இலங்கை பொருளாதார நெருக்கடி, உணவுப் பஞ்சம்: நான்கு மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ள நிலையில், இன்று அதிகாலை நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இலங்கை தமிழர்கள் இறுதிகட்ட போரின்போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இதேபோல், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் உள்ளதால், இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என, சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு மன்னார் மாவட்டம் பேச்சாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் கப்பல் சென்றது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், இந்த ஆறு இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக, பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது மெரைன் போலீசார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காணொளிக் குறிப்பு, இலங்கையில் சமையல் எரிவாயு விலை மீண்டும் உயர்த்த முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: