எம்.எஸ். தோனியின் பெயர் இல்லாத பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியல்

பட மூலாதாரம், Getty Images
இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டுக்கான வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை.
சர்வதேச அளவிலான ஒருநாள், டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தத்தை ஊதியத்தை அடிப்படையாக கொண்டு கிரேட் ஏ+, ஏ, பி, சி முதலிய பிரிவுகளில் ஒவ்வோர் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான நடப்பு ஆண்டுக்கான இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதே போன்று, பிசிசிஐ தற்போது வெளியிட்டுள்ள ஒப்பந்த பட்டியலின் எந்த பிரிவிலும் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா?
பிசிசிஐ வெளியிட்டுள்ள வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவர் இனி எப்போதுமே இந்திய அணிக்காக விளையாட மாட்டார் என்று பொருளில்லை என்றும், ஆனால் பிசிசிஐயின் நீண்டகால திட்டத்தில் தோனி இல்லை என்றும் தெரிவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்திய அணிக்கு தலைமையேற்று செயல்பட்ட வீரர்களிலேயே ஒருநாள், சாம்பியன்ஸ் ட்ராபி, டி20 ஆகிய மூன்று வித சர்வதேச போட்டிகளிலும் உலக கோப்பையை பெற்று தந்த ஒரே கேப்டன் தோனி ஆவார்.
தோனியின் தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011இல் 50 ஓவர் உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை இந்திய அணி கைப்பற்றியிருந்தது.
வீரர்களின் ஊதியம் என்ன?
கிரேட் ஏ+ இடம்பெறும் வீரர்களுக்கு ஏழு கோடி ரூபாயும், ஏ, பி மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு முறையே ஐந்து, மூன்று மற்றும் ஒரு கோடி ரூபாயும் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் மொத்தம் 27 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு வீரர்கள் முறையே ஏ மற்றும் சி பிரிவுகளில் இடம்பெற்றுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ஏழு கோடி ரூபாய் (ஏ+ பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:
- விராட் கோலி
- ரோகித் சர்மா
- ஜஸ்பிரித் பும்ரா
ஐந்து கோடி ரூபாய் (ஏ பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:
- ரவிச்சந்திரன் அஸ்வின்
- ரவீந்திர ஜடேஜா
- புவனேஷ்வர் குமார்
- புஜாரா
- ரஹானே
- கே.எல். ராகுல்
- ஷிகர் தவான்
- முகம்மது ஷமி
- இஷாந்த் சர்மா
- குல்தீப் யாதவ்
- ரிஷப் பந்த்

பட மூலாதாரம், Getty Images
மூன்று கோடி ரூபாய் (பி பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:
- விருத்திமான் சாஹா
- உமேஷ் யாதவ்
- யஸ்வேந்திர சாஹால்
- ஹர்திக் பாண்டியா
- மயங்க் அகர்வால்
ஒரு கோடி ரூபாய் (சி பிரிவு) ஊதியம் பெறும் வீரர்கள்:

பட மூலாதாரம், Getty Images
- கேதர் ஜாதவ்
- நவ்தீப் சைனி
- தீபக் சாஹர்
- மனிஷ் பாண்டே
- ஹனுமா விஹாரி
- ஷர்துல் தாக்கூர்
- ஷ்ரேயாஸ் ஐயர்
- வாஷிங்டன் சுந்தர்
மேற்காணும் பட்டியலில் எந்தவொரு பிரிவிலும் மகேந்திர சிங் தோனி இடம்பெறவில்லை. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய அரை இறுதி போட்டியில் கடைசியாக தோனி விளையாடினார்.
அதன் பின்னர் எந்தவொரு சர்வதேச போட்டியிலும் இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பிசிசிஐயின் இந்த அறிவிப்பு மூலம் சர்வதேச அரங்கில் தோனியின் கிரிக்கெட் வாழ்வு முற்றுப்பெறும் தருணத்துக்கு வந்துவிட்டதா என சமூக ஊடகங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












