கனடா: தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களை குறைக்கும் ஜஸ்டின் ட்ரூடோ அரசு - விளைவுகள் என்ன?
கனடாவிற்குள் அனுமதிக்கப்படும் குறைவான ஊதியம் பெறும், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள், மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடா, வேகமாக வளர்ந்து வரும் மக்கள் தொகையைச் சமாளிப்பதில் சிக்கல்களை எதிர்கொள்வதால், வீட்டு வசதி, சுகாதார போன்ற பொதுச் சேவைகளில் அந்நாடு சவால்களைச் சந்திப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு கனடாவின் மக்கள்தொகை வளர்ச்சியில் சுமார் 97% குடியேற்றம் பங்கு வகித்ததாக கனேடிய அரசின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
ஜஸ்டின் ட்ரூடோவும் அவரது அரசாங்கமும் சேவைகள் அல்லது வீட்டு வசதியை மேம்படுத்தாமல் குடியேற்றத்தை அதிகரிப்பதாக விமர்சிக்கப்பட்டனர்.
அதேநேரத்தில், கனடாவின் வேலையின்மை விகிதம் கடந்த இரண்டு மாதங்களில் 6.4% அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 14 லட்சம் மக்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, தொழிலாளர் சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாகத் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் திட்டத்தை மாற்றியமைப்பதாகக் கூறினார்.
“ஒரு நல்ல வேலையைக் கண்டுபிடிக்கப் போராடும் கனேடியர்களுக்கு இது நியாயம் செய்யவில்லை. தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர்களுக்கும் இது நியாயம் செய்யவில்லை. அவர்களில் சிலர் தவறாக நடத்தப்பட்டு, சுரண்டப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



