You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக விரைவில் அலுவலகம்
வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை விரைவில் அமைக்கவுள்ளதாக வடக்கு மாகாணத்தின் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரவித்துள்ளார்.
காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நீதிகோரி தொடர்சியாக போராடி வரும் நிலையில் காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே சுரேன் ராகவன் இதனை தெரிவித்தார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் பணி விரைவாக நடைபெற வேண்டும். அது எவ்வளவு சீக்கிரம் நடக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரமாக நடைபெற வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம். குற்றம் செய்தவர்களை நீதிக்கு முன்னால் கொண்டு வரலாம். அந்த அளவுக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு வலுமை உண்டு என்று அவர் கூறினார்.
செப்டம்பர் மாதம் முடியும் முன் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்ட்டோர் அலுவலகத்தை உருவாக்குவோம்.
துரித கதியில் அந்தப் பணிகள் நடக்க வேண்டுமென்று அதன் தலைவரிடம் கேட்டுள்ளேன். அந்த அலுவலகம் அமைப்பதற்கான இடம் தயார். அதனடிப்படையில் அந்தப் பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படும்.
இலங்கையில் மட்டுமல்ல வேறு நாடுகளிலும் காணாமல் போனோர் பற்றி தொடர்ந்தும் தேடிக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் நிலவுகின்றன.
காணாமவ் ஆக்கப்பட்டோர் விடயத்தை பொறுத்தவரையில் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அவர்களிடம் எந்த ரீதியான ஆறுதலைக் தேடுகின்றீர்கள் என்று கேட்க வேண்டும். அதிலொன்று மனிதாபிமான ஆறுதல், மற்றொன்று நியாயம் கிடைக்க வேண்டும். இதில் எது வேண்டுமென்று அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் விளக்கியுள்ளார்.
மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும். அவர்கள் என்ன தீர்வை விரும்புகின்றார்களோ அந்தத் தீர்வுகளுக்கான அனுசரணையை நாங்கள் வழங்க வேண்டுமே ஒழிய அவர்கள் என்ன செய்ய வேண்டுமென நாங்கள் சொல்ல கூடாது. ஆகையினால் பாதிக்கப்பட்டவர்களிடம்தான் நாங்கள் கேட்க வேண்டும்.
இலங்கையில் 1977-ம் ஆண்டு முதல் பலர் காணாமல் ஆக்கப்பட்டேனர். ஆனாலும் இறுதிக் கட்டத்தில் சரியாக காணமல் ஆக்கப்பட்டோர் எவ்வளவு பேர் என்று நாங்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை.
சிலர் சில எண்ணிக்கையை கொடுக்கின்றனர். ஆகையினால் எங்கள் நாட்டில் வாழும் ஒவ்வொரு மக்களுக்கும் தீர்வும் நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.
அதனை என்னுடைய பதவிக்காக செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக செய்வது தான் மனிதாபிமானம், சர்வதேச மரபு. அதுதான் சரியானது என்று என்ணுகின்ற அந்த நிலையில்தான் நான் இருக்கிறேன். அந்த நிலைப்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்