அது வளரவில்லை. மாறாக, அது கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக விரைவாக விரிவடைந்து வருகிறது.
பூமியின் புவியியல் வரலாற்றில், பொதுவாக பாலைவனங்களை பார்க்க முடியும். ஆனால், நட்சத்திரக் குன்றுகளை அவ்வளவு எளிதில் பார்க்க முடியாது.
பேராசிரியர் ஜியோஃப் டுல்லர் இதுகுறித்து கூறுகையில், “அவை மிகவும் பெரியதாக இருப்பதால், நிபுணர்கள் ஒரு தனித்துவமான குன்றுகளைத்தான் தாங்கள் பார்க்கிறோம் என்பதையே அவர்கள் உணரவில்லை.”என்றார்.
"இந்த கண்டுபிடிப்புகள் பலரை ஆச்சரியப்படுத்தும், ஏனெனில் இந்தக் குன்று எவ்வளவு விரைவாக உருவானது என்பதையும், அது ஓராண்டுக்கு சுமார் 50 செமீ வேகத்தில் பாலைவனத்தின் குறுக்கே நகர்கிறது என்பதையும் பார்க்கலாம்," என்றார் அவர்.
விஞ்ஞானிகள் லுமினென்சென்ஸ் டேட்டிங் (luminescence dating)என்ற நுட்பத்தைப் பயன்படுத்தி நட்சத்திரக் குன்றுகளின் வயதைக் கண்டறிந்தனர்.
இந்த டேட்டிங் முறையில், மணல் துகள்கள் பகல் வெளிச்சத்தில் கடைசியாக எப்போது வெளிப்பட்டன என்பதை கொண்டு அவற்றின் வயது கணக்கெடுக்கப்படுகிறது.
மொரோக்கோவிலிருந்து மணல் மாதிரிகள் இருட்டில் எடுக்கப்பட்டு, பழைய கால புகைப்படம் எடுக்கும் பட்டறையைப் போன்ற மங்கலான சிவப்பு விளக்கு நிலைகளில் ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டன.
பேராசிரியர் டுல்லர், மணலில் உள்ள கனிமத் துகள்களை "சிறிய ரக ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள்" என்று குறிப்பிட்டார். அவை இயற்கை சூழலில் கதிரியக்கத்திலிருந்து வரும் படிகங்களுக்குள் ஆற்றலைச் சேமிக்கின்றன.
மணல் பூமிக்கு அடியில் எவ்வளவு நேரம் புதைக்கப்படுகிறதோ, அவ்வளவு கதிரியக்கத்தன்மை வெளிப்படும் என்றார்.
ஆய்வகத்தில் மணல் துகள்கள் வெளிப்படும் போது, அவை ஒளி வடிவில் ஆற்றலை வெளியிடுகின்றன. அவற்றை வைத்து விஞ்ஞானிகள் அவற்றின் வயதைக் கணக்கிட முடியும்.
"எங்கள் இருண்ட ஆய்வகத்தில், இந்த மணல் துகள்களில் இருந்து வெளிச்சத்தைக் காண்கிறோம். வெளிச்சம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, அவ்வளவு பழைய வண்டல் துகள்கள் என கணக்கிடப்படுகிறது," என்கிறார் பேராசிரியர் டல்லர்.
பெரிய குன்றுகளின் மற்ற எடுத்துக்காட்டாக, வட அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ஸ்டார் குன்று உள்ளது. இது அமெரிக்காவின் உயர்ந்த குன்று ஆகும். இது அடிவாரத்திலிருந்து மேல் வரை 225 மீ உயரம் என அளவிடப்பட்டுள்ளது.
இந்த குன்றுகளில் ஏறுவது கடினமான வேலை எனக் கூறிய பேராசிரியர் டுல்லர், "நீங்கள் ஏறும் போது, நீங்கள் இரண்டு அடி மேலே சென்றால், ஒரு அடி பின்னோக்கிச் செல்வீர்கள். ஆனால், இப்படி கடினமாக இருந்தாலும், மேல சென்று பார்ப்பது நல்லது தான். ஏனெனில், அவை மேலே அவ்வளவு அழகாக இருக்கும்,”என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)