அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகள்: ரிசர்வ் வங்கி, செபி என்ன செய்ய முடியும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி ஹிந்தி சேவை
சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவின் முன்னணி பணக்கார தொழிலதிபராக இருந்த கௌதம் அதானியின் நிதி சாம்ராஜ்ஜியம் சரிவை சந்தித்தது.
அதானி குழும நிறுவனங்களின் சந்தை மூலதனம் சுமார் 22,000 கோடி டாலர்கள் ஆகும். ஆனால் அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்கின் பரபரப்பான அறிக்கை ஜனவரி 25 ஆம் தேதி வெளிவந்ததிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து இறங்குமுகமாக இருந்தன.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையை நிராகரித்துள்ள அதானி குழுமம், இது நிறுவனத்திற்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி என்று குறிப்பிட்டுள்ளது.
413 பக்கங்கள் கொண்ட தனது பதிலில் அதானி குழுமம், "பொய்கள் நிறைந்த இந்த அறிக்கை இந்தியா மீதான தாக்குதல்" என்று தெரிவித்துள்ளது.
தாங்கள் எப்போதுமே இந்திய சட்டங்களை மதித்து நடப்பதாகவும், எந்த தவறும் செய்யவில்லை என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
சந்தையில் நிலவும் கொந்தளிப்பை கருத்தில் கொண்டு அதானி குழுமம், முழுமையாக விற்கப்பட்ட போதிலும் தனது 250 கோடி டாலர்கள் FPO பங்கு விற்பனையைத் திரும்பப் பெற்றுள்ளது.
இதுவும் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
பத்திர விற்பனையை நிறுத்தியுள்ள அதானி குழுமம்
அதானி குழுமம் தனது முதல் பத்திர விற்பனை மூலம் 1,000 கோடி ரூபாய் திரட்டும் திட்டத்தையும் நிறுத்தி வைத்துள்ளது என்று தி மிண்ட் மற்றும் எகனாமிக் டைம்ஸ் தெரிவிக்கிறது.
உலக பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த கௌதம் அதானி தற்போது உலகின் முதல் 20 செல்வந்தர்களின் பட்டியலில் இருந்து வெளியே தள்ளப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் அதானி குழுமத்தின் நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முறைப்படுத்தும் அமைப்புகளிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்து இந்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது என்று செய்தி முகமை ராய்ட்டர்ஸ் கூறுகிறது. ஆதாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியும் அதானி குழுமத்திற்கு வங்கிகளால் வழங்கப்பட்ட கடன் குறித்த தகவல்களைக் கேட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான எஸ்பிஐ, அதானி குழும நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.
அதானியின் பங்குகளுக்கு ஈடாக இந்த கடன் வழங்கப்படவில்லை என்றும் கடன் பாதுகாப்பாக உள்ளது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளின் தாக்குதல்
வெள்ளிக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தை எழுப்பின. அதானி குழுமத்தின் நிதி பரிவர்த்தனைகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க அவை வலியுறுத்தின.
உள்கட்டமைப்பு, விமான நிலையம், துறைமுகம், எரிவாயு, சுத்தமான எரியாற்றல் மற்றும் நுகர்வோர் பொருட்கள் ஆகிய துறைகளில் பணியாற்றி வரும் அதானி குழுமத்தின் வணிகம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களைக் கண்காணித்து முறைப்படுத்தும் அமைப்பான SEBI (Securities and Exchange Board of India) மீதும் எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன.
அதானி குழுமம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட நிலையில் செபி தலைவர் பதவி விலக வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி ஜோஹர் சர்க்கார் கூறியுள்ளார்.
அதானி குழுமத்தின் மீதான புகார்கள் ஏன் விசாரிக்கப்படவில்லை என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார் அவர்.
மறுபுறம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் இந்தியாவின் ஆளும் கட்சியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன என்று டிஎம்சி எம்பி ஷத்ருஹன் சின்ஹா கூறியுள்ளார்.
இதனிடையே, அதானி குழுமத்தின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவின் நற்பெயருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
அதானி குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் FPO பங்கு விற்பனை புதன்கிழமை திரும்பப் பெறப்பட்டதன் காரணமாக இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளோ கெளரவமோ பாதிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
இந்தியாவின் முறைப்படுத்தும் அமைப்புகள் மீது அரசின் நெருக்குதல் இல்லை என்றும் சந்தையை நிலையானதாக வைத்திருக்கவும், ஒழுங்குபடுத்தவும் தேவையான அனைத்தையும் அவைகள் செய்யும் என்றும் நிர்மலா சீதாராமன், குறிப்பிட்டார்.
செபி மற்றும் ஆர்பிஐ என்ன செய்ய முடியும்?
வங்கி செயல்பாட்டையும், கடன் பரிவர்த்தனைகளையும் ரிசர்வ் வங்கி முறைப்படுத்த முடியும்.
அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட கடன்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறு ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் கூறியுள்ளது.
"கடனுக்கான உத்தரவாதம் மற்றும் ஆவணங்களையும் ரிசர்வ் வங்கி சரிபார்க்கலாம். கடன் கொடுக்கும் போது வழக்கத்திற்கு மாறான பலன்கள் ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆர்பிஐ ஆராயலாம்," என்று நிதி விவகார நிபுணர் மனோஜ் குமார் கூறினார்.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), மூலதன சந்தையை கண்காணிக்கிறது.

பட மூலாதாரம், PTI
"பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் கடன் உத்தரவாதம் மற்றும் பங்குகளை செபி கண்காணிக்கிறது. நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிதி பரிவர்த்தனைகளை செபி சரிபார்க்கலாம். அதாவது, செபி, நிறுவனத்தின் ஆவணங்களை சரிபார்க்கலாம். தேவை உள்ளது என்று அது கருதினால் முழுமையான விசாரணைக்கு ஒரு தடயவியல் ஆய்வாளரையும் நியமிக்கலாம். முதலீட்டாளர்கள் புகார் செய்தால், அதில் உறுதியாக ஏதாவது இருந்தால், அதை செபியும் விசாரிக்கலாம்," என்று மனோஜ் குமார் தெரிவித்தார்.
செபி அனுப்பிய மின்னஞ்சல்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய பதிவு வசதிகளை வழங்கும் இந்திய வங்கிகளுக்கு செபி கடந்த வெள்ளியன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது என்று CNBC கூறுகிறது.
அங்கீகரிக்கப்பட்ட டெபாசிட்டரி யூனிட்கள் தங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன் தொடர்பு கொள்ள வேண்டும் என்று செபி தனது மின்னஞ்சலில் வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்ய உதவும் வங்கிகளின் அலகுகள் DDP என்று அழைக்கப்படுகின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்களை பதிவு செய்வது உட்பட பல பணிகளை இவை மேற்கொள்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை தொடர்பு கொண்டு முதலீடு செய்யப்பட்ட நிதிகளின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு இந்த அலகுகளை வங்கிகள் கேட்டுக்கொள்ளவேண்டும் என்றும் செபி கூறியுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தனது உத்தரவைப் பின்பற்றவில்லை என்றால் வெளிநாட்டு முதலீட்டாளரின் பதிவு ரத்து செய்யப்படும் என்றும் செபி தெரிவித்துள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் அந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 2024 மார்ச் 30 ஆம் தேதிக்குள் தங்கள் பங்குகளை விற்றாக வேண்டும்.
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நேரம் மிகவும் முக்கியமானது என செபி எடுத்துள்ள இந்த நடவடிக்கை குறித்து மணி கண்ட்ரோல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில் அதானி குழுமம் தனது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்களின் உண்மையான அடையாளத்தை மறைத்துவிட்டதாக அமெரிக்க தடயவியல் நிதி நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியுள்ளது.
