You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுவரின் தீர்ப்பால் முடிவு மாறியதா? - மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு காரணமான 'திரில்லிங்' திருப்புமுனை
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெண்கள் பிரீமியர் லீக் தொடர் நேற்றைய தினம் ஒரு திரில்லர் பாணியில் நடந்து முடிந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அறிமுக பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் நடந்த டி20 பெண்கள் உலகக் கோப்பையை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையில் அபாரமாக விளையாடி வந்த இந்திய அணி, அரை இறுதியில் மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலியாவிடம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
ஒரு மாதத்திற்குப் பின்னர் இது வேறோரு களம். மீண்டும் ஓர் அதி முக்கியமான போட்டியில் மெக் லானிங் மற்றும் ஹர்மன் ப்ரீத் தலைமையிலான அணிகள் மோதின.
ஹர்மன்ப்ரீத் கவுர் தனது தலைமையில் டி20 உலகக் கோப்பையை வெல்லத் தவறியபோதும், இந்த முறை மனம் துவளாமல் நேர்த்தியாக அணியை வழிநடத்தி கோப்பையை வெல்ல வழிவகுத்தார்.
நேற்றைய தினம் நடந்த பெண்கள் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வென்றது. ஆனால் இந்தப் போட்டியின் முடிவைத் தாண்டியும் நடுவரின் ஒரு தீர்ப்பு மிகவும் சர்ச்சை கிளப்பியுள்ளது.
மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதிரடி இளம் வீரர் ஷஃபாலி வர்மா, அனுபவம் வாய்ந்த கேப்டன் மெக் லானிங், துடிப்பான பேட்டர் ஜெமிமா, உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் மரிஜென் கப், பௌலிங் ஆல்ரவுண்டர் ஷீகா பாண்டே என டெல்லி வலுவான படையோடு களமிறங்கியது.
அதிரடி பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள் ஃபுல் பார்மில் அணி என மும்பையும் சம பலத்தோடு களம் கண்டது. லீக் போட்டிகளில் இந்த இரு அணிகளும் மோதிய இரு போட்டிகளில் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்தன. லீக் சுற்றுகள் முடிவில் இரு அணிகளும் விளையாடிய எட்டு போட்டிகளில் ஆறு வெற்றிகளோடு 12 புள்ளிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனால் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது.
டெல்லி பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரை மெக் லானிங் எதிர்கொண்டார். நட்சத்திர வீரர் நட் சிவர் ப்ரண்ட் பந்து வீசினார். ஐந்தாவது பந்தில்தான் முதல் ரன் எடுத்தார் லானிங். ஆறாவது பந்தை எதிர்கொண்ட ஷெஃபாலி வர்மா ஒரு ரன் எடுத்து பேட்டிங் முனைக்கு வந்தார்.
இப்போதுதான் அனல் பறக்கும் அந்த யுத்தம் ஆரம்பமானது. இந்த தொடரில் ஓவருக்கு ஆறு ரன்களுக்கும் கீழ் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இஸி வாங் பந்து வீச வந்தார். இந்தத் தொடரில் அபாரமான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் அதிரடி பேட்டரான ஷெஃபாலி வர்மா வாங்கை எதிர்கொள்ளத் தயரானார்.
ஹாட்ரிக் எடுத்த நட்சத்திர பந்து வீச்சளராக உருவெடுத்திருந்த வாங், ஷெஃபாலிக்கு லெக் ஸ்டம்புக்கு வெளியே தனது முதல் பந்தை வீசினார்.
அந்த பந்தை லாங் ஆன் திசையில் விளாசினார் ஷெஃபாலி. பந்து சிக்சருக்கு சென்றது. அடுத்த பந்தையே பௌண்டரிக்கும் விளாசினார்.
இப்போது மூன்றாவது பந்து, ஹை ஃபுல் டாஸாக வீசினார் வாங், இடதுபுறம் நகர்ந்து லாகவமாக ஆஃப் சைடில் ஒரு ஸ்லைஸ் ஷாட் ஆடினார். அந்தப் பந்து மெலி கெர் கையில் தஞ்சமடைந்தது.
பந்து இடுப்புக்கு மேல் ஃபுல் டாஸாக வந்தது என நம்பிய ஷெஃபாலி மற்றும் லானிங் உடனடியாக ரிவ்யூ செய்தனர்.
மூன்றாவது நடுவர் திரும்பத் திரும்ப அந்தப் பந்தின் ரீப்ளேவை பார்த்தார். பந்தை டிராக் செய்யும் தொழில்நுட்பம் அந்தப் பந்து இடுப்புக்கு மேல் வந்து, கீழே இறங்குவது போன்று தெரிந்தது. மூன்றாவது நடுவர் ஷெஃபாலி அவுட் என கள நடுவரின் தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.
களத்தில் இருந்த லானிங் மற்றும் ஷெஃபாலி இருவருமே அதிருப்தி அடைந்தனர். குறிப்பாக கேப்டன் லானிங் கள நடுவரிடமே அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நடுவரின் தீர்ப்பு மும்பை இந்தியன்ஸுக்கு சாதகமாக சென்றதையடுத்து அந்தப் பந்து நோ பாலா இல்லையா என சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன.
பொதுவாக கிரிக்கெட் விதிகளின்படி, பந்து வீச்சாளர் வீசும் பந்து ஃபுல் டாஸாக பேட்டரின் இடுப்புக்கு மேல் சென்றால் அந்தப் பந்து நோ பாலாக அறிவிக்கப்படும்.
ஆனால் இந்தக் குறிப்பிட்ட பந்தில் இரு வகையான விவாதங்கள் எழுந்தன. எனினும் நடுவரின் முடிவு குறித்து பலர் சமூக ஊடகங்களில் அதிருப்தி தெரிவித்தனர்.
அபாயகரமான பேட்டர் ஷெஃபாலியை வீழ்த்தியதால் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் உற்சாகமடைந்தனர். 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஷெஃபாலி பெவிலியனுக்கு திரும்பினார்.
அவருக்குப் பின் வந்த அலிஸ் கேப்சி அதே ஓவரில் மீண்டும் ஒரு ஃபுல் டாஸ் பந்தில் இரையானார். ஒரே ஓவரில் இரண்டு ரிவ்யூக்களையும் இழந்தது டெல்லி.
அடுத்த ஓவரை பிரன்ட் வீச லானிங் மற்றும் ஜெமிமா மூன்று பௌண்டரிகளை விளாசினர். ஐந்தாவது ஓவரை வீச மீண்டும் வாங் வந்தார்.
மீண்டும் ஒரு லோ ஃபுல் டாஸ் வீசினார் வாங். இந்த முறை ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இப்படி பவர்பிளேவுக்குள்ளாகவே ஃபுல் டாசுக்கு மூன்று பேட்டர்களை இழந்தது டெல்லி.
ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் நங்கூரமாக நின்றார் கேப்டன் லானிங். எனினும் அவரும் 12வது ஓவரில் ரன் அவுட் ஆனார்.
ரன்கள் எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்த ஜெஸ் ஜொனாசன் அழுத்தம் காரணமாக எடுத்த ஒரு தவறான முடிவால் லானிங் தமது விக்கெட்டை இழந்தார்.
16 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 79 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது டெல்லி. 73 ரன்களுக்கு மூன்று விக்கெட் என இருந்த ஸ்கோர் அடுத்த ஐந்து ஓவர்கள் கழித்துப் பார்த்தால் 79/9 என இருந்தது.
டெல்லியின் பேட்டிங்கின்போது அந்த அணியின் மிக மோசமான பகுதியாக அந்த ஐந்து ஓவர்கள் அமைந்தன.
இந்த ஐந்து ஓவர்களில் வெறும் ஆறு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது டெல்லி. ஆனால், அப்போதுதான் இன்னொரு ட்விஸ்ட் காத்திருந்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ராதா யாதவ் மற்றும் ஷிகா பாண்டே அபராமாக விளையாடினர்.
குறிப்பாக ஃபுல் டாஸில் திணற வைத்துக் கொண்டிருந்த இசி வாங் வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட இந்த இணை மூன்று பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்கள் குவித்தது.
கடைசி ஓவரையும் விட்டு வைக்காமல் கடைசி ஓவரின் கடைசி இரு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ராதா.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது டெல்லி. இந்த இணை வெறும் 24 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது.
கடைசி விக்கெட்டுக்கு ஒரு கூட்டணி 50 ரன்களுக்கும் மேல் குவிப்பதும், அதையும் இறுதிப்போட்டி போன்ற அழுத்தம் நிறைந்த சூழலில் இதைச் சாதிப்பதையும் டி20 போட்டிகளில் மிக மிக அரிதாகவே பார்க்க முடியும்.
இந்த இரு பந்துவீச்சாளர்களும் பேட்டிங்கில் அசத்தியதைப் பார்க்கும்போது ஆடுகளம் அவ்வளவு ஒன்றும் பேட்டிங்கிற்கு கடினமாக இல்லை என்றே தோன்றியது.
ஆனால் மும்பை இந்தியன்ஸ் சேஸிங்கை தொடங்கியதும், டெல்லியை போல மந்தமாகவே விளையாடியது. பவர்பிளே முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் ஹர்மன் ப்ரீத் கவுரும் நட் சிவர் ப்ரண்டும் பொறுமையாக விக்கெட் விழக்கூடாது எனக் கவனமாக விளையாடி சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்தார்கள்.
17வது ஓவரின் முதல் பந்தில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் ஆனார். அந்தச் சம்பவம் நிகழ்ந்ததும், ஒரு மாதம் முன்பு நடந்த உலகக் கோப்பை அரை இறுதி போட்டி பலருக்கும் நினைவுக்கு வந்திருக்கக் கூடும்.
ஏனெனில் அரை இறுதியில் சேஸிங்கில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ஹர்மன் ப்ரீத்தின் ரன் அவுட் இந்திய அணிக்கு பாதகமானது.
ஆனால், இம்முறை அவரது அணியின் சக வீரர்கள் ஹர்மன் ப்ரீத் கவுருக்கு அந்த தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தவில்லை.
மூன்று பந்துகள் மீதமிருக்கும் நிலையில் இலக்கை எட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. பிரண்ட் கடைசி வரை களத்தில் நின்று பொறுப்பாக விளையாடி 55 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவரே பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருதையும் வென்றார்.
போட்டி முடிந்த பிறகு பேசிய மெக் லானிங், மும்பை இந்தியன்ஸ் இந்த வெற்றிக்குத் தகுதி வாய்ந்த அணி எனக் குறிப்பிட்டார்.
நீண்ட நாட்களாக ஒரு மிகப்பெரிய வெற்றிக்குக் காத்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுருக்கு நேற்றைய தினம் அவருக்கான நாளாக அமைந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்