கொரோனா வைரஸ்: பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: மாணவர்கள் பள்ளி செல்வதற்கான வழிமுறைகள் வெளியீடு

விருப்பத்தின்பேரில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டதையடுத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது.

இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

"மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற சுய விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்கு வர 21-ம் தேதி முதல் அனுமதியளிக்கப்படுகிறது. இதற்குப் பெற்றோர்களின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் அவசியம்."

ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் குறைந்தபட்சம் 6 அடி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது, எச்சில் துப்பாமல் இருப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

தொலைதூரக் கல்வி மற்றும் இணையவழிக் கல்வி முறையை தொடர்ந்து அனுமதித்து, மாணவர்களை ஊக்கப்படுத்துவதை பள்ளிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஆசிரியர்களின் ஆலோசனைகளைப் பெற 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர விரும்புவதை அனுமதிக்க வேண்டும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பள்ளிகள் செயல்படத் தொடங்குவதற்கு முன்பு வளாகம் முழுவதும் சுத்தப்படுத்த வேண்டும். குறிப்பாக தனிமை மையங்களாகப் பயன்படுத்தபட்ட பள்ளிகள் முறையாக சுத்தப்படுத்த வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஆசிரியர், மாணவர் உரையாடலை திறந்தவெளியில் நடத்தலாம்.

தினமலர்: சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றவர் திரும்பி வர முடியாததால் தற்கொலை

சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற வாலிபர், அங்கு வேலையிழந்து, சொந்த ஊருக்கு வர முடியாததால், தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பொன்னன்விடுதியை சேர்ந்தவர், சந்திரசேகரன், 30. இவர், உறவினர்களிடம் கடன் வாங்கி, கடந்த, 11 மாதங்களுக்கு முன், சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றார்.

கொரோனா தாக்கத்தால், அங்கு இவர் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டதால், கடந்த ஐந்து மாதமாக வேலையின்றி தவித்தார். உறவினர்களிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலையில், வேலை பார்த்த நிறுவனமும் மூடப்பட்டதால், சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது.

இதனால் மனமுடைந்த சந்திரசேகரன், கடந்த மூன்று நாட்களுக்கு முன், தங்கியிருந்த அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக, அவரது நண்பர்கள், சந்திர சேகரனின் தாய்க்கு தகவல் தெரிவித்தனர். அவரது உடலை, சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு, நிவாரண உதவி வழங்க வேண்டும் என, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தி இந்து: உத்தரப்பிரதேசத்தில் தலித் அடித்துக் கொலை?

உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரியில் தலித் ஒருவரை அடித்துக் கொன்றதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த தலித் ஆண், தனது 16 வயது மகளை விற்க முயற்சி செய்ததாக கூறி உள்ளூர் மக்கள் அவரை அடித்துள்ளனர். எனினும், இது கும்பல் கொலை கிடையாது என காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியது. தாக்கப்பட்ட அந்த ஆண், மாவட்ட மருத்துவமனையில் உயிரிழந்தார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: