You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைப்பு : பின்னணியில் யார்?
இலங்கை முள்ளிவாய்க்காலில் போர் நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திருயிருக்கிறது.
இலங்கையில் 3 தசாப்தம் நடந்த உள்நாட்டுப் போர் நிறைவடைந்து, எதிர்வரும் மே மாதம் 18ம் தேதியுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி யுத்தம் முடிந்த நிலையில், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை கடந்த 12 வருட காலமாக இலங்கைத் தமிழர்கள் நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வுகளை சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் வருடா வருடம் இந்த நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படும்.
மே மாதம் 12ம் தேதி முதல் ஒரு வார காலத்திற்கு நினைவேந்தல் வாரம் கடைபிடிப்பதை தமிழ்த் தரப்பு வழக்கமாக கொண்டுள்ளது.
இந்த ஆண்டு, நேற்று புதன்கிழமை நினைவேந்தல் வாரம் ஆரம்பமானது.
இதையடுத்து, முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் பொது நினைவேந்தல் தூபியொன்றை அமைப்பதற்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, குறித்த பகுதிக்கு நேற்று மாலை வேளையில் பொது நினைவு தூபி கொண்டு செல்லப்பட்ட பின்னணியில், அங்கு வருகை தந்த பாதுகாப்பு பிரிவினர் அதற்கு இடையூறுகளை விளைவித்ததாக தமிழ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
போலீசார் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு வருகைத் தந்து, அந்த இடத்தில் நினைவு தூபியை நிர்மாணிக்க இடமளிக்காது இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளனர்.
நினைவு தூபியை கொண்டு சென்றவர்களிடம், பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளையும் நடத்தியுள்ளதாக தெரிய வருகின்றது.
முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வருகை தந்தவர்களை அந்த இடத்திலிருந்து வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் உடன் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து, குறித்த பகுதியில் இரவு வேளையில் இராணுவத்தினர் முழு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், ஏற்கனவே முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த நினைவு தூபி இன்று (13) அதிகாலை வேளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, பொது நினைவு தூபியை அமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட நினைவு தூபி, குறித்த இடத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் இரவிரவாக இராணுவம் இருந்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறான பின்னணயில், நினைவேந்தல் தூபி உடைக்கப்பட்டுள்ளமை மற்றும் புதிய நினைவேந்தல் தூபி காணாமல் போயுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண சபை முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.
இந்த அசம்பாவிதத்தின் பின்னணியில், இராணுவமே உள்ளதாக அவர் குற்றச்சாட்டுகின்றார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு தாம் ஜனநாயக ரீதியிலான முயற்சிகளை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் அதனை தடுத்து வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்.
கோவிட் - 19 வைரஸ் பரவலை முன்னிலைப்படுத்தி, தமிழர்களை அடக்கும் முயற்சிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ், இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்னவிடம் வினவியது.
முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும், தமக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டார்.
கடந்த 11 வருட காலமாக தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அந்த இடத்தில் நடத்திய வருவதாகவும் அவர் கூறினார்.
எனினும், இந்த நினைவு தூபி தம்மால் உடைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் போலீஸாருடன் இணைந்து, தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவிக்கின்றார்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்