இமயமலையில் தாவரங்களின் வளர்ச்சி விரிவடைந்துள்ளது - புதிய ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நவின் சிங் கட்கா
- பதவி, சுற்றுசூழல் செய்தியாளர், பிபிசி
எவரெஸ்ட் மலைப்பகுதி உட்பட இமயமலையின் பல பகுதிகளில் தாவரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புதிய ஆராய்ச்சி ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
முன்பு தாவரங்கள் வளராத பகுதிகளில் கூட தற்போது செடிகள் நன்கு வளர்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செயற்கைகோள் தரவுகளை பயன்படுத்தி 1993ல் இருந்து 2018 வரை, தாவரங்களின் வளர்ச்சி பசுமையான பகுதிகளிலும் பனி படர்ந்த பகுதிகளிலும் எவ்வாறு இருக்கிறது என்பதை ஓர் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் குளோபல் சேஞ்ச் பயாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
நாசாவின் லேண்ட் சாட் செயற்கைக்கோள் புகைப்படங்களை வைத்து, நிலப்பகுதியின் பசுமை தன்மையை மதிப்பிட்டனர்.
இந்து குஷ் இமயமலையில் இருந்து கிழக்கில் உள்ள மியான்மர் முதல் மேற்கில் உள்ள ஆப்கானிஸ்தான் வரை வெவ்வேறு இடங்களை உள்ளடக்கிய ஆராய்ச்சி இது.
இதன் மூலம் அனைத்து இடங்களையும் ஒப்பிடுகையில் எவரெஸ்ட் சிகரத்தில், குறிப்பிடத்தக்க அளவில் தாவரங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து இமயமலையின் பனிப்பாறைகள் மற்றும் நீர் அமைப்புகள் தொடர்பாக பணிபுரியும் பிற ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளும் தாவரங்களின் விரிவாக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
''வெப்பமான மற்றும் ஈரமான பருவ நிலையில் என்ன நடக்குமோ அவ்வாறே இந்த ஆராய்ச்சியின் முடிவுகளும் உள்ளன. இயற்கையாக நிகழும் பருவநிலை மாற்றங்களும் ஆராய்ச்சி முடிவுகளும் பொருந்துகின்றன'' என இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத நெதர்லாந்தை சேர்ந்த பேராசிரியர் வால்டர் இம்மர்சீல் கூறுகிறார்.

பட மூலாதாரம், DOMINIC FAWCETT
எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் பனிப் பொழிவு இல்லாத மாதங்களில் தாவரங்கள் வளர நல்ல சூழல் அமைகிறது. மேலும் பனிபொழிவு ஏற்படும் மிக முக்கியமான உயரத்தில் தாவரங்கள் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளன.
இந்த மாற்றத்திற்கான காரணங்கள் ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை.
இமயமலையின் சுற்றுசூழல் அமைப்பை பொறுத்தவரை பருவநிலை மாற்றத்தால் அங்கு தாவரங்கள் பாதிக்கப்படும் என வேறு ஆராய்ச்சிகள் சில கூறுகின்றன.
''வெப்பநிலை அதிகரிக்கும் போது நேபாளம் மற்றும் சீனாவின் நிலப்பகுதிகளில் மரங்கள் வளர்ச்சி விரிவடைவதைக் காணமுடியும்'' என நேபாளத்தின் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துணை பேராசிரியர் அச்யூத் திவாரி கூறுகிறார்.
குறைந்த உயரத்தில் உள்ள மரங்களுக்கு என்ன நடக்கிறதோ, அதேதான் வெப்பநிலை அதிகரிக்கும்போது உயரத்தில் உள்ள மரங்களுக்கும் நிகழும்.
இமய மலையில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வேறு சில விஞ்ஞானிகளும் தாவரங்களின் பரவல் விரிவடைந்திருப்பதைக் காட்டும் இந்த புகைப்படத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், ELIZABETH A. BYERS
இமயமலையில் ஒரு காலத்தில் பனிப்பாறைகள் நிறைந்த இடங்களில் கூட தற்போது பசுமையாக செடிகள் வளர்ந்துள்ளன என தாவர சூழலியலாளர் எலிசபெத் பெயர் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த பனிப்பாறைகள் இருந்த சில இடங்களில், இப்போது குப்பைகள் மூடப்பட்ட நிலையில் கற்பாறைகள் உள்ளன, அவற்றில் பாசிகள் மற்றும் பூக்கள் கூட காணப்படுகின்றன.

பட மூலாதாரம், ELIZABETH A. BYERS
இந்த ஆராய்ச்சியின் மூலம் , பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் உருகுவது தாமதாகுமா அல்லது பனிப்பாறைகள் மிக விரைவாக உருகுமா என்ற முக்கியமான கேள்வி எழுந்துள்ளது ? " என்று ஆண்டர்சன் கூறுகிறார்.
ஆனால் எட்டு நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் ஹிந்து குஷ் இமயமலையை, 140 கோடி மக்கள் தண்ணீர் தேவைக்காக சார்ந்து வாழ்கின்றனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












