அஜாஸ் பட்டேல்: இந்தியாவுக்கு எதிராக 10 விக்கெட்களையும் கைப்பற்றிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்

#AjazPatel

பட மூலாதாரம், Getty Images

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணியை வெறும் 62 ரன்களுக்கு சுருட்டியுள்ளது இந்திய அணி.

இந்திய அணிக்காக அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் எட்டு ரன்கள் மட்டுமே கொடுத்து நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

முகமது சிராஜ் மூன்று விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் இரண்டு விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 325 ரன்கள் எடுத்திருந்தது.

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 62 ரன்கள் எடுத்ததுதான் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அந்த அணி எடுத்த மிகவும் குறைந்தபட்ச ஸ்கோர்.

ஓர் அணியாக நியூசிலாந்துக்கு இது மகிழ்ச்சிகரமான செய்தி இல்லை என்றாலும் நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் கவனிக்கத் தகுந்த சாதனை ஒன்றை இந்தியாவுக்கு எதிராகப் படைத்துள்ளார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இருந்தார் அஜாஸ் பட்டேல்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இதற்கு முன்பு 1956இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம் லேகர் மற்றும் 1999இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனில் கும்ளே ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டும்தான் ஒரே இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் கைப்பற்றிய சாதனையைப் படைத்திருந்தனர்.

தற்போது அதை மூன்றாவது நபராக அதைச் செய்திருக்கிறார் 33 வயதாகும் அஜாஸ் பட்டேல்.

அவர் குறித்த சில சுவாரசியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

  • சுழற்பந்து வீச்சாளரான அஜாஸ் பட்டேல் இந்தியாவில் பிறந்தவர். 1988ஆம் ஆண்டு அப்போதைய பம்பாய் நகரில் (இன்றைய மும்பை) பிறந்தார். இன்று அதே மும்பை மண்ணில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
  • தாம் பிறந்த மும்பை மண்ணிலேயே இதைச் செய்திருப்பது தமக்கும் தமது குடும்பத்துக்கும் சிறப்பான தருணம் என்று அஜாஸ் பட்டேல் கூறியுள்ளார்.
  • இவரின் எட்டாம் வயதில் இவரது குடும்பம் நியூசிலாந்துக்கு குடியேறியது. அடுத்த சில ஆண்டுகளில் ஆக்லாந்து கிரிக்கெட் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
  • 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கினார்.
  • அதே 2018ஆம் ஆண்டு முப்பதாவது வயதில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத் தமது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார் அஜாஸ் பட்டேல்.
  • தாம் அறிமுகமான டெஸ்ட் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து அவர் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக அபுதாபியில் நடந்த அந்த போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற இது மிகவும் உதவிகரமாக இருந்தது.
  • இந்த போட்டி அல்லாமல் இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளிலும் ஏழு டி20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார் அஜாஸ் பட்டேல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :