காஷ்மீர் காவல்துறை வாகனம் மீது தீவிரவாத தாக்குதல், இருவர் உயிரிழப்பு

இந்திய ஆளுகையின் கீழ் உள்ள ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் ஜேவன் பகுதியில் தீவிரவாதிகள், காவல்துறை வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். திங்கள் இரவு இந்தத் தாக்குதல் நடந்தது.

காஷ்மீர் மண்டல காவல்துறை இந்த தீவிரவாத தாக்குதலை தமது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

முன்னதாக காவல்துறையை சேர்ந்த 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உதவுதல் அவற்றைத் தூண்டத்தலும் ஒரு தீவிரவாத நடவைக்கைதான் என்று எச்சரித்துள்ள காஷ்மீர் காவல்துறை, அவ்வாறு செய்வது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ளது.

இந்த தாக்குதல் குறித்த மேலதிக விவரங்களை கேட்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்த இரு காவல்துறையினரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தாக்குதலில் உயிரிழந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மனோஜ் சின்ஹா காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்களுக்கு தகுந்த சிகிச்சையளிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்த ஆரம்பக் கட்ட தகவலை வெளியிட்டிருந்த காவல்துறையினர், "தீவிரவாதிகள் ஸ்ரீநகரில் உள்ள பந்தா செளக்கில் உள்ள சேவான் பகுதிக்கு அருகே காவல்துறையினரின் வாகனம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்" என தெரிவித்திருந்தனர்.

அதன்பிறகு காயமடைந்தவர்களில் இருவர் உயிரிழந்துவிட்டதாக காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: