தமிழ்நாடு: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் ஏன்? அரசுப் பள்ளிகள் மேம்பாட்டில் இதன் செயல்பாடுகள் என்ன ?

பள்ளி மேலாண்மைக் குழு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பள்ளி வகுப்பறையில் குழந்தைகள்
    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், மாணவர் நலத் உதவித் திட்டங்கள், கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு முழுவதும் தற்போது அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டில் பெற்றோர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதை நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்.எம்.சி) மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன.

இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

நமக்கு நாமே திட்டம் போல்

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிடுகையில், ''இதுவும் நமக்கு நாமே திட்டம் போல்தான். மக்கள் பங்களிப்போடு அரசு பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்.

ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெற்றவையாக மாற்ற வேண்டும் என்பதே பள்ளி மேலாண்மைக் குழுக்களின் நோக்கம். இந்த குழு வலுப்படுத்தப்படும்,'' என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழுக்களில் சேர பெற்றோருக்கும் அழைப்பு விடுத்தார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 53,15,114 பெற்றோர்களிடம் தன் குரல் பதிவு மூலம் செல்போன் வழியாக அழைப்பு விடுத்தார். இதையடுத்து கடந்த மாதம் 20ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 37, 558 அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற கூட்டத்தில், 23 லட்சத்து 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றனர்.

பெற்றோர்கள் மட்டுமின்றி 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 1.8 லட்சம் 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்களும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர் என்கிறது பள்ளிக் கல்வித்துறை.

பள்ளிகளில் ஏற்கனவே பெற்றோர் ஆசிரியர் கழகம் என்கிற ஒன்று இருக்கின்ற போது, பள்ளி மேலாண்மை குழுக்கள் எதற்காக? அவற்றின் செயல்பாடுகள்தான் என்ன ? என்கிற கேள்வி எழலாம். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பள்ளி மேலாண்மைக் குழு ஏன் ?

பள்ளி மேலாண்மைக் குழு

பட மூலாதாரம், TN-DIPR

படக்குறிப்பு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் பெற்றோர்

கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி, 'அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி கிடைக்கும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தாலும் அவை பெரும்பாலும் செயல்பட்டில் இல்லை. ஆகையால் தற்போது மறுகட்டமைப்பு செய்கிறோம்' என்கிறார்கள் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள்.

  • இதன்படி, ஆறு முதல் 14 வயதிற்குட்பட்ட பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிந்து, வயதிற்கு ஏற்ற வகுப்புகளில் சேர்த்து, தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதிசெய்வது பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியப் பணியாகும்.
  • பள்ளியின் தரம், ஆசிரியர்களின் வருகை, கற்பித்தல், தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை பார்த்து, அறிந்து அவற்றை நிறைவேற்றும் பொறுப்பும் பங்களிப்பும் இந்த குழுவிற்கு உள்ளது.
  • பள்ளி நிர்வாகம் என்பது தலைமையாசிரியருக்கு மட்டும்தான் என்கிற நிலை இல்லாமல் பெற்றோர் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் பங்களிப்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

உள்ளூர் மக்களின் பங்களிப்பு

பள்ளி மேலாண்மைக் குழு

பட மூலாதாரம், TN School Education Dept.

படக்குறிப்பு, பள்ளி குழந்தைகள்
  • குறிப்பாக, அரசுப் பள்ளிகள் நிர்வாகத்தில் பள்ளிக் கல்வித்துறைக்கு முக்கியப் பங்கு இருந்தாலும், உள்ளூர் மக்கள் அந்தப் பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுக்கும் போது, அந்த பள்ளிகள் இன்னும் மேம்படும் வகையில் இந்த குழு செயல்படும்.
  • மேலும், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகை வன்முறைகளிலிருந்தும் பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையிலும் இது செயல்படும். பாதுகாப்பான குழந்தை நேயச்சூழலை பள்ளிகளிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் முயற்சியை பள்ளி மேலாண்மைக் குழு முன்னெடுக்கும்.
  • மாற்றுத்திறனாளிகள், குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் கல்வியைத் தொடரும் வகையிலான வசதிகளை பள்ளியில் செய்து தருதல்.
  • பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு, சீருடை, பாட நூல் உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாகவும் சரியாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதை கண்காணித்து, உறுதிப்படுத்தல்.

குழு உறுப்பினர்கள் விபரம்

பள்ளி மேலாண்மைக் குழு அந்த பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர் ஒருவர் தலைவராக இருப்பார். மாற்றுத்திறனாளி மாணவரின் பெற்றோர் துணைத்தலைவராக இருப்பார்.

இதில், பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சி பிரதிநிதிகள் என மொத்தம் 20 உறுப்பினர்கள் இருப்பார்கள். மொத்தமுள்ள உறுப்பினர்களில் 10க்கும் குறையாத எண்ணிக்கையில் பெண்கள் இருக்க வேண்டும்.

இந்த குழு உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது பள்ளிக்கு வருகை தந்து பார்வையிட வேண்டும். மாதம் ஒரு முறை சந்தித்து, ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். அந்த கூட்டத்தில் பள்ளியின் தற்போதைய நிலை, தேவையான வசதிகள் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

குழுவின் பதவிக் காலம்

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்ற வேண்டும். அவற்றை நடைமுறைப்படுத்த அரசு உதவி, தன்னார்வலர்களின் உதவி, தங்களின் பங்களிப்பு என முயற்சிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

பள்ளி மேலாண்மை குழுவின் கூட்ட நிகழ்வுகள், தீர்மானங்கள் குறித்து தனி பதிவேடுகளை பராமரிக்கப்பட வேண்டும். இரண்டு ஆண்களுக்கு ஒரு முறை குழு மாற்றியமைக்கபட வேண்டும். பள்ளியின் தலைமை ஆசிரியர் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.

அரசுப் பள்ளிகள் பெருமையின் அடையாளம்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

பட மூலாதாரம், Anbil Mahesh

படக்குறிப்பு, அரசுப் பள்ளி மாணவர்களோடு அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ''குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு பெற்றோர்கள் நின்று விடக்கூடாது. ஒவ்வொரு பள்ளியும் தன்னிறைவு பெறும் வகையில், தரமான கல்வி, உள் கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளில் பெற்றோர்களும் பங்கெடுக்க வேண்டும்.

ஆசிரியர்களோடு இணக்கமான உறவைத் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகளை பெருமையின் அடையாளங்களாக மாற்ற வேண்டும். அதற்கு பெற்றோர்கள் தங்களது பங்களிப்பை தரவேண்டும்'' என்றார்.

செயலி உருவாக்கம்

பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தை பள்ளி மேலாண்மைக் குழு செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தரமான கல்விக்கு திட்டமிடல், அதை செயல்படுத்துதல், செயல்பாட்டை மதிப்பீடு செய்தல் உள்ளிட்டவற்றிற்கு இச்செயலி மிகவும் உதவியாக இருக்கும். பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு உணர்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த கலைப் பயணங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் உறுப்பினர்கள் பொறுப்பேற்பு

பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, குழுவின் செயல்பாடு தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

காணொளிக் குறிப்பு, பொழுதுபோக்காகத் தொடங்கி வருவாய் ஆதாரமான மயில் பண்ணை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: