பொறியியல் அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழ்நாடு அரசின் விளக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty images
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: அரியர் மாணவர்கள் தேர்ச்சி: தமிழக அரசு விளக்கம் என்ன?
பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க மறுத்து அகில் இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பி இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி
கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இதனால் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையிலும், உள் மதிப்பீடு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இந்த நிலையில் ‘அரியர்’ (தேர்ச்சி பெறாமல் பாக்கி வைத்திருக்கும் பாடங்கள்) வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதை பரிசீலித்த தமிழக அரசு, கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் அந்ததேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதாவது அரியர் வைத்திருக்கும் பாடங்களுக்கான தேர்வுக் கட்டணத்தை செலுத்தி இருந்தாலே அவர்கள் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம்.
இதனால் கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்திருந்த ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், இந்த அறிவிப்பை கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழக அரசின் அறிவிப்பால், அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்து வரும் மாணவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுப்பி இருக்கும் ஒரு தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதில், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு தேர்வு நடத்தித்தான் பட்டம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அரியர் தேர்வில் விலக்கு பெற்று மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, “மின்னஞ்சல் வாயிலாக இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியாது. அரசுதான் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவுசெய்யும்” என்று தெரிவித்தார்.
என்ஜினீயரிங் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்க மறுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா கூறியது பற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.
அதற்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-
அதுபோல் கடிதம் எதுவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுப்பவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழக வேந்தர்களில், இவர் ஒருவர் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.
கடந்த 31.8.2020 அன்று பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படிதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துவிட்டது. அப்படி இருக்கும்போது எப்படி மறுப்பு தெரிவித்து இருக்கும்? மின்னஞ்சலில் கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அதை அரசுக்கு அனுப்பவில்லை. அப்படி ஒரு கடிதமும் வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார் என விவரிக்கிறது தினத்தந்தியின் செய்தி.
இந்து தமிழ் திசை: ’கொரோனா இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை’

பட மூலாதாரம், Getty images
கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ்.
கடலூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் தலைமையிலும் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி முன்னிலையிலும் நேற்று (செப். 4) 108 ஆம்புலன்ஸ் சேவை வாகனம் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"மத்திய அரசின் ஐசிஎம்ஆர் இன்னும் கொரோனா தொற்றை தமிழகத்தில் சமூகப் பரவலாக அறிவிக்கவில்லை. அதனால் கொரோனா தொற்று தமிழகத்தில் இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை.
தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டாலும், பொதுமக்கள் முகக்கவசம், தனிமனித இடைவெளியைத் தொடர வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்றுப் பரிசோதனை முடிவுகள் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டத்திலும் அமல்படுத்தப்பட உள்ளது. இதனை அவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். எந்த இடத்திலும் கொரோனா மருந்து தட்டுப்பாடு கிடையாது. இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும் நிலையில் தமிழகத்தில் அதிகப்படியாக 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரியவருகின்றன.
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தமிழகத்திற்கு 300 தடுப்பூசி மருந்துகள் வர வைக்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்களில் ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்திலும், சென்னை அரசு மருத்துவமனையிலும் ஆரோக்கியமாக உள்ள தன்னார்வலர்களுக்குச் செலுத்திப் பரிசோதனை நடத்தப்படும்" .
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தினமணி: நீட் தேர்வு - மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு

பட மூலாதாரம், Getty images
நீட், ஜேஇஇ நுழைவுத்தேர்வுகளை ஒத்திவைக்க மறுத்து பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண், பி.ஆர்.கவாய், கிருஷ்ண முராரி ஆகியோரைக் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது என்று கடந்த மாதம் 17ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்ய மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுக்களை மிகவும் கவனமாக பரிசீலித்தோம்.
அதுதொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்தோம். முடிவில், அந்த மறு ஆய்வு மனுக்களில் உறுதியான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே அந்த மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்று அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்தனர் என்கிறது தினமணியின் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












