You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு எச்சரிக்கை - "இது தமிழ்நாடு, உங்க அரசியல் எடுபடாது"
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதே விவகாரத்தில் பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக அமைச்சர் துரைமுருகன்.
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தொண்டர்களுக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அரசு மிகவும் கவனமாக இந்த விவகாரத்தை கவனத்துடன் வருகிறது. மதுரையில் அமைச்சரின் கார் மீது காலணி வீசியும் தேசிய கொடியை அவமதித்தோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கையின் முழு விவரம்:
இந்திய ஒன்றியத்தின் 76-ஆவது விடுதலைநாள் விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டுக் கொடியை உயர்த்துகிறேன்.
மாநில முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்திய ஒன்றியமும் அதில் இணைந்துள்ள தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75ஆம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது.
இறையாண்மைமிக்க ஒன்றிய அரசு - இறையாண்மை மிக்க மாநில அரசுகள் என்கிற அரசியல் சட்டத்தின் வழியே கூட்டாட்சிக் கருத்தியலை முன்னெடுக்கின்ற நிலையில், இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் 'தேசபக்திக்கு' ஒட்டுமொத்த குத்தகைகாரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.
விளம்பரம் தேடும் பாஜக
இந்திய இராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீரமரணம் அடைந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீரர் இலட்சுமணன் அவர்களின் மறைவுக்கு, முதலமைச்சர் என்ற முறையில் என்னுடைய இரங்கலைத் தெரிவித்ததுடன், இராணுவ வீரரின் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் அவர்களைப் பணித்திருந்தேன். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், அந்த வீரமகனை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர் இலட்சுமணனின் உடலுக்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார்.
அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும் அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும் அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.
வீரமரணம் எய்திய இராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும். விடுதலையின் 75-ஆவது ஆண்டினை வெறும் அரசியலுக்காகப் பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் இராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் இலாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, சட்டம் - ஒழுங்கைச் சீர்குலைக்க முயன்று, தேசியக் கொடியை அவமதித்துள்ளனர்.
கண்ணியத்துடன் நடந்த பிடிஆர்
இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், "இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்" எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரான பி.டி.ராசன் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பண்பாளர் பி.டி.ஆர். பழனிவேல்ராசன் அவர்களின் புதல்வருமான மாண்புமிகு அமைச்சர் பழனிவேல் தியாகராசன் அவர்கள் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத் தெரிவித்து, மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய 'சிந்த்ரெல்லா' வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
அமைச்சர் அவர்களின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, கழகச் செயல்வீரர்களும் பல்வேறு அணிகளைச் சார்ந்தவர்களும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் உணர்வெழுச்சியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், "மதவெறி அரசியலின் மலிவான விளம்பரத்திற்குப் பதிலடி என்ற வகையில் நாமும் அதற்கு இடம் அளித்துவிடக்கூடாது" என்ற தி.மு.கழக பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் விடுத்த அறிக்கையை ஏற்று, அமைதி காத்து வருகிறார்கள்.
மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது. இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.
இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட தலைவராக இருந்த சரவணன், பிடிரை சனிக்கிழமை இரவே சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். அவரை பாஜக தமிழக மேலிடம் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன?
அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன், பாஜகவினர் அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகின்றனர் என தெரிவித்துள்ளார். அதன் விவரம்:
"நாட்டிற்காக உயிர்நீத்த ஓர் இராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்துவதிலும் இதுபோன்று அரசியல் ஆதாயம் தேடும் அநாகரிகச் செயலில் ஈடுபட்டு, அராஜகத்தை பா.ஜ.க.வினர் கையிலெடுத்திருப்பது கேவலமான அரசியல். அது ஒருவழிப் பாதையல்ல என்பதை பா.ஜ.க.வினர் உணர வேண்டும் என எச்சரிக்கிறேன்.,"
ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாமல், அராஜகத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று தமிழ்நாட்டில் பா.ஜ.க.வினர் கனவு காண வேண்டாம் என தெரிவித்த அவர்,
"இராணுவ வீரரின் உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை செலுத்தச் சென்ற மாண்புமிகு அமைச்சரின் காரின் மீது தாக்குதல் நடத்தி - உயிரிழந்த இராணுவ வீரரின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் பா.ஜ.க.விற்கு நாட்டுப்பற்று பற்றிப் பேசத் துளியும் அருகதை இல்லை என்பதோடு, இச்சம்பவத்தின் வாயிலாக அந்தக் கட்சியின் "நாட்டுப்பற்று" சாயம் வெளுத்துப் போயிருக்கிறது." என்று தெரிவித்தார்.
"ஊரெல்லாம் தேசியக் கொடி ஏற்ற வேண்டிய நேரத்தில், தேசியக் கொடி பறந்த காரில் செருப்பு வீசியதன் மூலமாக பா.ஜ.க.வின் கீழ்த்தர அரசியலைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்." என்றும் அமைச்சர் துரைமுருகனின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் திமுக வினர் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிடிஆர் பகிர்ந்த ட்வீட்டுகள்
இந்த நிலையில், மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக இரு ட்வீட்டுகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்றில் ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் தொடர்பான சில படங்கள் இணைக்கப்பட்டிருந்தன.
அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்த வந்தபோது, அவரை மையப்படுத்தி செல்பேசி மூலம் படம்பிடித்தவர்களை வட்டக்குறி போட்டுக் காட்டி, இவர்கள் குறி வைக்கும் நபரை கண்டுபிடியுங்கள் என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில் தமது வாகனம் மீது பாஜகவினர் காலணி வீசியபோது, அதில் ஒன்று காரின் முன்பக்க கண்ணாடியில் விழுந்திருந்தது. அதை படம் பிடித்து, நூற்றுக்கணக்கான மீட்டர் தூரத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் அனுமதிக்கப்பட்ட பழைய விமான நிலைய முனையத்துக்குள் அனுமதிக்கப்பட்ட ஒரு சில கட்சி உறுப்பினர்களில் ஒருவரான சிண்ட்ரெல்லாவுக்கு தனது காலணி வேண்டும் என்று விரும்பினால் அதை எனது ஊழியர்கள் உங்களுக்காக பத்திரப்படுத்தி வைத்துள்ளார்கள் என்று கூறி அதன் படத்தை பகிர்ந்துள்ளார்.
இரவில் நடந்த சந்திப்பு:
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாநில நிதி அமைச்சருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேற்று (ஆகஸ்ட் 13) இரவு சந்தித்து பேசினார் மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன்.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாஜகவில் இருக்கும் மத, வெறுப்பு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என்பதால் இனி அக்கட்சியில் தொடரப்போவதில்லை. நாளை பதவி விலகல் கடிதம் அளிக்கப்போகிறேன்" என்று தெரிவித்தார். அத்துடன், திமுகவில் இணைவீர்களா என்று கேட்டதற்கு, "சேர்ந்தாலும் தவறென்ன? அது என் தாய் வீடுதானே" என்ற தொனியில் பதிலளித்தார்.
இந்த நிலையில்தான், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சரவணனை கட்சியிலிருந்து நீக்குவதாக இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு சரவணன் அளித்த பேட்டியில், " என்னை நீக்கியதற்கு நன்றி. நான் என் மருத்துவர் பணியை இனி தொடர்வேன்" என்று தெரிவித்தார்.மேலும், "என் உடலில் திராவிட ரத்தம்தான் ஓடுகிறது" என்றும் அவர் பேசியுள்ளார்.
பின்னணி என்ன?
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் லட்சுமணன் ஜம்மு காஷ்மீரின் ரஜெளரியில் தீவிரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான திருமங்கலம் அருகே உள்ள டி. புதுப்பட்டிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது.
அப்போது அங்கு அஞ்சலி செலுத்துவதற்காக மதுரையில் இருந்த தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுக நிர்வாகிகள் சிலருடன் வந்திருந்தார். மறுபுறம் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை மற்றும் அவரது கட்சியினரும் வந்திருந்தனர்.
விமான நிலைய வளாகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், நகர மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், மதுரை காவல் ஆணையர் செந்தில் குமார் உள்ளிட்டோரும் விமான நிலையத்துக்கு வந்து லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக, அரசு தரப்பில் சம்பிரதாய முறைப்படி லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் நடைமுறை நடைபெற்றது. அதில் பாஜக நிர்வாகிகளும் மலர்வளையம் வைக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
பாஜகவினர் வாக்குவாதம்
ஆனால், அரசாங்க நிகழ்வு என்பதால் சம்பிரதாய நடைமுறை பட்டியலில் (ப்ரோட்டோகால் லிஸ்ட்) இடம்பெற்ற மிக முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் மட்டுமே முதலில் அனுமதிக்கப்படுவர் என்று அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனும் இதே கருத்தை கூறியது அங்கிருந்த பாஜகவினர் காதில் விழுந்ததாகவும் அதைத்தொடர்ந்து அவர்கள் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களுடன் பேசுவதற்காகச் சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை திமுகவினர் சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அமைச்சரின் கார் வெளியேவந்தபோது, சாலையில் இருந்த சில பாஜகவினர் அமைச்சருக்கு எதிராக குரல் எழுப்பினர். அதில் இருந்த சிலர் அமைச்சரின் வாகனம் மீது காலணிகளை வீசினர். அவரது காரை வழிமறிக்க முயன்ற சிலரை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
'நாளை பேசலாம்'
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர், "தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு ஆளாகி இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரரின் உடல் எப்போது மாநிலத்துக்கு வரும் என்பதை தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தினமும் தென் பிராந்திய ராணுவ தளபதியோடு பல முறை தொடர்பில் இருந்து கேட்ட பிறகு இங்கு வந்து மரியாதை செய்தோம். வந்த இடத்தில் பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் செய்த சாக்கடை அரசியல்வாதிகள் பற்றி எல்லாம் பேச இது சரியான இடமில்லை. யார் பிணத்தை வைத்து அரசியல் செய்தார்கள் என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். மற்றவை நாளை பேசப்படும்," என்று பதிலளித்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார் டாக்டர் சரவணன்.
பாஜகவில் சேருவதற்கு முன்னர் திமுகவின் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவாக இருந்த டாக்டர் சரவணன், 2021ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்