ஆசிபாபாத் பாலியல் தாக்குதல்: மாதவிடாய் காலத்தின்போது கொடூரமாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்

மாதவிடாய் காலத்தின்போது கொடூரமாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்
    • எழுதியவர், பல்லா சதீஷ்
    • பதவி, பிபிசி

``சாலையில் ஒரு செருப்பு கிடந்தது. அங்கிருந்து சற்று தூரத்தில் அந்தப் பெண் விற்பனைக்கு பொருள்கள் எடுத்துச் செல்லும் பை கிடந்தது. அதற்கும் சற்றுத் தள்ளி, ஒட்டுத் துணிகூட இல்லாமல் அந்தப் பெண்ணில் உடல், முழுக்க ரத்தம் பூசியது போல் இருந்தது. சம்பவம் நடந்தபோது அவர் மாதவிலக்காகி ரத்தப்போக்கில் இருந்தார். யாரோ பிடித்து இழுத்ததைப் போல முடிகள் இருந்தன. மார்பில் கை விரல் நகத்தால் கீறிய காயத்தில் இருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. உள்ளங்கைகளிலும், விரல்களிலும் ரத்தம் கசித்து கொண்டிருந்தது. கண்கள் வெளியே வந்திருந்தன, தலையில் அடித்து இழுத்ததைப் போல தெரிந்தது. உடல் நலிந்து இருந்த நிலையில், ரத்தம் மெல்ல மெல்ல கருப்பாக மாறிக் கொண்டிருந்தது. தொண்டையில் அறுத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.''

ஆசிபாபாத் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் கொலையில் உயிரிழந்த பெண்ணின் உடல் இந்த நிலையில் தான் இருந்துள்ளது. உடலைப் பார்த்த அவருடைய கணவரின் மூளையில் இந்த நினைவுகள் பதிந்துவிட்டன. சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின் அவருடைய கணவர் விவரித்த காட்சி இது. தாம் பார்த்த போது, மனைவியின் உடல் எந்த நிலையில் கிடந்தது என்பதை அவர் விவரித்திருந்தார்.

``அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் போலகூட இல்லை. ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளுடன் அவர்கள் விளையாடி இருக்கிறார்கள்'' என்று கண்ணீருடன் அவருடைய மாமியார் கூறினார்.

என்ன நடந்தது?

நிர்மல் மாவட்டம் கானாபுர் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னுரு மண்டலில் ஒரு கிராமத்தில் சில காலம் தங்கியிருந்தனர். வீடு வீடாகச் சென்று பலூன்கள், ஹேர்பின்கள் விற்பது, தலைமுடிகளை வாங்கிக் கொண்டு பாத்திரங்கள் தருவது ஆகியவை தான் அவர்களின் தொழிலாக இருந்தது. ஜெய்னுரு மற்றும் லிங்கபுர் பகுதியில் உள்ள ஓரிரு கிராமங்களுக்கு தினமும் சென்று தொழில் செய்து வந்தனர். தங்கள் வசதிக்காக குழந்தைகளை கானாபூரில் உள்ள அவர்களின் பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, ஜெய்னுருவில் ஓர் அறை எடுத்து தங்கியிருந்தனர். மனைவியை ஒரு கிராமத்தில் இறக்கிவிட்டு, கணவர் இன்னொரு கிராமத்துக்குச் செல்வது தினசரி வழக்கமாக இருந்தது. அவர் திரும்பி வரும் போது மனைவியை அழைத்துச் செல்வார்.

மாதவிடாய் காலத்தின்போது கொடூரமாக வல்லுறவு செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்

நவம்பர் 24 ஆம் தேதியும் அதுவேதான் நடந்தது. ஒரு கிராமத்தில் மனைவியை இறக்கிவிட்டு சென்றார். ``நாங்கள் காலை 6 மணிக்கு வீட்டில் டீ குடித்துவிட்டு, ஜெய்னுருவில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்குப் புறப்பட்டோம். 10 - 15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு கிராமத்துக்கு மீண்டும் நாங்கள் செல்வோம். பிறகு அடுத்த கிராமத்துக்குச் செல்வோம். காலை சுமார் 6.30 மணிக்கு அந்தக் கிராமத்தில் மனைவியை இறக்கிவிட்டு, அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு கிராமத்துக்கு நான் சென்றேன். பிற்பகல் 1 மணிக்கு மனைவியை இறக்கிவிட்ட கிராமத்துக்குத் திரும்பிச் சென்றேன். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அங்கு விசாரித்தபோது 10.30 மணிக்கே சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.

நாங்கள் தங்கியுள்ள அறைக்கு போன் செய்தேன். என் மனைவி அங்கே இல்லை என்று கூறினர். மறுபடியும் அந்தக் கிராமத்திற்கு திரும்பிச் சென்றேன். 10.30 மணிக்கே சென்றுவிட்டார் என்று எல்லோருமே கூறினர். அவரைப் பற்றி தகவல் தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள் என்று கேட்டுக்கொண்டு, என் செல்போன் நம்பரை அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்தேன். பிறகு ஜெய்னுரு சென்று, பொருட்களை போட்டுவிட்டு, வேறு சிலருடன் சென்று தேட ஆரம்பித்தேன். ஆனால், மனைவியைப் பற்றிய தடயம் எதுவும் கிடைக்கவில்லை. நான் இல்லாமல் அவர் எங்கும் செல்ல மாட்டார். தீவிரமாகத் தேடியும் கிடைக்காததால் என் தம்பிக்கு போன் செய்தேன். அண்ணியைக் காணவில்லை என்று சொல்லி, நமக்கு தெரிந்தவர்களை அழைத்து வருமாறு கூறினேன்'' என்று அன்றைய தினம் நடந்த சம்பவங்களை அவருடைய கணவர் விவரித்தார்.

உயிரிழந்தவரின் கிராமத்தில் இருந்து உறவினர்களும் நண்பர்களும் சென்று தேடிப் பார்த்தனர். அவரைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் காவல் நிலையத்தில் அன்றிரவு புகார் கொடுத்தனர். உறவினர்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது நடந்திருந்தால் உடலை தூக்கி வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் இருந்ததால், அவர்கள் குழுக்களாகப் பிரிந்து சுற்றுப்புற கிராமங்களில் தேடினர்.

``அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் போலகூட இல்லை. ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளுடன் அவர்கள் விளையாடி இருக்கிறார்கள்'' என்று கண்ணீருடன் அவருடைய மாமியார் கூறினார்.
படக்குறிப்பு, ``அது ஒரு பெண்ணின் உடல் என்பதைப் போலகூட இல்லை. ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளுடன் அவர்கள் விளையாடி இருக்கிறார்கள்'' என்று கண்ணீருடன் அவருடைய மாமியார் கூறினார்.

``காலையில் மீண்டும் நாங்கள் தேடினோம். உள்ளூர் கிராமவாசிகளும் தேடுவதற்கு உதவினர். இதற்கிடையில், சாலையில் ஒரு செருப்பு கிடப்பதை இளைஞர் ஒருவர் பார்த்திருக்கிறார். சற்று தொலைவில், ஒரு பையில் சில பொருள்கள் கிடந்துள்ளன. இன்னும் சற்றுத் தள்ளி மரங்களுக்கு இடையே ஒரு சடலம் கிடந்தது. அண்ணா உடல் கிடக்கிறது என அவர் கூச்சல் போட்டார். எல்லோரும் அங்கே சென்றோம்'' என்றும் கணவர் கூறினார்.

கொடூரமான செயல்

தாம் பார்த்தபோது உடல் எப்படிக் கிடந்தது என்பதைக் கூறிய அவருடைய கணவர், ``அது ரொம்பவும் கொடூரமானது. அவர்கள் மிகக் கொடூரமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது அவளுக்கு மாதவிலக்காகி ரத்தப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. கைகளிலும், கால்களிலும் நகக் கீறல்கள் இருக்கின்றன. தொண்டையை அறுத்திருக்கிறார்கள். விரல்களை வெட்டியிருக்கிறார்கள். வலியால் உடல் துடித்திருப்பதைப் போல தெரிகிறது. உடலில் துணி எதுவும் இல்லை. அவளைக் கொடுமைப்படுத்தி கொன்றிருக்கிறார்கள். ரத்த வெள்ளத்தில் உடல் கிடந்தது.

தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்றதற்கான அடையாளங்கள் இருந்தன. மார்பிலும் உடலிலும் நகத்தால் கீறிய அடையாளங்கள் இருந்தன. உடலில் இருந்து தோல் உரிந்து போயிருந்தது. உடல் தளர்ந்து போய், ரத்தம் மெல்ல கருப்பாக மாறிக் கொண்டிருந்தது. உடல் உப்பிவிட்டது. அவள் தாக்கப்பட்டிருக்கிறாள். கல்லால் அடித்து மண்டை ஓட்டை உடைத்திருக்கிறார்கள். கண்கள் வெளியே வந்துவிட்டன. தன்னை விடுவித்துக் கொள்ள போராடியதன் அடையாளமாக அவளுடைய கால்கள் குறுக்கே இருந்தன. கழுத்து, தொடைகள் மற்றும் உடலின் அடிப்பகுதிகளில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. வெறும் கைகளால் கத்தியை அவள் பிடுங்கியபோது நரம்பு அறுபட்டிருக்கிறது'' என்று கூறினார். சோகத்துடன் இவற்றை அவர் தெரிவித்தார்.

``ரத்த வெள்ளத்தில் அவளுடைய உடலை போட்டிருக்கின்றனர். அவளுடைய கைகளை உடைத்திருக்கிறார்கள். உடல் முழுக்கவே கருப்பாகிவிட்டது. துணிகள் எதுவும் இல்லை. தொண்டையை அறுத்திருக்கிறார்கள். தன் தலைமுடியை அவள் இழுத்துக் கொண்டிருக்கிறாள். வேதனையில் துடித்திருக்கிறாள். ஆனால் தொண்டையை அறுத்த நிலையில் அவளால் என்ன செய்ய முடியும்? ஒரு பொம்மையை வைத்து விளையாடுவதைப் போல என் மருமகளை வைத்து அவர்கள் விளையாடி இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து நான் வேதனையில் துடித்தேன். தலைமுடி அலங்கோலமாக இருந்தது. அது ஒரு பெண்ணின் உடலைப் போலவே இல்லை. ஒரு பிசாசின் உடலைப் போல இருந்தது'' என்று அவருடைய மாமியார் அழுதபடி கூறினார்.

ஆசிபாபாத் காவல் கண்காணிப்பாளர் எம். மல்லா ரெட்டி
படக்குறிப்பு, ஆசிபாபாத் காவல் கண்காணிப்பாளர் எம். மல்லா ரெட்டி

இறந்தவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் பாட்டி வீட்டில் தங்கி 6 மற்றும் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். ``அவர்களை நான் எப்படி வளர்க்கப் போகிறேன்? அவள் உயிரோடு இருந்திருந்தால், குடும்பத்துக்கு தைரியம் தருபவளாக இருந்திருப்பாள். ஆனால் இப்போது அந்த தைரியம் போய்விட்டது'' என்று மாமியார் குறிப்பிட்டார். ``என் மகனும், மருமகளும் எப்போதும் ஒன்றாகத்தான் இங்கே வருவார்கள். எங்கேயும் அவர்கள் தனியாகச் சென்றது கிடையாது. பொருள்கள் விற்க ஏதாவது கிராமத்துக்கு மருமகள் சென்றாலும், கணவன் வரும் வரை காத்திருப்பாள். ஆட்டோ பிடித்து போய்விட மாட்டாள்'' என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.

``ஒரு வெற்றிடத்தை அவள் விட்டுச் சென்றிருக்கிறார். என்ன செய்வது என எங்களுக்குத் தெரியவில்லை. குழந்தைகள் இப்போது அநாதைகளாகிவிட்டனர். என் மகனும் மருமகளும் ஒன்றாக வேலைக்குச் சென்று வந்தனர். அந்தப் பகுதியில் நல்ல வியாபாரம் இருந்தது. ஆனால் என்னால் அங்கு செல்ல முடியாது. அவளுடைய நினைவுகள் எனக்கு வந்து கொண்டே இருக்கும். அவள் இருந்திருந்தால், குடும்பத்தைப் பாதுகாத்திருப்பாள்'' என்று அவருடைய கணவர் கூறினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இப்போது அவர்கள் ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். ``நவம்பர் 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆள் காணாமல் போன வழக்கு என்று பதிவு செய்தோம். பிறகு, உடல் மீட்கப்பட்டதும், அது பாலியல் வல்லுறவு மற்றும் கொலை வழக்காக மாற்றப்பட்டது. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. குழுக்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆதாரங்கள் திரட்டுவதற்காக சிறப்பு காவல் குழுக்களையும் நாங்கள் பணியில் ஈடுபடுத்தினோம்.

விசாரணை அறிக்கை மற்றும் உடற்கூறு ஆய்வறிக்கை மூலம் அவருடைய உடலில் இருந்த தடயங்கள், ஆதாரங்களின் விவரங்களை சேகரித்தோம். குற்றஞ்சாட்டப்பட்டவர்களை நாங்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். தடயவியல் துறை அறிக்கைக்காக காத்திருக்கிறோம். மற்ற விசாரணைகள் எல்லாம் ஏறத்தாழ முடிந்துவிட்டன. இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் தடயவியல் அறிக்கை கிடைத்ததும் நாங்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம். அதாவது 20 நாட்களுக்குள் நாங்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறோம். விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம். அது உருவாக்கப்பட்டால், சட்டத்தின்படி கடுமையான தண்டனைகளைப் பெற்றுத் தர எங்களால் இயன்ற அளவுக்கு தீவிர முயற்சிகளை எடுப்போம்'' என்று ஆசிபாபாத் காவல் கண்காணிப்பாளர் எம். மல்லா ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.

சம்பவ இடம்
படக்குறிப்பு, சம்பவ இடம்

``இந்தச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இந்த மூன்று பேரின் மனைவியரும், அவர்களைப் பிரிந்து வாழ்கிறார்கள். சட்டவிரோதமாக மூங்கில் கடத்தும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டிருந்ததாக கிராமவாசிகள் தெரிவித்தனர். இப்போது அவர்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர். அந்தப் பெண்ணின் தொண்டையை அறுத்தபோது, இவர்களுடன் வேறு இரண்டு பேர் அந்தப் பெண்ணை பிடித்துக் கொண்டிருந்தனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் எப்போதும் கத்தி வைத்திருப்பார். விசாரணை நடந்த போது, இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்'' என்று ஆசிபாபாத் காவல் துணை கண்காணிப்பாளர் சத்யநாராயணா தெரிவித்தார்.

முரண்பாடு

ஹைதராபாத்தில் திஷா சம்பவம் நடந்ததற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இருந்தபோதிலும் இரு சம்பவங்களும் ஒரே காலக்கட்டத்தில் நடந்துள்ளன என்றாலும், இந்த சம்பவத்தை அரசும், அரசியல் தலைவர்களும், காவல் துறையினரும், ஊடகத்தினரும் புறக்கணித்திருக்கிறார்கள் என்று தலித் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

``இதர சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஹைதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்டிருக்கிறார், ஆசிபாபாத்தில் தாழ்த்தப்பட்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டிருக்கிறார். ஆசிபாபாத் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை. விரைவு நீதிமன்றமும் இல்லை. ஆனால் ஆசிபாபாத் சம்பவத்துக்குப் பிறகு நிகழ்ந்த, ஹைதராபாத் சம்பவத்திற்கு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்காக ஏன் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று நினைத்ததாலோ என்னவோ, குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை வெளியில் அழைத்து வந்து `என்கவுண்டரில்' சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் பெண்கள் நிறைய பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகின்றனர். ஆனால் இந்த வழக்குகளில் நீதி கிடைப்பது என்பது கானல் நீராகவே உள்ளது. நான்கு குழந்தைகளைக் கொலை செய்த சீனிவாச ரெட்டி இன்னும் சிறையில் இருக்கிறார். எந்த சமுதாயத்தினராக இருந்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்கும் மடிகா இடஒதுக்கீடு போராட்ட சமிதி (எம்.ஆர்.பி.எஸ்.) ஆறுதல் கூறி, அவர்களுக்காக போராடி வருகிறது. இருந்தபோதிலும், ஹைதராபாத் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் சமுதாயத்தைச் சேர்ந்த தலைவர்கள் அவரைப் பற்றி மட்டுமே பேசினர். நாடாளுமன்றத்திலும்கூட அந்தப் பெண்ணைப் பற்றி மட்டுமே பேசினர். இது பாகுபாடு இல்லையா'' என்று அந்த அமைப்பின் நிறுவனர் மன்டா கிருஷ்ணா கேள்வி எழுப்புகிறார்.

ஆசிபாபாத் சம்பவத்தில் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்தப் பகுதியில் பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியுள்ளன. 3 மண்டலங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரின் மோட்டார் சைக்கிளை, போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். தலித் அமைப்புகளின் தலைவர்கள், கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்.

சம்பவ இடம்

``பழங்காலத்தின்படி நியாயம் வழங்குங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. அரசியல்சட்டத்துக்கு உள்பட்டும், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டும் நீதி கிடைக்க வேண்டும் என்று தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.ஹைதராபாத் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை விவரித்துக் கூறிய ஊடகத் துறையினர், ஆசிபாபாத் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்று மட்டுமே கூறுகின்றனர்.

ஹைதராபாத் சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற நாங்களும் சென்றிருந்தோம். ஆனால் ஊடகங்களின் செய்திகளில் வரவில்லை. இப்போதும்கூட ஹைதராபாத் சம்பவம் பற்றி, புதிய புதிய கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆசிபாபாத் சம்பவம் தொடர்பாக இவை எல்லாம் காணாமல் போனது ஏன்?''என்று கிருஷ்ணா கேட்கிறார்.

விரைவு நீதிமன்றம் இனிமேல் தான் அமைக்கப்பட வேண்டும். ஆனால் ஆசிபாபாத் சம்பவத்துக்குப் பிறகு நடந்த ஹைதராபாத் சம்பவம் தொடர்பாக விரைவு நீதிமன்றத்தை அரசு அமைத்துவிட்டது என்கிறார் கிருஷ்ணா.

இதுபற்றி சமூக ஊடகங்களில் பலர் விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். சாதி வித்தியாசம் காரணமாகத்தான் இந்த இரு சம்பவங்களை அணுகிய நடைமுறைகளிலும் வித்தியாசம் இருக்கிறது என்பதை விவாதங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதன்விளைவாக 15 நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்துள்ளனர்.

உதவி

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளின்படி ரூ.8.25 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. ரூ.4.25 லட்சம் ஏற்கெனவே, அந்தப் பெண்ணின் கணவரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. அது தவிர, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, மூன்று ஏக்கர் நிலம், இரண்டு படுக்கை அறைகள் கொண்ட அடுக்குமாடி வீடு ஆகியவை வழங்குவதாக வாக்குறுதி தரப்பட்டிருப்பதாக பெண்ணின் கணவர் தெரிவித்தார். இரு குழந்தைகளையும் தெலங்கானா மாடல் பள்ளியில் சேர்க்க மாவட்ட காவல் துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: