சென்னையில் பிரதமர் மோதி: முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள்

ஸ்டாலின்

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தற்போது நடைபெற்று வரும் விழாவில் பிரதமர் மோதி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக தலைவர்கள், தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியபோது பிரதமரிடம் நான்கு கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஸ்டாலின் உரை

தமிழகம் பல்வேறு துறைகளில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, திறன்மிகு மனித ஆற்றல் என பல்வேறு வகைகளில் தமிழ்நாடு மகத்தான வளர்ச்சியை அளித்து வருகிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை காட்டிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமானது.

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சி பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக உள்ளது.

நமது நாட்டின் வளர்ச்சியிலும் ஒன்றிய அரசின் நிதி ஆதாரங்களிலும் தமிழ்நாடு முக்கிய பங்களிப்பை தருகிறது என இந்திய பிரதமருக்கு தெரியும்.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடு.

ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 8.4 விழுக்காடு. ஜவுளித்துறை ஏற்றுமதியில் 19.4 விழுக்காடு. தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 33 விழுக்காடு.

ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்

  • தமிழகத்தின் கடலோர மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும்.
  • 15.5.2022 தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவை தொகை 16 ஆயிரத்து 6 கோடி ரூபாய். இத்தொகையை விரைந்து வழங்க வேண்டும்
  • பழமையான தமிழ் மொழியை இந்திக்கு நிகரான அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும்
  • நீட் விலக்கிற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

மோதியின் உரை

மோடி

பட மூலாதாரம், Getty Images

வணக்கம் என்று சொல்லி தனது உரையை தொடங்கினார் மோதி.

மீண்டும் தமிழ் நாட்டிற்கு வருவது என்பது எப்போதுமே அருமையாக இருக்கும் ஒன்று. இது மிகவும் சிறப்பான ஒரு பூமி. இந்த மாநிலத்தின் மக்கள், கலாசாரம், மொழி என அனைத்தும் சிறப்பானவை.

பாரதியார் அவர்கள் செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என மிக அழகாக பாடியுள்ளார்.

நண்பர்களே ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாட்டை சேர்ந்த யாராவது ஒருவர் தலைசிறந்து விளங்குகிறார்.

அண்மையில் காது கேளாதோருக்கான ஒலிம்பிக்ஸ் குழுவினருக்கு என் இல்லத்தில் வரவேற்பு அளித்தேன். தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாசாரம் உலகம் முழுவதும் பரந்துள்ளது. சென்னை முதல் கனடா வரை, மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை, சேலம் முதல் தென் ஆப்ரிக்கா வரை பொங்கல் மற்றும் புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டின் வளர்ச்சி பயணத்தில் மேலும் ஒரு சிறப்பான அத்தியாயத்தை கொண்டாட நாம் அனைவரும் இங்கே கூடியிருக்கின்றோம். 31 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே ஒன்று தொடங்கி வைக்கப்பட இருக்கின்றன அல்லது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றன.

ஐந்து ரயில் நிலையங்கள் சீரமைக்கப்படுவது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கலும் மேம்பாடும் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் இது உள்ளூர் கலை, கலாசாரத்துக்கு ஏற்படையதாகவும் இருக்கும்.

மதுரைக்கும் தேனிக்கும் இடையேயான பாதை மாற்றம் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும்.

திருவள்ளூர் முதல் பெங்களூர் வரை, எண்ணூர் முதல் செங்கல்பட்டு வரையுமான இயற்கை எரிவாயு குழாய் தொடக்கம் காரணமாக தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநில மக்களுக்கு இயற்கை எரிவாயு கிடைப்பது எளிதாக இருக்கும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், சென்னை துறைமுகத்தை பொருளாதார வளர்ச்சியின் மையமாக்கும் தொலைநோக்கு பார்வையோடும், சென்னையில் ஒரு பல்நோக்கு ஏற்பாட்டியல் பூங்காவிற்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டிருக்கிறது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்த நாடுகள் எல்லாம் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பதை வரலாறு நமக்கு கற்பிக்கிறது.

தலைசிறந்த தரமும் நீடித்த தன்மையும் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. நான் உள்கட்டமைப்பு பற்றி பேசும்போது சமூக மற்றும் புற கட்டமைப்பு பற்றியே குறிப்பிடுகின்றேன்.

தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்படுகிறது. செம்மொழி தமிழாய்வு மையத்திற்கு புதிய வளாகம் ஒன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்திற்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது.

பனாரஸ் பல்கலைக்கழத்தில் தமிழ் படிப்பிற்காக சுப்ரமணிய பாரதி பெயரில் ஒரு இருக்கை அண்மையில் அறிவிக்கப்பட்டது என மோதி உரையாற்றினார்.

மேலும் அவர் தனது உரையில் இலங்கை குறித்தும் குறிப்பிட்டார்.

"இலங்கை குறித்து நீங்கள் கவலை கொள்வீர்கள் என்று எனக்கு தெரியும். நட்பு ரீதியாகவும், அண்டை நாடு என்ற காரணத்தினாலும் இந்தியா, தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறது." என்று தெரிவித்தார் மோதி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: