தமிழ்நாடு டாஸ்மாக் மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: நிர்வாக நிலைப்பாடு சரிதானா?

பட மூலாதாரம், NATHAN G
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
டாஸ்மாக் மதுபான கடையில் வாங்கிய பாட்டில்களை மதுவை காலி செய்த பின்னர் திரும்ப கொடுக்கும் விவகாரத்தில், நீலகிரி மாவட்டத்தில் முதல் கட்ட சோதனை நடவடிக்கையில் 70 சதவீத பாட்டில்கள் திரும்பப்பெறப்பட்டுள்ளதால், கோவை மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட சோதனையாக பாட்டில்களை திரும்பப் பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் பாட்டில்களை திரும்ப பெறுவதில் கடுமையான சவால்களை சந்தித்துள்ளதாக கூறும் டாஸ்மாக் நிர்வாகம், சோதனை நடைமுறைகளை வைத்து, தமிழகம் முழுவதும் பாட்டில்களை திரும்ப பெறுவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் தினமும் சுமார் 10 லட்சம் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் காலி மதுபாட்டில்கள் வீசப்படுவதால், வனவிலங்குகள் பாதிக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்று கடந்த மே மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில், விற்பனையின்போது 10 ரூபாய் அதிகப்படியாக வாங்கி, மதுபாட்டிலை திரும்பக் கொடுப்பவர்களுக்கு அந்தத் தொகையைத் திருப்பித் தரலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்திருந்தது.
நீலகிரியில் சோதனை முயற்சியில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images
கடந்த மே மாதம் நீலகிரியில் டாஸ்மாக் பாட்டில்களை திரும்ப பெறும் முயற்சி ஒரு மாதம் செயல்படுத்தப்பட்டது. முதல்கட்ட சோதனையின் முடிவில், நீலகிரி மாவட்டத்தில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பாட்டில்கள் ஒரு மாதத்தில் திரும்பப் பெறப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை மாநிலம் முழவதும் ஏன் செயல்படுத்தகூடாது என நீதிபதிகள் கேட்டனர். நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் டாஸ்மாக் நிறுவனம் பட்டியலிட்ட எதிர்ப்புகளை மீறி காலி பாட்டில்களை சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் நடந்த முயற்சியில், 70 சதவீதம் பாட்டில்கள் திரும்பி வந்த போதும், 30 சதவீத பாட்டில்கள் வரவில்லை. அதாவது, டாஸ்மாக் மதுபானம் வாங்குபவர்கள், அந்த மதுபானத்திற்கான விலையை விட ரூ.10 அதிகம் கொடுத்துத்தான் வாங்குகிறார்கள். அவர்கள் பாட்டிலைத் திரும்பத் தராத நிலையில், 30 சதவீத பாட்டில்களுக்கு செலுத்தப்பட்ட ரூ.10 முன்பணம் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்று சேர்ந்துள்ளது.
அந்த தொகை சுமார் மூன்று கோடியை எட்டியது. இந்த பணத்தைக் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் வெளிப்படுத்திய தயக்கத்தை அடுத்து, நீலகிரி மாவட்டத்தில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, தமிழகத்தின் மேலும் இரண்டு மாவட்டங்களில் சோதனை முயற்சியை மேற்கொள்ள நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சிறிய மாவட்டமான பெரம்பலூர் மற்றும் பெரிய மாவட்டமான கோவை என்ற இரண்டு இடங்களில் சோதனை முயற்சியை நவம்பர் 15ஆம் தேதி தொடங்கவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதன் செயல்பாடு குறித்த அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
டாஸ்மாக் நிர்வாகத்தின் எதிர்ப்புக்கு காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பாட்டில்களை திரும்பப்பெறுவதை அமல்படுத்துவதற்கு முன்னதாக, டாஸ்மாக் நிர்வாகம் தாமாக முன்வந்து, நீலகிரி மாவட்டத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக வனப்பகுதிகளில் கிடந்த பாட்டில்களை சேகரித்ததாக தெரிவித்தது. அதில் சுமார் ஏழு லட்ச ரூபாய் வரை செலவிட்டு 33 டன் பாட்டில்களை சேகரித்ததாக கூறியது. பின்னர் பாட்டில்களை திரும்பப்பெறும் முயற்சியில் இறங்கியபோது, பலவிதமான சிக்கல்களை சந்தித்ததாகக் கூறுகிறது.
டாஸ்மாக் ஊழியர்களின் பிரதான வேலை என்பது, மது விற்பனை, டாஸ்மாக் டிப்போவில் இருந்து கடைகளுக்கு வரும் பாட்டில்களை இறக்குவது, சோதனைக்கு பிறகு, கடைகளில் சேமித்துவைத்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதுதான். தற்போது, பயன்படுத்திய பாட்டில்களை மீண்டும் வாடிக்கையாளர்களிடம் பெற்று, அதனை அடுக்கி, கணக்கு பார்த்து, சேமித்து வைப்பது கூடுதல் பணிசுமையாக இருப்பதாக டாஸ்மாக் கருதுகிறது.
மேலும், ஒரு சில வாடிக்கையாளர்கள் பாட்டில்களை எச்சிலோடு கொடுப்பதால், சுகாதார சீர்கேட்டுக்கு ஆளாவதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை பாட்டில்கள் உடைந்தால், அதற்கான பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள்தான் தரவேண்டிய பொறுப்பு உள்ளதால், பணிச்சுமையுடன், பொருளாதார சிக்கல்களையும் சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், டாஸ்மாக் இடநெருக்கடி காரணமாக, திரும்பப் பெறும் பாட்டில்களை சேமித்து வைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், அதிக வாடிக்கையாளர்கள் வரும் சமயத்தில், பாட்டில்களை திரும்ப பெறுவதில் கவனம் செலுத்துவதில் சிரமம் இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவிப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறுகிறது.
டாஸ்மாக் கடைகளில், பார் வசதியடன் நடத்தப்படும் கடைகளில் பாட்டில்களை சேகரித்து டெண்டர் விடப்படுவது டாஸ்மாக் ஒப்பந்தத்தில் ஒரு அம்சம் ஆகும். அதனை நிறுத்துவது என்பது சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் பார், உரிமம் பெற்ற ஓட்டல்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டவற்றில் இருந்து பாட்டில்களை சேகரிப்பதை பலர் தொழிலாக கொண்டுள்ளனர். அவர்களில் சுமார் 600 பேர் ஒரு சங்கத்தை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் 10,000 நபர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் மறுசுழற்சிக்கு பாட்டில்களை சேகரித்து தருவதை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதாகவும் டாஸ்மாக் கூறுகிறது. அதனால் இவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குரியதாகும் என்பது டாஸ்மாக்கின் வாதம்.
டாஸ்மாக் பாட்டில்களை ஏன் திரும்ப பெறவேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
வனப்பகுதிகளில் வீசப்படும் பாட்டில்கள், யானை உள்ளிட்ட விலங்குகளின் கால்களில் காயங்களை ஏற்படுத்தி, சில நேரம் அவை இறப்பதற்கும் வாய்ப்பாக அமைகிறது என்பதை முன்னிறுத்தி சுற்றுசூழல் ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். விலங்குகள் பாதிக்கப்படுவதை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள், அதோடு, வயல்வெளிகள், நீர்நிலைகள், மழைநீர் வடிகால் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்குள் வீசப்படும் பாட்டில்கள் சுற்றுசூழலை மாசுபடுத்துவது பற்றியும், உடைந்த பாட்டில்களை கைகளால் எடுக்கும் நபர்கள் காயங்களுக்கு ஆளாவதை சுட்டிக்காட்டினர். அதனால், பாட்டில்களை திரும்பப்பெறுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும், மேலும், கண்ணாடி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதால், புதிய பாட்டில்களை உருவாக்கும் தேவை குறையும் என்றும் சுற்றுச்சூழலுக்கு அது உதவும் என்றும் கூறுகின்றனர். புதிய கண்ணாடி பாட்டில்களை உருவாக்குவது தடைபடுவதால், அந்த பாட்டில்களின் தயாரிப்புக்காக செலவாகும் தண்ணீர், கனிமங்கள், உருவாக்கும்போது செலவிடப்படும் மின்சாரம் என பல வளங்கள் மிச்சமாகி, பலவகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும் என்கிறார்கள்.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மதுபான பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறை இல்லை என்கிறது டாஸ்மாக் நிர்வாகம். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இந்த திட்டத்தில் தமிழகம் முன்னோடியாக இருப்பது சிறந்தது என்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவில் வெர்மான்ட் பகுதியில், கண்ணாடி பாட்டில்களை திரும்ப செலுத்துவதற்கு மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் திரும்ப தருபவர்களுக்கு 15 சென்ட் வரை பணம் கொடுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் யோசனை
சுற்றுசூழல் செயற்பாட்டாளர் அருள்செல்வம், மக்காத பிளாஸ்டிக் கவர் மற்றும் பாட்டில்களை மறுசுழற்சி செய்வதற்கு பல யோசனைகளை முன்வைக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். கண்ணாடி பாட்டில்களை மறுபயன்பாடு செய்வதில் அந்த அளவு சிக்கல்கள் இருக்காது. பாட்டில்களை பொறுத்தவரை அவற்றின் உறுதிதன்மையை பொறுத்து பலமுறை அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால், பாட்டில்களை ,அதுவும் அரசு மதுபான பாட்டில்களை மறுபயன்பாட்டுக்கு கொண்டுசெல்வது சரியான முடிவாக அமையும்,'என்கிறார்.
மேலும், கண்ணாடி பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதால், புதிய பாட்டில்களை உருவாக்கும் தேவை குறையும் என்றும் சுற்றுச்சூழலுக்கு அது உதவும் என்றும் கூறுகின்றனர். ''புதிய கண்ணாடி பாட்டில்களை உருவாக்குவது தடைபடுவதால், அந்த பாட்டில்களின் தயாரிப்புக்காக செலவாகும் தண்ணீர், கனிமங்கள், உருவாக்கும்போது செலவிடப்படும் மின்சாரம் என பலவகையில் சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்படும். கண்ணாடி பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தி விட்டு தூக்கிஎரிவதால், குப்பைகிடங்குகளில் மேலும் குப்பை சேரும். புதிய பாட்டில்களை உருவாக்கும் தேவையும் சந்தையில் நிலவும். சுமார் 10 லட்சம் பாட்டில்களை அரசு மறுபயன்பாடு செய்தால், அந்த 10 பாட்டில்களை புதிதாக உருவாக்கும் தேவை குறையும்,'' என்கிறார் அருள்செல்வம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