எதிர்க்கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கை
அதானி குழுமத்தின் நிதி ஆவணங்களை செபி விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இருப்பினும் அதுபோன்ற எந்த ஒரு விசாரணையும் மேற்கொண்டிருப்பதாக இதுவரை செபியிடம் இருந்து தகவல் இல்லை.
"சந்தையின் ஒழுங்கான மற்றும் திறமையான செயல்பாட்டிற்காக தான் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும், சில பங்குகளில் அதிக ஏற்ற இறக்கம் நிலவும் காரணமாக கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் செபி சனிக்கிழமை கூறியது," என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
ஆயினும் அதானி குழுமத்தின் பெயரை செபி குறிப்பிடவில்லை.
"தேவைப்பட்டால் குழுமத்தின் CFO (தலைமை நிதி அதிகாரி) மற்றும் பிற அதிகாரிகளின் அறிக்கைகளையும் செபி பதிவு செய்யலாம். தேவை ஏற்பட்டால் பரிவர்த்தனையை நிறுத்த அல்லது சில அலகுகளை தடை செய்ய செபி உத்தரவிடலாம். ஆனால் இவை அனைத்தும் விசாரணையைப் பொறுத்தே அமையும். செபிக்கு விசாரணை செய்ய அதிகாரம் உள்ளது. ஆனால் ஏதாவது தவறு கண்டுபிடிக்கப்படும் போது மட்டுமே செபி இதைச்செய்யும்," என்று மனோஜ் குமார் கூறுகிறார்.
இதுவரை செபி தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நிதி நிபுணரான ஷரத் கோலி, "செபி, சந்தையை முறைப்படுத்தும் அமைப்பாகும். பதிவு செய்யப்படும் நிறுவனங்கள் சரியானவை, ஆவணங்களில் முறைகேடு இல்லை என்பதை உறுதி செய்வது செபியின் பொறுப்பு. பங்குச் சந்தையில் மோசடி அல்லது செபியின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படாமல் இருப்பது தெரியவந்தால் செபி தலையிடும். இல்லையெனில் செபி தலையிடாது," என்றார்.
ஆயினும் ஒரு மேல் அல்லது கீழ் வரம்பு மூலம் எந்தவொரு பங்கும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கீழே விழுவதையோ அல்லது மேலே உயருவதையோ கட்டுப்படுத்தி தடுக்க முடியும்.
"செபி நேரடியாக எதையும் செய்ய முடியாது. ஆனால் பங்குச் சந்தையிடம் பல வழிமுறைகள் உள்ளன. பங்குகளில் 'மேல் அல்லது கீழ்' சர்க்யூட் போடலாம் அதாவது ஒரு குறிப்பிட்ட சதவிகித சரிவு அல்லது ஏற்றத்திற்குப்பிறகு பங்கு விற்பனையை செய்யமுடியாது," என்று மனோஜ் குமார் சுட்டிக்காட்டினார்.
"நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்கள். சர்க்யூட் ஃபில்டரைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்ற இறக்கங்களை ஓரளவு முறைப்படுத்தலாம். பங்குகளின் வர்த்தகத்தை நிறுத்துவதன் மூலம், மேலும் கொந்தளிப்பாக மாறுவதை தடுக்கலாம்," என்றார் அவர்.
"பங்குச் சந்தை ஒரு சுதந்திர சந்தை. அங்கு 'தேவை மற்றும் சப்ளை', விலைகளை தீர்மானிக்கிறது. பங்குகளின் விலையேற்றம் அல்லது வீழ்ச்சியில், சந்தை கட்டுப்பாட்டாளரின் பங்கு இல்லை,"என்று ஷரத் கோலி தெரிவித்தார்.
அரசு ஏதாவது செய்யுமா?
அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய வணிகக் குழுவாகும். இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் அதானி குழுமத்தின் பெரிய பங்கு உள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதானி குழுமம் பலவீனமாவது, இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பலர் கருதுகின்றனர்.
இந்த நிலையில் அரசால் ஏதாவது செய்ய முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதானி குழுமத்தின் நஷ்டம் சந்தையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை விவரித்த ஷரத் கோலி, " இது அதானி குழுமத்தின் இழப்பு மட்டுமல்ல, இது முதலீட்டாளர்களின் இழப்பு. பெரிய நிறுவன முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனது சுமார் ஒரு சதவிகித முதலீட்டை அதானி குழுமத்தில் செய்துள்ள எல்.ஐ.சி.யும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. இது தவிர சிறு முதலீட்டாளர்களும் பங்கு வர்த்தகர்களும் நஷ்டம் அடைந்திருப்பார்கள். அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களும் இதில் முதலீடு செய்துள்ளனர். சந்தையில் முதலீடு செய்வது ஆபத்துக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் ஒவ்வொருவருக்கும் இதில் ஆபத்து இருக்கிறது என்பது தெரியும்," என்று குறிப்பிட்டார்.
"அதானி குழுமம் ஒரு தனியார் நிறுவனம். இதுபோன்ற சூழ்நிலையில் அதை நேரடியாக காப்பாற்ற இந்திய அரசால் அதிகம் எதுவும் செய்ய முடியாது. ஒருவரை தோல்வியில் இருந்து காப்பாற்ற அரசு விரும்பினால் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். ஆனால் எந்தவொரு தனியார் குழுவையும் காப்பாற்ற அரசு முன்வர வேண்டும் என்று கூறும் சட்டம் எதுவும் இல்லை," என்றார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
ஹிண்டன்பர்க் ஓர் அமெரிக்க நிறுவனம். அத்தகைய சூழ்நிலையில் அதானி அல்லது இந்திய முறைப்படுத்தும் அமைப்புகளுக்கு இந்தியாவில் அதன் மீது நடவடிக்கை எடுக்க வழி ஏதும் இல்லை.
நம்பிக்கையை உருவாக்கும் சவால்
"ஹிண்டன்பர்க் அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி ஆராய்ச்சி நிறுவனம். நமது சட்டங்கள் அதற்குப் பொருந்தாது. அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையை அமெரிக்கா சென்றுதான் எடுக்கமுடியும். எதிர்மறை பிரச்சாரம் செய்வதாக ஹிண்டன்பர்க் மீது குற்றம் சாட்டப்படலாம். ஆனால் ஹிண்டன்பர்க் மீது இந்திய முறைப்படுத்தும் அமைப்புகளுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. இந்த அமைப்புகள் இது குறித்து எதுவும் செய்ய முடியாது."என்று ஷரத் கோலி தெரிவித்தார்.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கையில் எந்த விஷயங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், சந்தையில் அவை பற்றிய உறுதித்தன்மை ஏற்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். குழுமத்தின் நிதி ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது என்ற நம்பிக்கை வரவேண்டும். நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவது அதானி குழுமத்திற்கு இருக்கும் மிகப்பெரிய சவாலாகும்.
"ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், வங்கிகளின் கடன்கள் அல்லது கடன் பத்திரங்களை பாதிக்காது என்பதை சந்தை நம்ப வேண்டும். நிறுவனத்திடம் போதுமான பணப்புழக்கம் உள்ளது என்றும் கடன் டீஃபால்ட் ஆகாது என்றும் சந்தை நம்பும்போது அதானி குழுமத்தின் நிலைமை மீண்டும் சரியாகும். நம்பிக்கையில்தான் சந்தை நடக்கிறது. அதானி குழுமத்தின் மீது சந்தையின் நம்பிக்கை இருந்தால் சீக்கிரம் நிலைமை சரியாகலாம். எட்டு லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது. இது ஓரிரு நாட்களில் அல்லது ஒரு வாரத்தில் சரியாகாது. இதற்கு நேரம் பிடிக்கும்,"என்று மனோஜ் குமார் தெரிவித்தார்.
"ஒளிவுமறைவு அதிகம் இல்லை என்றால், மோசடி இல்லை என்றால் நம்பிக்கை மீண்டும் பிறக்கும்," என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













