இலங்கை: மஹிந்த ராஜபக்ஷ வசிக்க திருகோணமலை கடற்படை தளத்தை தேர்வு செய்தது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் தீவிரமாகி வரும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக அந்நாட்டின் பிரதமர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியிருந்த மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள ரகசிய இடத்தில் முப்படை வீரர்கள் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோர் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை.
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலையை ஆளும் அரசு தடுக்கத் தவறியதாகக் கூறி, நாடு தழுவிய அளவில் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை விலகினார்.
அன்றைய தினம் காலி முகத்திடலில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் திரண்டு அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களை கடுமையாகத் தாக்கினர்.
இதைத்தொடர்ந்து பல இடங்களில் போராட்டக்குழுவினரும் மஹிந்த ஆதரவாளர்களை தாக்கினர். இதில் எட்டு பேர் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.
பதற்றம் நிறைந்த அந்த சூழல்களுக்கு மத்தியில் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்ஷ, கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வடகிழக்கு கடலோர பகுதியில் உள்ள உள்ள திருகோணமலை கடற்படை தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டதை அறிந்து அதன் அலுவகம் முன்பாக நூற்றுக்கணக்கான போராட்டக்குழுவினர் திரண்டனர்.
அந்த கடற்படை தளம் மட்டும் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ளதால் அதன் முகப்பு வாயிலைத் தாண்டி போராட்டக்குழுவினரால் முன்னேற முடியவில்லை. காரணம், அந்த இடத்தில் கடற்படையினர் மட்டுமின்றி ராணுவ படையணியொன்றின் தலைமையகமும் உள்ளது.
இதனால், அங்கு வழக்கமாகவே நூற்றுக்கணக்கில் கனரக கவச வாகனங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்களுடன் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பர்.
கடற்படை விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
பாதுகாப்பு காரணங்களுக்காக மஹிந்த ராஜபக்ஷ கடற்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்றும் இலங்கையில் நிலைமை இயல்புக்கு திரும்பிய பிறகு விரும்பிய இடத்துக்கு அவர் அழைத்துச் செல்லப்படுவார் என்றும் இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கமல் குணரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை, பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் அல்லது உயிருக்கு தீங்கு விளைவிப்பவர்களைக் கண்டும் சுட படையினருக்கும் காவல்துறையினருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (பிஐஏ) நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இத்தகைய சூழலில் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ தனது ட்விட்டர் பக்கத்தில் எனது தந்தையோ நானோ நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஆனால், அலுவல்பூர்வ இல்லத்தை விட்டு திடீரென மஹிந்த ராஜபக்ஷ கடற்படை தளத்தில் தஞ்சம் அடைவது போல அங்கு சென்றது ஏன் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்படுகிறது.
ஹம்பந்தோட்டையில் பூர்விக வீட்டை போராட்டக்காரர்கள் எரித்தது, போலீஸ் கட்டுப்பாடுகளை மீறி இலங்கை நகரங்களில் நீடித்து வரும் வன்முறையை மீறி அசம்பாவிதம் நடைபெறுவதால் முப்படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதே சரி என நினைத்து மஹிந்த ராஜபக்ஷ இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். மஹிந்த தற்போது வசித்து வரும் திருகோணமலை கடற்படை தளம் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிறுவப்பட்டது. மேலும் விடுதலைப்புலிகள் உடனான உள்நாட்டுப் போரின்போது இந்த கடற்படைத்தளம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. அங்குள்ள வசதிகள், அதன் கேந்திர முக்கியத்துவம் தொடர்பான தகவல்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.
கடற்படை தள அம்சங்கள்
இலங்கை கடற்படையின் (SLN) மிகப்பெரிய தளத்தை கொண்டுள்ளது திருகோணமலை கடற்படை தளம்.

பட மூலாதாரம், Google
போர்த்துகீசிய, டச்சு கால கட்டுமான அமைப்புகளை கொண்ட இந்த இடம் கேந்திர, பாதுகாப்பு ரீதியிலான படையெடுப்பு, கண்காணிப்பு அம்சங்களை கவனமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு எளிதில் வெளி நபர்கள் உள்ளே நுழைய முடியாது. 10 மைல்களுக்கு அப்பால் முதல் ராணுவச் சாவடிகள், அதைத் தொடர்ந்து பிராந்திய ராணுவ படையணி தலைமையகம், அதன் வழியே கடற்படை தளத்துக்கு செல்லும் பாதைகள், அந்தப் பாதைகளில் பயிற்சிக்கல்லூரி, தளவாட பயிற்சி மைதானம், கடற்படை தொலைத்தொடர்பு கோபுரங்கள், செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதிகள், துறைமுகத்தை இணைக்கும் கடற்படை முகாம்கள் இங்கு உள்ளன.

பட மூலாதாரம், Google
இது இரண்டாம் உலக போரின் போது பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் கிழக்கிந்திய தீவுகளின் தலைமையகமாக விளங்கியது. ராயல் கடற்படை திரும்பப் பெறப்பட்ட பிறகு, ராயல் சிலோன் கடற்படைவசம் இந்த பகுதியின் கட்டுப்பாடு வந்தது. இன்று இந்த இடம், இலங்கை கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டளை தளமாகவும் அந்நாட்டின் கடற்படை மற்றும் கடல்சார் பயிற்சியகமாகவும் உள்ளது.

பட மூலாதாரம், EPA
இந்திய பெருங்கடலில் காலனித்துவ விரிவாக்கத்தின் போது, திருகோணமலை போர்ச்சுகல், டச்சு, பிரெஞ்சு மற்றும் இறுதியாக ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. இவர்கள் அனைவருமே இயற்கையாக அமைந்துள்ள திருகோணமலை துறைமுகத்தை விரிவாகவே தங்களுடைய வாணிபத்துக்காக பயன்படுத்தினர்.
திருகோணமலை கடற்படை தள வரலாறு
போர்த்துகீசியர்கள் இப்பகுதியைக் கட்டுப்படுத்தவும் தங்களுடைய அடையாளமாகவும் ஒரு வலுவான கோட்டையைக் கட்டினார்கள். டச்சுக்காரர்கள் துறைமுகத்தைப் பாதுகாக்க மற்றொரு கோட்டையைக் கட்டினார்கள். இவற்றில் மிகப்பெரியது 1624இல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட ஃப்ரெட்ரிக் கோட்டை. 1795இல் ஆங்கிலேயர்கள் அதைக் கைப்பற்றினார்கள். சிறிய கோட்டை ஓஸ்டன்பர்க், திருகோணமலையின் உள்பகுதி துறைமுகத்தின் நுழைவாயிலில் உள்ள ஓஸ்டன்பர்க் முகட்டின் மேல் கட்டப்பட்டது.

பட மூலாதாரம், SRI LANKA ARMY
இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் தங்களுடைய கடற்படை மற்றும் வாணிப கப்பல்களை நங்கூரமிட்டு நிறுத்த திருகோணமலை துறைமுகத்தை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினர். அந்த காலத்தில் நீராவி கப்பல்கள் அதிகமானதால் பிரிட்டிஷ் கடற்படை, திருகோணமலையிலேயே ஒரு நிலக்கரி நிலையத்தை நிறுவியது. இதன் மூலம் அதிக தூரம் பயணம் செய்து தங்களுடைய எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பயண ஆதாரத்தை தயாரிக்கும் முகமையாக திருகோணமலை மாறியது.
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், திருகோணமலை கடற்படை தளத்தின் அளவும் வசதிகளும் பெருகின. முதலாம் உலக போரின் போதும் அதற்குப் பின்னரும் இந்த வசதிகள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன. மிகப்பெரிய கப்பல்களுக்கு தேவைப்படும் எரிபொருளை சேமிக்கும் தொட்டிகள் நிறைந்த நிலையங்கள், உலர் துறைமுகங்கள், கப்பல் கட்டுமானம் மற்றும் பழுதுபார்ப்பு நிலையங்கள் இங்கே உருவாக்கப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
1920 ஆம் ஆண்டில், இங்கிலேயர்கள் தங்களுடைய ராணுவ பீரங்கிகளை ஆஸ்டன்பேர்க் மலைமுகட்டில் நிலைநிறுத்தத் தொடங்கினர். அவை திருகோணமலை துறைமுகத்தின் நுழைவாயிலைப் பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டன. இது தவிர துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை, துப்பாக்கி சுடும் பயிற்சித் தளம் போன்றவை இங்கு உருவாக்கப்பட்டன. சைனா பே என்றழைக்கப்படும் சீன விரிகுடா அருகே உள்ள இந்த இடத்தில் விமான ஓடுபாதை உள்ளது.
1940களில் நடந்த பல மோதல்களில் ஜப்பானியர்கள் இந்த துறைமுகத்தை பிரிட்டிஷ் படைவசமிருந்து கைப்பற்றினார்கள். அடுத்த சில ஆண்டுகளில் அமெரிக்கா உதவியுடன் இந்த துறைமுகம் மீட்கப்பட்டது. 1944இல் இங்கு உயர் அழுத்த திறன் வாய்ந்த வயர்லெஸ் நிலையம் உருவாக்கப்பட்டது.
1956இல் பிரிட்டிஷ் படையினர் திருகோணமலையில் இருந்து வெளியேறுமாறு அப்போதைய பிரதமர் பண்டார நாயக்க கேட்டுக் கொண்டார். அவர்கள் வெளியேறிய பிறகு ராயல் சிலோன் கடற்படை என்ற பெயரில் இலங்கை கடற்படை இங்கு கோலோச்சியது. 1980களிலும் 1990களிலும் தமிழீழம் கோரி தமிழ் அமைப்புகள், விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் யுத்தம் செய்தபோது, அவர்களை எதிர்கொள்ள திருகோணமலையில் இருந்தை முப்படையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த கடற்படை தளத்தில்தான் வீரர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பிறகு இந்த தளத்தை அடிப்படை முகாமாகக் கொண்டே இலங்கை வீரர்கள் தமிழ் பகுதிகளுக்குள் சென்று தாக்குதல் நடத்தி விட்டு முகாமுக்குத் திரும்புவதை வழக்கமாகிக் கொண்டிருந்தனர்.


பட மூலாதாரம், Getty Images
இந்திய பெருங்கடலில் உள்ள இலங்கையின் புவியியல் அமைப்பு, மேற்கு மற்றும் கிழக்கு நாடுகள் இடையிலான எந்தவொரு கடல் இயக்கத்திலும் இல்லாத வசதியைக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து ஹோமுஸ் ஜலசந்தி மற்றும் மலாக்கா ஜலசந்தி வரையிலான தூரம் சுமார் 2,000 மைல்கள். பாரசீக வளைகுடாவிற்கும் இந்தோனீசியாவிற்கும் இடையே உள்ள கடல் பாதையில் இலங்கை அமைந்துள்ளது. அட்லான்டிக் பகுதிக்கும் பசிஃபிக் பகுதிக்கும் மையப்பகுதியில் இருப்பதால் இது சிறந்த தொலைத்தொடர்பு முகமையாகவும் வரலாற்றில் பல நாடுகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்திய பெருங்கடலில் உள்ள பதற்றமான இடங்களை அடைய திருகோணமலை மிகவும் மையமான இடமாகும். மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான் அல்லது தென்கிழக்கு ஆசியாவில் கடல் மார்க்கமாக செயல்பாடுகளை ஆதரிக்க இதுவே வாய்ப்பான பகுதியாக கருதப்படுகிறது. 1991ஆம் ஆண்டு வளைகுடா போரின் போதும் 1980இல் இரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நெருக்கடிகளின் போதும் இந்த துறைமுகம் செய்யப்பட்டது.
1990களிலும் 2000களிலும் தடுத்து வைக்கப்பட்ட தமிழீழ ஆதரவாளர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இந்த கடற்படை தளத்தில் உள்ள தடுப்புக்காவல் மையங்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அந்த சிறை முகாம்களில் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சிறைகளை 'வதை முகாம்கள்' என்றும் அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகளும் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களும் அழைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












