மற்றுமோர் அமைச்சர் மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை தன் வீட்டில் பணியமர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனை அமைச்சர் மறுத்திருக்கிறார்.

ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் ஊழல் செய்ததாக ட்விட்டரில் குற்றம்சாட்டியிருந்த மாநில பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை, தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அண்ணாமலை, ஆதிதிராவிடல் நல விடுதியில் உள்ள பணியாளர்களை அமைச்சர் பயன்டுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று தி.மு.கவின் போலி சமூக நீதியை பார்ப்போம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடினர் நலத்துறை அமைச்சரான திருமதி கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சமையல்காரர்களை, தன் வீட்டில் காலை 7 மணி முதல் பத்து மணிவரை பணியாற்றும்படி கூறியுள்ளார். இதற்காக ஒரு சார்ட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. வெட்கக்கேடு!" என்று கூறியிருக்கிறார்.

இந்தப் பதிவோடு ஒரு பட்டியலும் இணக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தமிழிலும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், "காற்றில் பறந்தது சமூகநீதி ! மக்கள் வரிப்பணத்தில் அநீதி ! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆதி திராவிடர் நல விடுதியில் உள்ள சமையல்காரர்களை, தன் வீட்டு வேலைக்காரர்களாக ஏன் பணியமர்த்த வேண்டும் ? ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களே?" எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள கயல்விழி செல்வராஜ், இந்தக் குற்றச்சாட்டை மறுத்து பதிவிட்டுள்ளார்.

டிவிட்டரில் கயல்விழி:

"திரு.அண்ணாமலை அவர்கள்,எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலற்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார்.எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலற்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன்.அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை."

"திரு.அண்ணாமலை அவர்கள், எங்கள் வீட்டு சமையலுக்கு நான் எங்கள் துறை விடுதியின் சமையலர்களை பயன்படுத்தி வருவதாக அபாண்டமாக பொய் சொல்லியுள்ளார். எங்கள் வீட்டு சமையலுக்கு இரு சமையலர்களை சம்பளத்திற்கு பணியில் அமர்த்தியுள்ளேன். அவர் வெளியிட்டிருக்கும் பட்டியலுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை." என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை, ஏற்கனவே தமிழ்நாடு மின்வாரியத்தில் ஊழல் நடப்பதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் குற்றம்சாட்டியிருந்தார். இதனை செந்தில் பாலாஜி மறுத்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :