சமந்தா விவாகரத்து: 'நாக சைதன்யாவும் நானும் இனி கணவன் - மனைவி இல்லை'

நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் அக்கினேனி நாக சைதன்யா ஆகிய இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

சமந்தா- நாக சைதன்யா விவாவகரத்து செய்திகள் வெளிவரத் தொடங்கிய போது, இது குறித்து இருவருமே எதுவும் சொல்லவில்லை. வதந்தி என மட்டுமே இதற்கான பதிலாக சமூக வலைத்தளங்களிலும், சமீபத்திய சில பேட்டிகளிலும் தெரிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில், இன்னும் சில நாள்களில் (அக்டோபர் 6) இருவருக்கும் நான்காவது திருமண நாள் வரவிருக்கும் நிலையில், தற்போது இருவருமே தத்தமது சமூக வலைத்தளங்களில் "பல உரையாடல்கள் மற்று யோசனைகளுக்கு பிறகு நானும் சாய்யும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்," என்று பதிவிட்டுள்ளனர்.

"பத்து வருடங்களுக்கும் மேல் எங்களுக்குள் அழகான நட்பு இருக்கிறதும் அதுவே எங்கள் உறவின் ஆதாரம். அந்த நட்பு இனியும் எங்களுக்குள் இருக்கும். எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பளித்து, இந்த கடினமான சமயத்தில் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றி," என இருவரும் ஒரே சமயத்தில் இதனை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் தெரிவித்துள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும் நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவுக்கும் 2017ல் காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் படங்களில் நடித்து வந்தனர். 'பாணா காத்தாடி' திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமான சமந்தா 'நீ தானே என் பொன்வசந்தம்', 'மெர்சல்', 'சூப்பர் டீலக்ஸ்' 'தெறி' உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் சமந்தாவின் அறிமுகப் படமே 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் ரீமேக்தான். அந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதன் பிறகு சில படங்களில் ஒன்றாக நடித்தவர்களின் நட்பு காதல் ஆனது. 2017-ம் ஆண்டு இருவருக்கும் இந்து- கிறிஸ்தவ முறைகளின்படி கோவாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு படங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், உடற்பயிற்சி, தோட்டக்கலை, ஆடை வணிகம் என பல முகங்களோடு வலம் வந்தார் சமந்தா.

சமூக வலைத்தள பக்கங்களில் பெயரை மாற்றிய சமந்தா

இந்நிலையில், சமீபத்தில் அவரது சமூக வலைத்தள பக்கங்களில் 'சமந்தா அக்கினேனி' என வைத்திருந்த பெயரை 'S' என மாற்றினார். இதையடுத்து, சமந்தா- நாக சைதன்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு, இருவரும் பிரியப் போகிறார்கள், மண விலக்கு கோரி விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவரத் தொடங்கின.

சமீபத்தில் சமந்தா திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் சென்றபோது இந்த மணவிலக்கு செய்திகள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சமந்தா 'கோயிலுக்கு வந்த இடத்தில் இந்த கேள்வியா? புத்தி இருக்கா?' எனக் கோபமாகக் கேட்ட வீடியோ அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மேலும், 'ஃபேமிலிமேன்' தொடரில் சமந்தா நடித்ததுதான் பிரச்னைக்கு காரணம், இருவருக்குள்ளும் குழந்தை தொடர்பான பிரச்னை என பல காரணங்கள் சொல்லப்பட்டன. ஆனால், இவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :