ஜவுளித்துறையில் தொடரும் நெருக்கடிகளுக்கு காரணம் என்ன?

ஜவுளித்துறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

இந்திய ஜவுளித்துறை மூலப் பொருள் விலையேற்றம் போன்ற காரணங்களினால் கடந்த 18 மாதங்களாக கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.

இந்தியா பருத்தி உபரியாக உள்ள நாடு. இந்தியாவில் நுகர்வை விட பருத்தி உற்பத்தியின் அளவு அதிகமாக உள்ளது என மத்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவில் 58 லட்சம் விவசாயிகள் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளித் துறையில் கிட்டத்தட்ட 4.5 கோடி மக்கள் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தியாவின் ஏற்றுமதியில் ஜவுளித்துறையின் பங்கு 11% ஆக உள்ளது.

சர்வதேச அளவில் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. 2017-ம் ஆண்டு சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் பருத்தியின் விலை வரலாற்றில் இல்லாத உச்சத்தை எட்டியது. 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு கிலோ பருத்தி ரூ.125 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ.280 ஆக உயர்ந்தது.

இதனால் பருத்தி விலையை கட்டுக்குள் கொண்டு வரவும், தட்டுப்பாட்டை போக்கவும் பருத்தி இறக்குமதி மீது மத்திய அரசு விதிக்கும் வரியை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13-ம் தேதி பருத்தி மீதான இறக்குமதி வரியை வருகிற செப்டம்பர் மாதம் வரை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் பருத்தி விலை குறைந்து அதன் விளைவாக நூல் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்மறையாக தற்போது அனைத்து வகை நூல்களும் கிலோவுக்கு ரூ.40 உயர்த்தப்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி வருகிற மே 16,17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் ஜவுளித்துறையினர் அறிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தான் ஜவுளி உற்பத்தியாளர்கள் உரிய விலை தருவதில்லை என விசைத்தறி உரிமையாளர்கள் 45 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வெள்ளை தங்கம்

ஜவுளித்துறையின் நெருக்கடி தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய திருப்பூர் பின்னலாடை தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்து ரத்தினம், `பருத்தியை `வெள்ளை தங்கம்` என்று அழைப்பார்கள். இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்து அதிக வேலைவாய்ப்பை வழங்குவது ஜவுளித்துறை. இந்தியாவில் பருத்தி உபரியாக இருப்பதாக அரசு சொல்கிறபோது தான் இத்தகைய தட்டுப்பாடும், வரலாறு காணாத விலையேற்றமும் நிலவுகிறது.

150% விலையேற்றம்

18 மாதங்களுக்கு முன்னர் 200 ரூபாய் இருந்த ஒரு கிலோ நூலின் விலை தற்போது 490 ரூபாயாக உள்ளது. கிட்டத்தட்ட 150% விலை உயர்ந்துள்ளது. இதனால் ஆயத்த ஆடைகளின் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால் காட்டன் ஆடைகளின் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. இதன் விளைவாக உற்பத்தியும் குறைந்துள்ளது. உற்பத்தியாளர்கள் பாலிஸ்டர் ஆடைகள் பக்கம் திரும்பி வருகின்றனர்.

ஜவுளித்துறை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் உற்பத்தியாகும் பருத்தியை ஐந்து பெரு நிறுவனங்கள் தான் அதிக அளவில் கொள்முதல் செய்கின்றன. அவர்கள் தான் இந்த செயற்கையான விலையேற்றத்திற்கு காரணம்.

ஏற்கனவே ஜவுளி நிறுவனங்களில் 50% உற்பத்தி தான் நடைபெற்று வருகிறது. தற்போதைய விலையேற்றத்தால் ஜவுளி உற்பத்தி மேலும் பாதிக்கும். இறக்குமதி வரியை ரத்து செய்தால் பருத்தி மற்றும் நூல் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தான் நூல் விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.`

இந்திய பருத்தி கழகம்

இந்திய பருத்தி கழகத்தின் பணி என்பது பருத்தியின் விலை அடிப்படை ஆதார விலையை (எம்.எஸ்.பி) விட குறையும்போது விவசாயிகளிடம் எம்.எஸ்.பி விலைக்கு கொள்முதல் செய்வது தான். ஆனால் இந்திய பருத்தி கழகமும் பருத்தியை கொள்முதல் செய்து பெரு நிறுவனங்களுக்கு தான் விற்பனை செய்கின்றன.

ஜவுளித்துறை

பட மூலாதாரம், Getty Images

இறக்குமதி செய்யப்படும் பருத்தியையும் இந்த பெரு நிறுவனங்களே கொள்முதல் செய்கின்றன. இதனால் இறக்குமதி வரியையும் ரத்து செய்தும் விலை குறையாமல் அதிகரித்துள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு பருத்தி அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. பருத்தி அத்தியாவசிய பட்டியலில் இருந்தவரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு பருத்தி கைவசம் இருப்பு உள்ளது என்பதை அரசிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால் அத்தியாவசிய பட்டியலில் இருந்து பருத்தியை நீக்கிய பிறகு பதுக்கல் அதிகரித்துவிட்டது.` என்றார்.

கோரிக்கைகள் என்னென்ன?

இதனால் தற்போதைய அசாத்திய சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர ஜவுளி தொழில் அமைப்புகள் மத்திய அரசிடம், `பருத்தி மற்றும் நூலை மீண்டும் அத்தியாவசிய பட்டியலில் சேர்க்க வேண்டும். பஞ்சு, நூல் போன்ற முக்கிய மூலப் பொருட்களை உள்நாட்டு தேவைக்கு போக மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்` என்கிற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்த கோரிக்களை வலியுறுத்தும் விதமாக வருகிற மே 16 முதல் மே 21 வரை திருப்பூர் மட்டுமில்லாது தமிழ்நாடு முழுவதும் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களை ஒருங்கிணைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் முத்துரத்தினம்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சைமா அமைப்பின் தலைவர் ரவிசாம், `பருத்தி ஒரு கேண்டி (356 கிலோ) தற்போது ரூ.1,05,000 ஆக உள்ளது. கடந்த மாதத்தை விட 10,000 ரூபாய் அதிகமாகியுள்ளது. அதனால் தான் நூல் விலை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இறக்குமதி வரியை ரத்து செய்தாலும் இறக்குமதி செய்யப்படும் பருத்தி சந்தைக்கு வருவதற்கு இரண்டு, மூன்று மாதங்கள் ஆகிவிடும். அப்போது தான் அதன் தாக்கம் தெரியவரும்.

பருத்தி உற்பத்தி, இருப்பு தொடர்பான ஆதாரப்பூர்வமான தரவுகள் இல்லை. அதனால் தான் இத்தகைய ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. மத்திய அரசு தரவுகளை தெளிவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2007-ம் ஆண்டு பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டாம் என்று தான் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்போது மத்திய அரசு அதற்கு மாறாக முடிவு எடுத்தது. தற்போது மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்கிற கோரிக்கை சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.` என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா, `நூற்பாலைகளிடம் தற்போது ஒரு மாதத்திற்கும் குறைவான பருத்தி தான் கையிருப்பு உள்ளது. இறக்குமதி செய்யப்படும் பருத்தியும் வந்து சேர மூன்று மாதங்கள் ஆகிவிடும். அதற்குள்ளாக விலை கட்டுக்குள் வரும் என்கிற நம்பிக்கை உள்ளது.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா
படக்குறிப்பு, தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஷ் சந்திரா

பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது இருமுனை கொண்ட கத்தி போன்றது. அதனால் பாதகமான விளைவுகளும் ஏற்படும். பருத்தி வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தால் தான் விலை நிர்ணயத்தில் இத்தகைய குளறுபடிகள் நிலவுகின்றன.

நூல் விலை உயர்வு ஜவுளி உற்பத்தியாளர்களை பாதித்துள்ளதை உணர்கிறோம். தற்போதைய அசாத்திய சூழ்நிலையை அனைத்து தரப்பும் இணைந்து கவனமாக கையாள வேண்டும். நூற்பாலைகள் தற்போதைய நிலவரத்தை கூர்ந்து கவனித்து வருகின்றன. பொறுத்திருந்து தான் எந்தவொரு முடிவும் எடுக்கப்படும்` என்றார்.

"மத்திய அரசே தீர்வு காண வேண்டும்"

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, 'தமிழக அரசு சார்பில் ஜவுளித்துறைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளோம்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு மத்திய அரசிடம் தான் உள்ளது. மத்திய தொழில்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்களைப் பார்த்து கடிதம் கொடுத்துள்ளோம். மத்திய அரசு விரைந்து இந்த சிக்கலை தீர்க்கும் என நம்புகிறோம். பருத்தி, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை.

தமிழ்நாட்டிற்கு தேவையான பெரும்பான்மையான பருத்தி குஜராத் போன்ற வட மாநிலங்களிலிருந்து தான் வருகிறது. இங்கே உற்பத்தி குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.15 கோடி வேளாண் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசே பருத்தியை கொள்முதல் செய்ய தமிழ்நாடு பருத்தி கழகம் அமைக்கும் திட்டமும் உள்ளது. ஆனால் உடனடியாக அனைத்தும் நடந்துவிடாது. அதற்கான காலம் தேவைப்படுகிறது. ஆனால் ஜவுளித்துறையை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது' என்றார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: